(2525)
மெல்லிய லாக்கைக் கிருமி, குருவில்மிளிர் தந்தாங்கே
செல்லிய செல்கைத் துலகையென் காணும்என் னாலும்தன்னைச்
சொல்லிய சூழல் திருமா லவன்கவி யாதுகற்றேன் பல்லியின்
சொல்லும்சொல் லாக்கொள்வ தோவுண்டு பண்டுபண்டே,
பதவுரை
| மெல இயல் |
– |
மென்மையான தன்மையையுடைய |
| ஆக்கை |
– |
உடம்பை யுடைத்தான |
| கிருமி |
– |
புழுவானது |
| குருவில் |
– |
புண்ணிலே |
| மிளிர்ந் தந்து |
– |
வெளிப்பட்டு |
| அதுவே |
– |
அவ்விடத்திலேயே |
| செல்லிய |
– |
நடமாடும்படியான |
| செலதைத்து |
– |
ஸ்வபாவத்தையுடையது; (அது) |
| உலகை என காணும் |
– |
உலக நடத்தையை எங்ஙனம் அறியும்? |
|
(அறியமாட்டாது; அதுபோல) |
||
| என்னாலும் |
– |
என்னைக்கொண்டும். |
| தன்னைச் சொல்லிய |
– |
தன்னைப் பாடுவித்த |
| சூழல் |
– |
சூழ்ச்சியையுடைய |
| திருமாலவன் |
– |
ச்ரிய பதியான அப்பெருமானுடைய |
| கவி |
– |
புகழுரையை |
| யாது கற்றேன் |
– |
(யான்) யாதென்று அறிவேன்? |
| பல்லியன் சொல்லும் |
– |
பல்லியின் வார்த்தையையும் |
| சொல் ஆ கொள்வதோ |
– |
(பின் நிகழ்ச்சியை முன்குறிக்குஞ்) சொல்லாகக் கொள்ளுதலோ |
| பண்டு பண்டே உண்டு |
– |
மிக வெகு காலமாகவுள்ளது |
.
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- தலைவி நல்நிமித்தங்கண்டு தான் ஆற்றாமை தணிந்திருக்குமாற்றைத் தோழிக்குக் கூறல் இது. நாயகன் பிரிந்து சென்ற காலத்து அவன் பிரிவை ஆற்றாது வருந்துகிற நாயகி, தன் அருகிலே பல்லி நல்ல இடத்தில் அவன் வரவுக்குப் பொருந்தக் குரல் செய்ததைக் கண்டு அந்த நன்னிமித்தத்தால் நாயகன் விரைவில் வந்து விடுவானென்று துணிந்து சிறிது ஆறியிருக்க, முன்பு அவளுடைய துயரத்தைக் கண்டு தானும் துயருற்றிருந்த தோழி இப்போது இவள் ஆறியிருத்தலைக் கண்டு ‘திடீரென்று நீ இப்படி ஆறியிருப்பதற்கு ஏதேனுங் காரணமுண்டோ? காதலன் கூடியிருக்குங் காலத்தில் உன்னை யிழுத்தணைத்துக்கொண்டு உன்னைப் பிரியேன், பிரிய நேர்ந்தாலும் தரித்திருக்கமாட்டேன். விரைவில் வந்துவிடுவேன் என்று சொல்லுஞ் சொற்களைப் பாராட்டி ஆறியிருக்கிறாயோ? அன்றி வேறு காரணமுண்டோ?’ என்று கேட்க, அதற்குத் தலைவி தான் ஆறியிருத்தற்காரணங் கூறியதுபோலும் இது.
“கொட்டாய் பல்லிக்குட்டீ! குடமாடியுலகளந்த மாட்டார் பூங்குழல் மாதவனை வரக்கொட்டாய் பல்லிக்குட்டீ!” என்ற திருமங்கையாழ்வார் பாசுரத்தில் தலைவி தலைமகன் வரவு கூறும்படி பல்லியை வேண்டியதாகப் பாடியுள்ளதனாலும், கலித்தொகையில் (பாலைக்கலி- 10) “இனைநலமுடைய கானஞ் சென்றோர், புனைநலம் வாட்டுநல்லர் மனைவயிற், பல்லியும் பாங்கொத்திசைத் தன நல்லெழி லுண்கணு மாடுமாலிடனே” (காட்டுக்குச் சென்ற தலைவர் நமது நலத்தைக் கெடுக்குமவரல்லர்காண்; அதற்குக் காரணமென்னெனில் நம்மனையிடத்துப் பல்லியும் நல்ல இடத்தே அவர் வரவுக்குப் பொருந்தக் கூறின; நல்ல அழகையுடையமையுண் கண்ணும் இடந்துடியா நிற்கும் என்கை) என்று நிமித்தங்கூறித் தலைவி தோழியை ஆற்றுவித்தலாலும் பல்லிசொல்லை நிமித்தமாகக் கொள்ளுதல் தொன்று தொட்டுவரும் மிகப் பழமையான ஸம்ப்ரதாயமாதலால், ‘நமது மனைவிடத்துப் பல்லி நல்ல இடத்தில் அவன் வரவுக்கு ஏற்ப ஒலித்தலைக்கண்டு அந்த நற்குறியாலேயே ஆறியிருக்கிறே’னென்று கூறுகின்றாள்.
நாயகன் கூடியிருக்குங் காலத்தில் ‘பிரியேன், பிரியில் தரியேன்’ என்று சொல்லுஞ் சொற்களை நினைந்து ஆறியிருக்கிறாயோ? என்று தோழி கேட்டதற்கு மறுமொழியாயிருக்கின்றன முன்னடிகள். புண்ணிலே தோன்றின புழுவானது தான் தோன்றிய இடமான அப்புண்ணைத் தவிர வேறொன்றை யறியாதவாறுபோல, அகமாகிய அவன் காதலிலே அகப்பட்ட யான் அதனைக் கருதியிருப்பேனத்தனையல்லது புறமாகிய நற்செயல்களைக் கருதுவேனல்லேன்; ஆகையாலே அவற்றை நினைந்து ஆறியிருக்கிறேனல்லேன் என்றவாறு. ஆனாலும் பல்லியின் சொல்லைக்கொண்டு ஆற்றியிருக்கிறே னென்கிறது பின்னடிகளில்.
புழு, தொட்டாலும் வருந்தும்படியான உடம்மையுடையதாதலால் ‘மெல்லியலாக்கைக் கிருமி’ எனப்படட்து. ‘குரு’ என்பதற்குப் புண் என்று பொருளுள்ளமையை ‘வேர்க்குரு’ என்னும் வழக்கிலுங்காண்க. புரஷோத்தமானிக நாயகனிடத்து ஈடுபட்ட தனக்கு, புண்ணில் வெளிபட்ட புழுவை உபமானமாகக் கூறியது. அதனையன்றி வேறொன்றை யறியாமையாகிய ஸாதர்மியம் பற்றியேயென்க. “வேம்பின் புழு வேம்பன்றியுண்ணாது அடியேன் நான் முன்னு பின் சேவடியன்றி நயவேன்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமுங் காண்க. இதனால், இது இழிவுவமை (நிஹீநோபமை)க் குற்றத்திற்பாற் படாது என்றுணர்க.
‘என்னாலும்’ என்றவிடத்து உம்மை உயர்வு சிறப்பும்மை; “காமுற்ற பெண்ணுக்கு அணிகளும் நாணுடைமை” (திடுகடுகம். 52.) என்றபடி நாணத்தை முக்கிய குணமாக்க கொள்ளுமியல்புடைய என்னாலும் என்று பொருள்படுதலால். நாணத்தையே செல்வமாகக் கொண்டிருந்த நான் நாணமழிந்து தன்வசமின்றிப் பரவசப்பட்டு அவன் விஷமாகவே கண்டபடி வாய்பிதற்றுமாறு எனக்கு மோஹத்தை உண்டாக்கினவனென்று கருத்துப்பட என்னாலுந் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன்’ எனப்பட்டது. இங்குத் திருமால் என்றது- வேறொருத்தியிடத்தே வேட்கையுடையவன் என்பது தோன்ற, கீழே காண்கின்றனகளும் என்ற எட்டாம் பாட்டின் ‘பாண்’ என்றதுபோல இங்கே ‘கவி’ என்றது- உண்மையாக வல்லாமல் புத்தி சாதுரியத்தாற் கற்பித்துக் கூறுஞ் சொற்களைக் குறிக்கும். என்னாலும் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன் கவியாதுகற்றேன் – மெல்லியலாளான என்னை இங்ஙனம் மொழி பல பிதற்றும்படி காமவேதனைப் படுத்தினவனும் வேறொருத்தி பக்கல் வேட்கை மிகுந்தவனுமான தலைவன் முன்பு எனக்குக் கூறின காதல் மொழிகளை மெய்யென்று கருதி ஆதரிப்பதற்கும் பொய்யென்று கருதி வெறுப்பதற்கும் யான் தாமுடையேனல்லேன் என்றவாறு, ‘பல்லியின் சொல்லும்’ என்றிவிடத்து உம்மை இழிவு சிறப்பும்மை; விவேக வுணர்ச்சியில்லாத ஜந்துவாகிய பல்லியினது சொல்லையும் என்று பொருள்படுதலால்.
எம்பெருமானைச் சேர விளம்பித்தலால் ஆற்றாமைவிஞ்சின ஆழ்வாரை நோக்கி அன்பர்கள் ‘நீர் இங்ஙனம் பரமபதாநுபத்துக்கு விரைவலாமோ? உம்மைக்கொண்டு லோகத்தைத் திருத்தும்பொருட்டுக் கவிபாடுவித்துக் கொள்வதற்காகவன்றோ எம்பெருமான் உம்மை இங்கு வைத்திருக்கிறது?’ என்று கூறித் தோற்றுவிக்கத் தொடங்க, அவர்களை நோக்கி ஆழ்வார் தமது தாழ்வு முதலியவற்றைக் கூறுகிறார் இப்பாட்டால் (மெல்லியலாக்கைக் கிருமி குருவில் மிளிர்தந்து ஆங்கே செல்லிய செங்கைத்து உலகை என் காணும்?) அற்பமான ஞானசக்திகளையுடைய யான் உலகத்தை யறிந்து திருத்துகையாவது என்? இதற்கு நான் அசக்தன் என்றபடி, தம்முடைய நைச்யத்தைப் புலப்படுத்துவதற்குப் புழுவை உவமையாகக் கொண்டார். ஆழ்வீர்! நீரோ இப்படி சொல்லுகிறீர்; எம்பெருமான் உம்மைக்கொண்டு கவிபாடுவித்துக்கொண்டருளா நின்றடாணனே என்னை; “என்னாலுந் தன்னைச் சொல்லிய சூழல் திருமாலவன் கவி யாது கற்றேன்” என்கிறார். மிக நிரஹுகஜாதியிற் பிறந்தவனாய் அறிவு ஒழுக்கங்களில் குறைய நிற்பவனான என்னைக் கொண்டு தன்னைக் கவிபாடுவித்துக்கொண்ட சூழ்ச்சியையுடைய திருமாலின் கவிகளே யொழிய யான் யாது அறிவேன்? இதில் எனக்கொன்றும் அந்வயமில்லை என்றவாறு, யான் யாது கற்றேனோ அது திருமாலவன் கவி என்னவுமாம். இதனால் இவர் திருவாயைக்கொண்டு எம்பெருமான் தானே கவிபாடுவித்துக்கொண்டனனென்பது விளங்கும். உயர்ந்தாரெல்லாரினும் மிக உயர்ந்தவனான தன்னை நீசர்களில் மிக நீசனான என்னைக் கொண்டு கவிபாடுவித்துக்கொண்ட தந்திரம் என்னே! என்று எம்பெருமானது அற்புத சக்தியை வியக்கின்றமை ‘என்னாலுந் தன்னைச்சொல்லிய சூழல்’ என்பதில் உறையும் தனது உயர்ந்த வியக்கின்றமை ‘என்னாலுந் தன்னைச் சொல்லிய சூழல்’ என்பதில் உறையும் தனது உயர்ந்த நிலையைத் தானே கவிபாடிக்கொண்டால் அதிற்பெருமையில்லையென்று கருதி அந்நிலையை உண்மையாக அறிந்து கவிபாடவல்லாரெவரும் உலகிலில்லாமையால் அடியேனை ஒரு வியாஜமாக வைத்து என்னைக்கொண்டு தன்னைத்தானே கவிபாடிக்கொண்ட உபாயம் என்பது ‘சூழல்’ என்றதின் உட்கருத்து.
வாதிகேஸரி அழகிய மணவாளஜீயர் இத்திவ்ய ப்ரபந்தத்துக்கு இட்டவுரையின் அவதாரிகையில்- “சச்வரன்தானே லோகத்தைத் திருத்துகைக்கு இவர் ஆவரென்று அங்கீகரித்து என்னாலும் தன்னைச் சொல்லிய திருமாலன் கவியாது கற்றேன்’ என்னும்படி இவர் திருவுள்ளத்திலும் நாக்கிலும் நின்று இவர் தம்மைக்கொண்டு தானே பரவார்த்திப்பிக்கையாலும் அதயந்த வ்யாவ்ருத்தராயிருப்பாரொருவர்” என்றது இங்கே ஸம்சரிக்கத்தகும்.
திருமாலவன் கவி = பிராட்டியும் பெருமானுமான சேர்த்தி எப்படி வாய்ப்பாக அமைந்ததோ அப்படியே கவியும் வாய்ப்பாக அமைந்தது என்க. அவன் முன்னுருச்சொல்லிக்கொண்டு வந்த அவ்வளவே’ நான் என்னுணர்வால் அறிந்து கவிபாடினேனல்லேன் என்பது தோன்ற ‘யாது கற்றேன்’ என்றார்; நான் என் வசமிழந்து புக்கி பரவசப்பட்டு வாய்க்கு வந்தபடி பாடினவவ்வளவேயன்றி வேறில்லையென்பதுந் தோன்றும்.
ஆனால், நீர் பாடின கவியென்று எம்பெருமானும் உலகத்தாருங் கொள்ளுகின்றனவேயென்ன; (பல்லியின் சொல்லும் சொல்லாக் கொள்வதோவுண்டு பண்டு பண்டே.) அற்ப ஜந்துவாகிய பல்லி தன்னடைவிலே செய்யும் சப்தத்தையும் தம் தமது பெரிய காரியங்களைக் குறிக்கின்றனவாக நிமித்தவேதிகள் கொள்ளும் இயல்பு அநாதிகாலமாக உண்டன்றோ? அப்படியே யான் பாதந்திரமாய்க் கூறுஞ் சொல்லையும் எனது இழிவுபாராது யாவரும் அங்கீகரித்துப் பொருள் பாராட்டுகின்றனரென்று தமது விநயந்தோற்ற அருளிச்செய்கிறபடி.
‘யாக்கை’ என்பது ஆக்கை என மருவிற்று; தனிச் சொல் என பாருமுளர். உணட்டாக்கப்பட்டதென்று பொருள். கிருமி- வடசொல்லின் விகாரம். ‘கிரிமி’ என்று முண்டு.‘பண்டு பண்டே’ என்ற அடுக்கு மிகுதியைக் காட்டும்: மிக வெகுநாயாகவேயென்றபடி.
English Translation
I am like the famished maggot born in a fester which knows only to wriggle in the fester; what other world can it know? The lord Tirumal connives to make me sing his praise, but what poetry do I know? And yet, even a lizard’s fut is taken as spoken world, this is so from time immemorial.
