(2599)
பார்த்தோர் எதிரிதா நெண்ய்சே, படுதுயரம்
பேர்த்தோதப் பீடழிவாம் பேச்சில்லை,-ஆர்த்தோதம்
தம்மேனி தாள்தடவத் தாங்கிடந்து, தம்முடைய
செம்மேனிக் கண்வளர்வார் சீர்.
பதவுரை
|
நெஞ்சே |
– |
ஓ மனமே! |
|
ஓதம் |
– |
கடலானது |
|
ஆர்த்து |
– |
கோஷித்துக்கொண்டு |
|
தம்மேனி தாள் |
– |
தம்முடைய திருமேனியையும் திருவடியையும் |
|
தடவ |
– |
(அலையாகிற கையினாலே) தடவும்படியாக |
|
தாம் கிடந்து |
– |
(அக்கடலில்) பள்ளி கொண்டருளி |
|
தம்முடைய செம்மேனி கண் வளர் வார் |
– |
தம்முடைய செந்நிறமான திருக்கண்கள் வளரப்பெறுகின்றவரான பெருமாளுடைய |
|
சீர் |
– |
திருக்குணங்களை, |
|
படு துயரம் பேர்த்து ஓத |
– |
கொடிய துக்கங்கள் தீரும்படி நாம் பேசுவதனால் |
|
பீடு அழிவு ஆம் பேச்சு இல்லை |
– |
அவனுடைய பெருமைக்கு அழிவு உண்டாய்விடுமென்பதில்லை; |
|
எதிரிதா பார்த்து ஓர் |
– |
(இவ்விஷயத்தை) கண்ணெதிரே நிற்பதாகக் கண்டு தெரிந்துகொள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பார்த்தோரெதிரிதா.) கீழ்ப்பாட்டுக்கு எதிர்த்தடையாயிருக்கும் இப்பாட்டு; ‘ஹேயரான நாம் பகவானை அநுபவிக்கப் பார்ப்பது பொல்லாங்கு’ என்றார் கீழ்ப்பாட்டில்; இப்பாட்டிலோவென்னில்; எம்பெருமானுடைய குணங்களைப் பேசுவதனால் நமது பாவங்களெல்லாம் தொலையுமாகையால் அது செய்யலாம்; அவனுடைய பெருமைக்கு யாதொரு குறையும் விளையமாட்டாது என்கிறார்.
ஓதம் ஆர்த்து தம்மேனி தாள் தடவத் தாம் கிடந்து தம்முடைய செம்மேனிக் கண் வளர்வார் சீரை நெஞ்சே! எதிரிதாப்பார்த்து ஓர்; படுதுயரம் பேர்த்து ஒதப்பீடு அழிவாம் பேச்சு இல்லை என்றும் அந்வயம். கடலானது ஆரவாரஞ் செய்துகொண்டு (தனது அலைகளாகிற கைகளாலே) திருவடிகளைத் தடவப்பெற்று இனிதாகத் திருக்கண் வளர்ந்தருளாநின்ற பெருமானுடைய திருக்கல்யானகுணங்களை நெஞ்சே! நம் கண்முன்னே நிற்பவனாகக்கொண்டு அநுஸந்தானம் செய்; கங்கையில் நாய் நீராடினால் நாயின் பாவங்கள் தொலையுமேயன்றி, கங்கைக்கு உள்ள பெருமை குறைந்து விடாது; அதுபோல, எம்பெருமானுடைய குணங்களை நாம் பேச, நமது பாவங்கள் தொலையுமேயன்றி, அவனுடைய பெருமைக்குக் குறைவு நேரிடுமென்கிற பேச்சுக்கே இடமில்லைகாண்; திருப்பாற்கடலிலே சயனித்துக்கொண்டு 1. “உறங்குவான் போல் யோகு செய்த பெருமானை” (திருவாய்மொழி 5-4. 11) என்கிறபடியே நம்முயை ரக்ஷணத்தையே சிந்தித்துக் கொண்டிருக்கின்ற பெருமானுடைய குணங்களை நாம் பேசி நமது பாவங்களைப் பாற்றிக்கொள்ள வேண்டாவோ? அவனுடைய குணங்கள் நம்மால் மறக்க முடியுமோ? கண்ணெதிரே நிற்பனபோல் தோன்றுகின்றனவன்றோ என்றாராயிற்று.
எதிரிதா = எதிரில் உள்ளது எதிரிது. ஆ – ஆக என்பதன் குறை; எதிரிதாக என்றபடி. படுதுயரம் பேர்த்து ஓத = ஸம்ஸாரத்திலே நாம் படுகிற துக்கங்களையெல்லாம் உதறிவிட்டு ஆநந்தமாக அக்குணங்களையே பேசுகிறபக்ஷத்தில் என்றும் பொருள் கொள்ளலாம்; ‘நமது துக்கங்கள் தீருவதற்காக’ என்று பொருள் கொள்ளில், போர்த்து என்பதை எச்சத்திரிபாகக் கொள்ள வேண்டும்; போ என்றபடி.
பீடு அழிவுஆம் பேச்சு இல்லை = பீடு என்ற பெருமைக்குப் பெயர்; உயர்ந்தோருடைய குணங்களைத் தாழ்ந்தோர் பேசினால் உயர்ந்தோருடைய உயர்த்திற்கு அழிவு உண்டாகுமோவென்று சங்கிக்கவேண்டிய பிரஸக்தியில்லையென்றபடி.
செம்மேனிக்கண் = மேனி என்று இங்கு நிறத்தைச் சொல்லுகிறது. செந்தாமரையின் நிறம்போன்ற நிறத்தையுடைய திருக்கண் என்றவாறு. நித்திரை செய்வதைக் கண்வளர்தலென்பர். சீர் என்னுஞ் சொல் பால்பகா அஃறிணைப்பெயராதலால் குணங்கள் என்று பன்மைப் பொருள்படும்; இரண்டாம் வேற்றுமைத்தொகையாதலால் குணங்களை என்க.
கீழ்ப்பாட்டில் ‘பகவதநுபவத்திற்கு நாம் அயோக்யர்’ என்று கருதி நெஞ்சைச் சீறி உரைத்தவர் இப்பாட்டில் “சீர் ஓதப்பீடழிவாம் பேச்சில்லை” என்று உரைத்தல் கூடுமோ? என்று சங்கிக்கவேண்டா; தம்முடைய தாழ்ச்சியை நோக்குமிடத்து அயோக்யதாநுஸந்தானம் பண்ணி அகலப் பார்ப்பதும், அவனுடைய விலக்ஷணமாய் போக்யமான திருக்குணங்களை நோக்குமிடத்து ‘நம் வாயாலும் இக்குணங்களைச் சிறிது பேசி ஆநந்திப்போம்’ என்று ஒருப்படுவதும் ஆக இவ்விரண்டும் மாறி மாறி வருமென்றும் இவை ஒன்றோடொன்று விருத்தமல்ல என்றும் கீழே பன்னியுரைத்தோம்.
English Translation
O Heart! When the ocean rolls, the Lord lies on it and lets the waves touch his feet and caress his frame, and even gives a look of love with his red dreamy eyes. Remove yourself from the path of self-destruction and praise the Lord. There is no loss of identity, it is the obvious truth.
