(2488)
அரியன யாமின்று காண்கின்ற * கண்ணன் விண்ணனையாய்!
பெரியன காதம் பொருட்கோ பிரிவென * ஞாலமெய்தற்
குரியன வொண்முத்தும் பைம்பொன்னுமேந்தி யோரோகுடங்கைப்
பெரியன கெண்டைக்குலம் * இவையோ வந்து பேர்கின்றவே.
பதவுரை
|
யாம் இன்று காண்கின்றன |
– |
நாம் இப்பொழுது பார்க்கின்றவை |
|
அரியன |
– |
(உலகத்தில் வேறு எங்கும் பார்ப்பதற்கு) அருமையானவை; |
|
கண்ணன் விண் அணையாய் |
– |
எம்பெருமானுடைய பரமபதம்போல அளவற்ற இன்பம் தருபவளே! |
|
பெரியன காதம் பிரிவு |
– |
அதிக தூரங்களான பலகாங்களில் (அவரவர்கள்) பிரிந்து போவதானது |
|
பொருட்கோ |
– |
பொருள் சம்பாதிப்பதற்காகவோ?’ |
|
என |
– |
என்று யான் (பொதுப்படையாக உலக நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்க |
|
(அவ்வளவிலே) |
||
|
ஞானலம் எய்தற்கு உரியன |
– |
எல்லாவுலகங்களையும் தம் வசப்படுத்திக் கொள்ளக்கூடியவையாயும் |
|
ஒரோ குடந்தை பெரியன |
– |
தனித்தனி ஒரு அகங்களையவ்வளவு பெரியவையாயு |
|
கெண்டை குலம் இவை |
– |
முள்ள கெண்டை மீன்களின் இனமான இக்கண்கள் |
|
ஒள் முத்தும் பை பொன்னும் ஏந்தி |
– |
(பிரிவாற்றாமையால் வந்த கண்ணீர்த் துளிகளாகிய அழகிய முத்துக்களையும் (பசலை நிறமாகிய) பசும் பொன்னையுங் கொண்டு |
|
வந்து பேர்கின்ற |
– |
(என் முன்னே) வந்து உலாவுகின்றன; |
|
ஓ |
– |
இது என்ன வியப்பு!. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- காதலன் நம்மைப் பிரிந்துபோகப் போகிறானென்றுணர்ந்த காதலி அப்பிரிவுக்கு ஆற்றாது வேறுபாடடைய, அதனைக்கண்ட காதலன் உரைக்கும் பாரசுமிது. கிழ் எட்டாம்பாட்டில், நாயகன் பொருள் சம்பாதிப்பதற்காகத் தேசாந்தரம் செல்ல நினைத்திருந்தபடியை நாயகியானவள் குறிப்பாலறிந்து கூறியிருக்கிறாள். அது நிற்க, பொருள்படைப்பதற்காக நாயகியைப் பிரிந்து போகவேணுமென்றெண்ணிய நாயகன், அவளோடு சொல்லாமல் சடக்கெனப் பிரிந்தாலும், அல்லது, ‘தேசாந்தரம் போகப்போகிறேன்’ என்று சடக்கென பிரிவைத் தெரிவிததாலும் அவள் மரணபர்யந்தமான கஷ்டததை யடைந்திடுவளெனக்கருதி, அவள் ஆற்றுமாறு கொஞ்சங் கொஞ்சமாகப் பிரிவைத் தெரிவிக்கத் தொடங்கி, லோகாபிராமமாகப் பல பிரஸ்தாவங்கள் பண்ணுமடைவிலே ‘உலகத்திலே பொருள் சம்பாதிப்பதற்காகப் பிரிந்து தேசாந்தரம்போகிறதென்கிற ஒரு விஷயம் உண்டு’ எனப் பொதுப்படையான ஒரு ப்ரஸ்தாவம் எடுத்துக்கூற, அவள் அது கேட்டவுடன், ‘இப்போது இவர் இவ்விஷயம் பிரஸ்தாவித்தது வெறுமனல்ல; இது லோகாபிராம வார்த்தைகளிற் சேர்ந்தவல்ல; நம்மைப் பிரிந்து போவதற்காகவே இது அவதாரிகையாகக் கூறின கூற்றாயிருக்க வேண்டும்’ என நினைத்து, பிரிவு உண்டாய்விட்டதாகவே கண்ணுங் கண்ணீருமாயிருக்க, அதைக் கண்ட நாயகன், நாம் பிரிந்துபோவதாகச் சொல்லாதிருக்கவும் வெறும் வார்த்தையிலே நமது உட்கருத்தைத் தெரிந்துகொண்ட இவளுடைய நிலைமை இப்படியாயிற்றே! என்று ஆச்சரியப்பட்டுத் தோழியை நோக்கிக் கூறியது என்றாவது நெஞ்சை நோக்கிக் கூறியது என்றாவது கொள்க.
இதுவரையில் நான் உலகத்தில் எத்தனையோ ஆச்சரியங்கள் கண்டிருக்கிறேன்; ஆனால் இன்று காணும் ஆச்சரியம் என்றைக்குங் காண முடியாது என்று அடங்காவியப்புத் தோற்ற, பாசுரந் தொடங்கும்போதே ‘அரியன யாமின்று காண்கின்றன’ என்கிறான் தலைமகன். மேல்முழுதும் அவ்வாச்சரியமே விவரிக்கப்படுகின்றது. ஸாமாந்யமாக உலக நிகழ்ச்சியை நான் பிரஸ்தாவித்த மாத்திரத்திலும் இவள் தன்னைப் பிரிவதற்காகவே நான் இவ்வார்த்தை சொல்லுகிறதாகவும் அதற்கு மேல் பிரிவும் நேர்ந்துவிட்டதாகவும் நினைத்து விலக்ஷணமாக விகாரத்தை அடைந்திட்டாளே, இதனின் மிக்க ஆச்சரியமுண்டோ என்கை.
‘உன்னை நான் பிரிந்துபோக ஒருகாலும் முடியாது’ என்பது விளங்க ‘கண்ணன் விண்ணனையாய்!’ என்று நாயகியை நான் விளித்துச் சொல்லியிருக்கவும் இவள் பிரிவைச் சங்கித்தாளே! என்று உன் குழைகின்றமையறிக. எம்பெருமானுடைய பரம பதத்தையடைந்தவர்கள் அதனைவிட்டுப் பிரியவொண்ணாதபோல இவளை யடைந்தவர் பிரியவொண்ணா… சொன்னபடி.
பெரியனகாதம் பொருட்கோ பிரிவு என= ‘பொருட்கோ’ என்றவிடத்து ‘ஒ’ என்பதை வினாவாகவும் கொள்ளலாம். தெரி நிலையாகவுங் கொள்ளலாம். ‘உலகத்தில் காதலர் காதலிகளை விட்டுப் பிரிந்து த்வீபாந்தரங்கட்குச் செல்லுகின்றனரே, இது பொருள் சம்பாதிப்பதற்காகப் போகிற போக்கோ? என்று தான் நாயகியைக் கேள்வி கேட்டதாகவும் கொள்ளலாம்; பொருள் படைப்பதற்காகத்தான் அவரவர்கள் த்வீபாந்தரங்களுக்குச் சொல்லுகின்றனர் என்று உலக நிகழ்ச்சியை எடுத்துக் கூறினதாகவும் கொள்ளலாம்.
ஞாலமெய்தற்குரியன = உலக முழுவதையும் விலையாகப் பெறுதற்கு உரியவை என்று முரைக்கலாம்; உலகமெல்லாம் ஆசைப்படுவதற்கு உரியவை என்றுமாம். ஒண்ணுமுத்தும் பைம் பொன்னுமேந்தி = கண்ணீர்பெருக்கு முத்தாகவும், பசலைநிறம் பொன்னாகவும் கூறப்பட்டனவென்க. எனவே, ஆகுபெயர். பசலைநிறம் பொன்னிறமா யிருக்குமென்ப. “பொன்குவலாம் பயலை பூத்தனமென்தோள்” என்ற திருமங்கையாழ்வார் பாசுரமுங்காண்க. பசலைநிறத்தைப்பற்றிக் குறுந்தொகையில் ஒரு செய்யுளுண்டு; அதாவது- ‘அருண்கேணி யுண்டுறைத்தொக்க பாசியற்றே பசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே” (399) என்பதாம்; இதன் பொருள்:- ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிறகேணியிலுள்ள படர்ந்து கிடக்கும் பாசிபோன்றது பசலைநிறம்; தண்ணீரில் நாம் கைவைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்; கையை எடுத்துவிட்டோகில் அவ்விடமெல்லாம் பாசி மூடிக்கொள்ளும்; அதுபோல, கணவனுடைய கைபடுமிடங்களில் பசலை நிறம் நீங்கும்; அணைத்த கைநெகிழ்ந்தவாறே அப்பசலை நிறம் படரும்; ஆதலால் பாசிபோன்றது பசலைநிறம் என்றபடி. (தொடுவுழித் தொடுவுழி- தொட்டவிடங்கள் தோறும். விடுவுழி விடுவுழி- விட்ட விடங்கள் தோறும். பரத்தலான்- வியாபிக்கிறபடியினாலே.)
‘கெண்டைக்குலம்போன்ற கண்கள்’ என்னவேண்டுமிடத்து உபமேயத்தைச் சொல்லாமலே உபமானத்தை மாத்திரம் சொன்னது முற்றுவமை. குளிச்சியாலும் மிளிர்ச்சியாலும் ஓடுதலாலும் மதமதப்பாலும் கண்கள் கெண்டை மீன் போலும். கெண்டைக் குலமென்றதைக் குலக்கெண்டையென மாற்றியியைத்து, உயர்ந்த சாதிக் கெண்டைமீன் எனவுமாம். இவையோ = ஓ- வியப்பிடைச்சொல். பொருளீட்டுதற்காகப் பிரிந்து போவதைக் கூறத் தொடங்கின என் முன், பரந்த கண்கள் உலகை விலைபெறத்தக்கவையாய் சிறந்த முத்தையும் பொன்னையும் ஏந்தி வந்து எதிர்நின்று ‘நீ பொருட்காகப் பிரிந்துபோகவேண்டா; முத்தும்- பொன்னுமாகிய இப்பொருள்கள் உனக்கு உரியவையே காண்’ என்று கூறுகின்றன போன்றன என்பதுந் தோன்றும். பிரிவை நினைத்த மாத்திரத்தில் கண்ணீரும் நிற வேறுபாடுமாயிருந்த இருப்பும் புதியதாக ஒரு முத்தணியையும் பொன்னணியையும் அணிந்தாற்போலத் தனக்கு ஒரு அழகு விளைத்ததென்பது தோன்ற ‘ஒண்முத்தும் பைம் பொன்னு மேந்தி’ என்றானென்னவுமாம்.
குடங்கை = ‘நட’ என்பது போலக் ‘குட’ வென்பதும் வலைவை உணர்த்துவதோர் உரிச்சொல்லாதலால் ‘வளைந்த கை’ எனப் பொருள்பட்டுச் சேரங்கையைக் குறிக்கும். குடக்கையென வலிமிகாது குடங்கையென மெலிமிக்கதற்குக் காரணம் உரிச்சொற் புணர்ச்சியாதலே. “இடையுரி வடசொலி னியம்பிய கொளாதவும்” (நன்னூல்) இத்யாதி. கண்ணுக்குக் குடங்கை உவமையாதல் ஆக்ருதியில் என்க. ஓரோ =ஓ- அசை. பேர்கின்ற- வினைமுற்று; அன்சாரியைப் பெறவில்லை.
ஸ்வாபதேசம்:- ஆழ்வாரைப் பிரிந்து திவ்யதேச யாத்திரை போகக்கருதிய பாகவதா தமது பிரிவைப் பொறுக்கமாட்டாதபடியான அவருடைய ஞானவிசேஷத்தைக் கண்டு கூறுதலாம். (அரியன யாமின்று காண்கின்றன) அவருடைய ஞானவிசேஷம் வேறு எவ்விடத்திலும் காண முடியாது. (கண்ணன் விண்ணனையாய்!) எம்பெருமானுடைய பரம பதம்போல அளவிறந்த மஹிமையையும் அந்தமில் பேரின்பமளித்தலையும் பிரகிருதிஸம் பந்த மில்லாமையையும் என்றும் வேறுபாடில்லாத இயல்பையும் உடையவரே! என்று ஆழ்வாரை விளித்தபடி. (பெரியன காதம் பொருட்கோ பிரிவென)- பரமபொருளாகிய எம் பெருமானை ஸேவிக்கும்பொருட்டு நெடுந்தூரம் திவ்யதேச யாத்திரை செல்லுதலுண்டு என்று யாம் ப்ரஸ்தாவம் செய்தவளவிலே. (ஞாலம் எய்தற்குரியன.) எல்லா வுலகங்களையும் வேண்டிய வேண்டியவாறு பெறுதற்கு உரியவையும், (அல்லது) உலகத்தாரையெல்லாம் வசப்படுத்த வல்லவையும், “உலக மென்பது உயர்ந்தோர் மாட்டே” என்பவாதலால் விசேஷ ஞானமுடைய வைஷ்ணவர்களெல்லோரும் அநுபவிக்கத்தக்கவை என்னவுமாம். (ஒண்முத்தும் பைம்பொன்னு மேந்தி) சுத்தஸத்வகுணத்தையும் ஒளிமயமான எம்பெருமான் வடிவத்தையும் தன்னுட் கொண்டவையும். (ஒரோ குடங்கைப் பெரியன) கைகளால் மொண்டெடுத்து அநுபவிக்கும்படி அன்பர்க்கும் எளியவையும், (அல்லது கைவசப்பட்டவையும்.) (கெண்டைக்குலம்) எம்பெருமானது மத்ஸ்யாவதாரத்திலே இறங்கி ஈடுபட்டுத் தந்மயமானவையும் ஆகிய (இவை) ஆழ்வாரது ஞானத்தின் வகைள், (வந்து பேர்கின்ற) பரவிவந்து (பிரியவொண்ணாதபடி) ஆசையை மூட்டுகின்றன.- ஒ- இது என்ன வியப்பு. பிரிவென்று ஒன்று உலகத்தில் உண்டென்னுமளவில் ஸ்ரீவைஷ்ணவர்களின் பிரிவு தமக்கு ஒருகால் நேர்ந்திடுமோவென்று வெருவும்படி ஆழ்வார்க்கு அவரவர்கள் வியத்திலுள்ள பிரிவாற்றாமை இப்பாட்டால் விளங்கிற்றாம்.
English Translation
We only said, “Will he ever leave your side and go to earn wealth?”, Alas, this girl with eyes that could buy the Earth, -her eyes darting in and out like kendal fish as big as her palms, – Sheds pearly tears and pales into a golden hue. Alas, it is hard to see this girl with Krishna’s heavenly beauty sufferhus.
