(2524)

(2524)

திரிகின் றதுவட மாருதம், திங்கள்வெந் தீமுகந்து

சொரிகின் றதுஅது வும்அது கண்ணன்விண் ணூர்தொழவே

சரிகின் றதுசங்கம் தண்ணந்து ழாய்க்குவண் ணம்பயலை

விரிகின் றதுமுழு மெய்யும் என் னாங்கொலென் மெல்லியற்கே

பதவுரை

வடமாருதம்

வாடைக்காற்று
திரிகின்றது

உலாவுகிறது;
திங்கள்

(குளிர்ந்த இயல்பையுடைய) சந்திர மண்டலம்
வெம்  தீ

கொடியநெருப்பை
முகந்து சொரிகின்றது

வாரியிறைக்கின்றது:
அதுவும் அது

முற்சொன்ன வாடைக் காற்றும் அப்படியே நெருப்பை வீசுகின்றது;
கண்ணன்

கண்ணபிரானுடைய
விண் ஊர்

பரமபதமாகிய வாஸஸ்தாநத்தை
தொழவே

இடைவிடாது தொழுது அநுபவிக்கவேணுமென்று ஆசைப்பட்டு அது கிடையாமையால் வந்த மெலிவாலே
சங்கம்

(கையிலணிந்துள்ள) சங்குவளை.
சரிகின்றது

கழன்று விழுகின்றது;
தண் அம் துழாய்க்கு

(அவனது) குளிர்ந்த அழகிய திருத்துழாயினிடத்தில் வைத்த ஆசையினால்

(ஆசைப்பட்டு அது கிடையாமையினாலே)

முழு மெய்யும்

உடம்பு முழுவதிலும்
வண்ணம் பயலை விரிகின்றது?

(இயற்கையான மாமை நிறம் நீங்கிப்) பசுப்பு நிறம்பரப்புகின்றது (இனி)
என் மெல்லியற்கு

மென்மையான தன்மையையுடைய என் மகளுக்கு
என் ஆம் கொல்

யாதாய் முடியுமோ.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- விரஹவேதனை பெறாமல் வருந்துகின்ற தலைவியின் நிலைமையைக் கண்டு செவிலித்தாய் இரங்கிக் கூறும் பாசுரம் இது. வாடையும் சந்திரனும் இன்பந்தருவனவேயாயினும் விரிஹிகளுக்குத் துன்பந்தருவனவாதலால் அவற்றுக்கு ஆற்றாது வளையிழந்து பசப்பு ஊர்ந்து வருந்தினன் தலைமகள்; அன்னவளைக் கண்டு தாய் இரங்கிக் கூறுகின்றான்.

திரிகின்றது வடமாருதம் = ஒரு மதயானையானது ஆளைக் கணிசித்து உலாவும்போலே வாடயானது இவளுக்கு வருத்தஞ் செய்தலில் கருத்து வைத்து உலாவுகின்றது என்கை. திரில் என்று விகாரப்படுத்தலுக்கும் போதலால், திரிகின்றது – விகாரப்படுகின்றது அதாவது- தன் தன்மை மாறுபடுகின்றது; தனக்கு இயற்கையான குளிர்ச்சி மாறி வெப்பத்தைக் கொண்டு சுடுகின்றது) என்று முரைப்பர். வடமாறாத மென்றதனால் சரத் காலமென்பது தோன்றும். வடக்கிற் செல்லும் மாருதம் வடமாருதம் என்று கொண்டால் தென்றல் காற்றுக்கும் பேராகலாம்.

திங்கள் வெந்தீமுகந்து சொரிகின்றது = சந்திரன் வெவ்விய நெருப்பைக் குடந்தையிட்டு மொண்டெடுத்துச் சொரிதல் போலச் சொரிகின்றான். உலகத்து நெருப்பிற் காட்டிலும் மிக்க கொடியதொரு புதுநெருப்பு என்பது தோன்ற ‘வெந்தீ’ என்று விசேஷித்துக் கூறப்பட்டது. அதுவுமது = வடமாருதமும் வெந்தீமுகந்து சொரிகின்றதென்கை. ‘வெந்தீமுகத்துசொரிகின்றது என்பதை மறுபடியும் தம் வாயாற் கூறுதற்குங் கூசி ‘அதுவுமது’ என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லுகிறாள்போலும். இதனால், வடமாருதத்தின் கொடுமை (கம்பராமாயணம் – தாடகை வதைப்படலம் -6.) “படிப்பின்மேல் வெம்மையைப் பகரினும் பகருகா, முடியவேம்” (அப்பாலை நிலத்தின் வெப்பத்தைக் குறித்து வாயாற் சொன்னாலும் சொல்லுகின்ற நா முழுதும் வெந்துபோம் என்றபடி) என்னலாம்படியுள்ளது என்பது விளங்கும்.

கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம் = எம்பெருமானது பரமபதத்தை அநுபவிக்கவேணுமென் றாசைப்பட்டு அது கிடையாமையால் வந்த மெலிவாலே கையிலணிந்துள்ள சங்குவளை கழன்று விழுகின்றது. இயற்கையழகு, செயற்கையழகு என்று இரு வகைப்பட்ட அழகுகளுள் செயற்கையழகு குலைந்து போனமை இதனாற் சொல்லப்பட்டது. இயற்கையழகு குலைந்து போனமை ‘தண்ணந்துழாய்க்கு வண்ணம் பயலைவிரிகின்றது முழு மெய்யும்’ என்றதனாற் சொல்லப்படும். துழாய்க்கு- திருத்துழாய்ப் பிரசாதத்தை யாசைப்பட்டு அது கிடையா காரணத்தினாலென்றபடி வாடையாலும் திங்களாலுமுண்டான வெப்பம் தணிதற்காக அவனது திருத்துழாயை விரும்பனமைதோன்ற இங்கே ‘தண்ணந் துழாய்’ என்றது. இத்தனை துயரங்களைப் பொறுக்கமாட்டாத மென்மைத் தன்மையுடையவள் இவள் என்பது தோன்ற ‘மெல்லியல்’ என்ற சொல்லாற் சொல்லிற்று.

மாருதம், சங்கம் – வடசொற்கள். வர்ணமென்ற வடசொல் வண்ணமெனத்திரிந்தது. மெல்லியல்- பண்புத் தொகையன்மொழி.

இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப் பொருளாவது- எம்பெருமானைச் சேரப்போறாது வருந்தும் நிலையில் ஆழ்வாரை  இவ்வுலகத்துப் பொருள்கள் பலவும் துன்பதுமுறுத்துந் தன்மையாக கண்டு ஞானிகள் வருந்திக் கூறும் வார்த்தையென்பதாம் (திரிகின்றது வடமாருதம் திங்கள் வெந்தீமுகந்து சொரிகின்ற அதுவும் அது) இவ்வுலகத்து இனிய பொருள்கள் யாவும் எம்பெருமானது இனிமையை ஞாபகப்படுத்தினால் அவனைப் பிரிந்த நிலையில் வருத்தத்தை விளைகின்றன என்றபடி. (கண்ணன் விண்ணூர் தொழவே சரிகின்றது சங்கம்) ஸரவஸுபனான எம்பெருமானது பரமபதத்தினிடத்து விருப்பமுண்டானதால் இவரது பாரதந்திரியமும் குலைகிறது என்றபடி. (கண்ணந்துழாய்க்கு வண்ணம் பயலை விரிகின்றது முழுமெய்யும்) அப்பெருமானது யோக்யதையில் உண்டான ஈடுபட்டால் இவரது ஸ்வரூபமும் மாறுபடும்படி ஆற்றாமை அதிகப்பட்டதென்றபடி. (என் மெல்லியற்கு என் ஆங்கொல்) எங்களுக்கு உரியவரான இவ்வாழ்வார்க்கு இவ்வாற்றாமையாதாய் முடியுமா!

English Translation

She only bowed to Krishna’s sky-abode, Alas! The dew-laden breeze blows with the heat of the Moon, while the Moon itself sizzles. Her bangles are slipping. Desiring the cool Tulasi garland, her whole body pales. Alas, what is going to happen to our slender one?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top