(2344)

(2344)

தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,

சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும்

திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,

இரண்டுருவு மொன்றாய் இசைந்து.

 

பதவுரை

தாழ் சடையும்

தாழக் கட்டின ஜடையும்

நீள் முடியும்

நீண்ட திருவபிஷேகமும்

ஒண் மழுவும்

அழகிய மழுவென்னுமாயுதமும்

சக்கரமும்

திருவாழியாழ்வானும்

சூழ் அரவும்

சுற்றிலும் அணிந்துள்ள நாகாபரணமும்

பொன் நாணும்

பொன் னரைநாணுமாய்க்கொண்டு

இரண்டு உருவும்

ஒன்றுக்கொன்று சேராச் சேர்த்தியாயிருக்கிற இரண்டு வடிவும்

சூழும் திரண்டு அருவி பாயும் திரு மலை மேல் எந்தைக்கு

நாற்புறமும் திரள்திரளாக அருவிகள் பெருகப் பெற்ற திருமலைமேலுள்ள அப்பனுக்கு

ஒன்று ஆய் இசைந்து தோன்றும்

ஒரு வடிவமாய் அமைந்துவிளங்கா நின்றது

ஆல்

ஆச்சரியம்!

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் செய்தருளின பல அவதாரங்களில் சங்கர நாராயணவதார மென்பது மொன்று, இது ஹரிஹராவ்தாரமென்றும் சொல்லப்படும். பாதிவடிவம் ஸ்ரீமந்நாராயணமூர்த்தி யாகவும் பாதிவடிவம் பரமசிவமூர்த்தியாகவும் கொண்டதாமிது, எம்பெருமான் கொண்ட கோலங்களெல்லாம் பகவத்பக்தர்கட்கு உத்தேச்யமாகையாலே இவ்வுருவந்தன்னையும் ஆழ்வார்கள் அநுஸந்தித்துப் பாசுரங்கள் பேசுவதுண்டு.

“திருமலைமே லுந்தைக்கு இரண்டுருவு மென்றாயிசைந்து தோன்றும்“ என்று இங்கு ஆழ்வா ரருளிச்செய்திருப்பது கொண்டு இதற்குப் பலர் பொருள்கொள்வ தெங்ஙனேயென்னில், திருவேங்கடமுடையானுக்குச் சடையுமுண்டு கிரீடமுமுண்டு, மழுவுமுண்டு, சக்கரமுமுண்டு, நாகாபரணமுமுண்டு பொன்னுணு முண்டு – என்றிங்ஙனே பொருள்கொள்வர். இது பொருந்தாது, திருவேங்கடமலையில் அரச்சையாக எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் பக்கல் தாழ்சடையுமில்லை, ஒண் மழுவுமில்லை, சூழரவுமில்லை, நீண்முடியும் சக்கரமும் பொன்னுணுமேயுள்ளன. ஆகில் “திருமலைமேலெந்தைக்கு இரண்டுருவு மொன்றாயிசைந்து தோன்றும்“ என்றது எங்ஙனே சேருமென்னில், நன்கு சேரும், திருவேங்கடமுடையானாக ஸேவைஸாதிக்கும் திருமலையப்பன்றானே ஒரு மையத்தில் இரண்டுருவையும் ஒன்றாயிசைத்துக்கொண்டு தோன்றினவன் – என்ற பொருளே இதிலடங்கியுள்ளதாம். இதற்கு ஒன்றிரண்டு உதாரணங்களுங் காட்டுவோம், திருப்பள்ளியெழுச்சியில் – “மாமுனி வேள்வியைக் காத்து அவ்விரதமாட்டிய அடுத்திறலயோத்தி யெம்மரசே! அரங்கத்தம்மா! பள்ளியெழுந்தருளாயே“ என்கிறார். இதனால் திருவரங்கத்தில் சேஷசயனத்தில் பள்ளிகொண்டிருக்கும் அழகிய மணவாளன்றனே விச்வாமித்ர முனிவனுடன் சென்று வேள்வியைக் காத்துவந்தான் என்றதாகுமோ? அந்த ஸ்ரீராமபிரானும் இந்த அழகிய மணவாளனும் ஏகதத்துவம் என்றபடியா மத்தனையன்றோ? இன்னமும், பூதத்தாழ்வார் “அத்தியூரான் புள்ளையூர்வான் அணிமணியின் துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான்“ என்றருளிச் செய்கிறார். இதனால் கச்சி நகர்ப் பேர்ருளானப் பெருமான் திருவனந்தாழ்வான் மீது பள்ளி கொண்டிருக்கிறார் என்றதாகுமோ? நாகத்தின்மேல் துயில்கொள்ளும் மெம்பெருமானும் அத்தியூரானும் ஏகதத்துவம் என்ற தாகுமத்தனையன்றி வேறில்லை. ஹரிஹரரூபத்தால் காட்டியருளின சீலம் திருவேங்கடமுடையான் பக்கலில், பொலிகின்றது என்று அநுபவித்துச் சொன்னரென்க.

 

English Translation

In the streaming-hills venkatam, the Lord my father seems to have both mat hari and crown.  He wields both the axe and the discus, wears, both a snake around his neck and the sacred thread. Two images blended into one, -what a wonder!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top