(2522)
பெருங்கேழ லார்தம் பெருங்கண் மலர்ப்புண்ட ரீகம்நம்மேல்
ஒருங் கே பிறழவைத் தாரிவ்வ காலம், ஒருவ ர்நம்போல்
வரும்கேழ் பவருளரே? தொல்லை வாழியம் சூழ்பிறப்பும்
மருங்கே வரப்பெறுமே? சொல்லு வாழி மடநெஞ்சமே.
பதவுரை
| நட |
– |
நெஞ்சமே |
|
பேதை நெஞ்சமே! |
||
| பெருகேழலார் |
– |
(பிரள வெள்ளத்திலழுந்தின பூமியை யெடுப்பதற்கு) மஹாவராஹரூயானவனர் |
| இ அகாலம் |
– |
(ரக்ஷிப்பதற்கு) எளியதல்லாத இக்காலத்தில் |
| தம் |
– |
தம்முடைய |
| பெரு கண் மலர் புண்டரீகம் |
– |
பெரிய செந்தாமரைப்பூப் போன்ற திருக்கண்களை |
| நம்மேல் |
– |
நம் பக்கலில் |
| ஒருங்கே பிறழ வைத்தார் |
– |
ஒரு படிப்பட மிளிரும்படி வைத்தார். (கடாக்ஷித்துக் காத்தருளினார். |
| நம் போல் வரும் கேழ்பவர் |
– |
(அவரோடு) நம்மைப்போல் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர். |
| ஒருவர் உளரே |
– |
வேறொருத்தர் உண்டோ? (இல்லை) |
| தொல்லை வாழியம் |
– |
(அவரோடு பழமையான வாழ்க்கையும் யாமுடையோம்; |
|
(அப்படிப்பட்ட நமக்கு) |
||
| சூழ் பிறப்பு |
– |
விடாது சூழ்கிற பிறப்புத் துன்பங்கள் |
| மருங்கே வர பெறுமே |
– |
அருகிலும் வரக்கூடுமோ? |
| சொல்லு |
– |
சொல்லாய்; |
| வாழி |
– |
(கலக்கந் தெளிந்து) வாழ்வாயாக. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – நாயகி நாயகனுடைய நீரிடை யுதவியை நினைத்துரைத்த பாசுரம் இது. நாயகனைப் பிரிந்து நாயகியானவள் அவனையே இடைவிடாது சிந்தனை செய்து கொண்டு நீண்ட காலம் வருத்தப்படா நிற்கையில், அவளது மனம் (நல்வழி. 28) “எண்பது கோடி நினைந்தெண்ணுவன” என்றபடி அவன் முன்பு செய்த உதவியையும் அவனோடு தனக்குள்ள ஸம்பந்தத்தையும் மறந்து அவன் இரக்கமற்றவன், ஈரநெஞ்சு இனநெஞ்சு அற்றவன்’ என்று சொல்லி அவனது கொடுமையையே பாராட்டி வெறுக்கப்புக, அந்த நெஞ்சத்தை முன்னிலைப்படுத்தித் தலைவி ‘நாம் முன்பு நீர்நிலையில் விளையாடச் சென்றபோது பெரு வெள்ளத்தில் அகப்பட்டு ஆழ்ந்து முடிந்துபோகவிருக்கும் தருணத்தில் அவர் தமது அபாயத்தைக் கருதாது துணிந்து வந்து இறங்கி நம்மை யெடுத்துக் கரைமேல்விட்டு உயிர்காத்தவ ரல்லரோ?’ என்றும், ‘இப்படிப்பட்ட ப்ராபதி அவரோடு வேறு யாவர்க்கு சேர்ந்தது?’ என்றும், ‘செய்ததற்கு முன்னமே அவரோடு நாம் இயற்கைப் புணர்ச்சி பெற்றோமன்றோ’ என்றும் பழைய ஸம்பந்தங்களையெடுத்துச் சொல்லி மனத்தைத் திருப்புதல் ஒரு கிளவித் துறையாகவுள்ளது, அத்துறையில் அமைந்த பரசுரம் இது என்னலாம்.
இப்பாட்டில் நீரிடையுதவியை நினைந்துரைத்தல் காணவில்லையே என்ன வேண்டா; ‘பெருங் கேழலார்’ என்றது அதுவே. எம்பெருமான் மஹாவராஹ மூர்த்தியாய்த் திருவவதரித்தது பிரளயப்பெருங்கடலினுட்பட்டு ஆழ்ந்து பூமிப்பிராட்டியை அதில் நின்ற எடுத்துப் பாதுகாப்பதற்காதலால் அதுதான் நீரிடையுதவியாதலால் அது இங்கு நினைத்துரைக்கப்பட்டதென்க. அவ்வுதவி பூமிப்பிராட்டிக்குச் செய்ததாயினும் ஆச்ரித வர்க்கங்களில் எவர்க்கு எவ்வுதவி செய்யினும் அதனை மற்றுள்ள அடியாரனைவரும் தத்தமக்குச் செய்ததாகப் பாவிக்கும் முறைமையுண்டாதலால் தனக்கேயாகக் கொள்ளக் குறையில்லை. அன்றியும், ‘பிள்ளைக்கொல் நிலமாமகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்” என்ற ஐக்கியமுமுண்டு பராங்குச நாயகிக்கு.
“தம் பெருங்கண் மலர்ப்புண்டரீகம் நம்மேலொருங்கே பிறழவைத்தார்” என்றது- தன்னை எம்பெருமான் குளிர நோக்கினமை கூறியவாறு. நம்மேல் வைத்த கடாக்ஷத்தை மாற்றிப் பிராட்டி தன் பக்கலிலே வைக்கவேணுமென்றாலும் மாற்றவொண்ணாதபடி வைத்திட்டானென்பது தோன்ற ‘ஒருங்கே’ என்றது; “எங்கும் பக்க நோக்கறியான் என் பைந்தாமரைக் கண்ணனே” என்பர் திருவாய்மொழியிலும். பிறழ – மிக.
‘இக்காலம்’ என்னாது ‘இவ்வகாலம்’ என்கையால்- தன்னுயிர் போனாலும் போகட்டுமென்று தன்னை மதியாமல் வந்து ரக்ஷிக்கப் பார்த்தலான்றி மற்றைப்படி எளிய ரக்ஷிப்பதற்கு உரியதல்லாத காலம் என்பது தோன்றும். இனி நாம் பிழைக்கும் வகையில்லையென்று நிராசை பண்ணிவிட்டிருந்த மையத்திலே வந்து ரக்ஷித்தாரென்றவாறு. நாலமல்லாத காலம் அகாலமெனப்படும். மஹாவராஹரூபியாய்க் கடாக்ஷித்துக் காத்தருளினது நெடுநாளைக்கு முன்பே நடந்ததாயினும். அன்பின் மிகுதியாலே இப்பொழுது நடக்கிறதுபோலத் தோன்றுதலால் ‘இவ்வகாலம்’ என அண்மைச் சுட்டாற் குறித்தாள்.
பகவத கடலாக்ஷம் பெறப்பெற்ற பெருமையினால் உண்டான மனக்களிப்பு பின்னடிகளில் பன்றியுரைக்கப்படுகின்றது. அவரோடு நம்மைப்போலப் பொருந்திய ஸம்பந்தம் பெற்றவர் வேறு யாரேனு முண்டா? எவருமில்லை; இவ்வுறவு நமக்கே அஸாதாரணம்; நாம் இன்று நேற்று வாழ்வுடையோமோ? நெடுநாளைய வாழ்வுடையோமன்றே? இப்படிப்பட்ட நமக்கு ஸம்ஸாரத் துன்பங்கள் அருகிலும் வரக்கூடுமோ? சொல்லாய் நெஞ்சமே! யென்கிறான். இந்த ஸம்ஸாரத்திலே பிறந்த ஸ்த்ரீகளுக்கு வரக்கூடிய விரஹத் துன்பங்களானவை இங்ஙனம் கருணையையும் ஸம்பந்தத்தையு முடைய நாயகரைக்கொண்ட நமக்கு வாரா என்றவாறு.
வாய்திறந்து ஒன்று சொல்லுவதற்கு யோக்யதையற்றதான நெஞ்சைப் பார்த்து ‘சொல்லு’ என்றது- தேற்றப்பொருள் – விளங்கும்; ‘காண்’ என்பதுபோல. ‘உளரே’ ‘பெறுமே’ என்ற ஏகாரங்கள் எதிர்மறைப் பொருளன; இலர் என்றும்; பெறாது என்றும் பொருள்படுதலால். தொல்லை- தொன்னை; ஐ விகுதிபெற்ற பண்புப்பெயர்.
இப்பாட்டுக்கு ஸ்வாபதேசப்பொருள் சொல்லவேண்டுவது அவசியமன்றாயினும் ஒருபடி நிஷ்கர்ஷித்துச் சொல்லுவோம். நாம் ஸம்ஸார ஸமுத்ரத்தில் அகப்பட்டு வருந்துகின்ற இக்காலமானது எளிதில் ரக்ஷிப்பதற்கு உரியதல்லாதது; இப்படிப்பட்ட அகாலத்திலே பிரளய வெள்ளத்துப் பூமியைக் காக்க பெருமான் நம்மேல பூரண கடாக்ஷம் வைத்தருளினான், ஆதலால் நம்மைப்போல அவனோடு ஸம்பந்தம் பெற்றோர் வேறு எவருமில்லை. அன்றியும் பரமாத்மாவாகிய அவனோடு ஜீவாத்மாவாகிய நாம் இயற்கையில் அடிமைப்பட்டு வாழ்ந்தலுமுடையோம்; நமக்கு இனிப் பிறவித்துன்பங்கள் அருகிலும் வரக்கடவனவல்ல. (பகவத கடாக்ஷமுண்டாகி அநுபவம் பெற்றோர்க்கு ஜந்மஸம்பந்தமுண்டென்று எங்கேனுங் கேட்டறிவதுண்டா?) நெஞ்சே! இனிக் கலக்கத்தெளிந்து வாழ்வாயாக என்று ஆழ்வார் பிறவித்துயருக்கு அஞ்சி யொடுங்கிய தமது நெஞ்சத்தை நோக்கிக் கூறித்தெளிவிக்கும் பாசுரமிது.
English Translation
Live, O Frail Heart of mine! Tell me, The big boar-lord has turned his lotus eyes on us and made us live through many bad times. Is there anyone with such a long association as we who know him form yore? Can future births ever accost us?
