(2279)

(2279)

கொண்டு வளர்க்கக் குழவியாய்த் தான்வளர்ந்தது,

உண்ட துலகேழு முள்ளொடுங்க, – கொண்டு

குடமாடிக் கோவலனாய் மேவி,என் னெஞ்சம்

இடமாகக் கொண்ட இறை.

 

பதவுரை

கோவலன் ஆய்

இடையனாய் வந்து பிறந்து

குடம் கொண்டு ஆடி

குடங்களைக் கையிலே கொண்டு கூத்தாடி (அதனாலுண்டான ஆயாஸம் தீர)

என் நெஞசம் மேவி

என்னுடைய ஹ்ருதயத்திலே பொருந்தி

இடம் ஆக கொண்ட இறை

(எனது நெஞ்சையெ) நித்யவாஸஸ்த்தாநமாகக் கொண்ட ஸ்வாமி

கொண்டு வளர்க்க

சிலர் கையிலெடுத்துச் சீராட்டி வளர்க்க வேண்டும்படியான

குழவி ஆய்

சிறுகுழந்தையாய்

தான் வளர்ந்தது

தான் வளர்ந்த அப்படிப்பட்ட மிகச்சிறிய பருவத்திலே

உலகு ஏழும்

ஸப்தலோகங்களும்

உள் ஓடுங்க

தன்னுள்ளே ஒடுங்கும்படி

உண்டது!

உட்கொண்டது (என்ன ஆச்சரியம்)

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்மை விஷயீகரித்த எம்பெருமானுடைய சில திவ்ய சேஷ்டிதங்களை அநுபவிக்கிறார். இடையனாய் வந்து பறந்தருளி அந்த ஜாதியின் மெய்ப்பாட்டுக்காகக் குடக்கூத்தாடி அதனாலுண்டான சிரமந்தீர என்னெஞ்சிலேவந்து இளைப்பாறு மெம்பெருமான், முன்னே செய்தவொரு அற்புதச்செயலை என்னவென்று சொல்லுவேன், அது யாதெனில், மிகச்சிறிய குழந்தையாக இருக்கும் பருவத்திலே ஏழுலங்களும் தனது சிறிய திருவயிற்றிலுள்ளே ஒடுங்கும்படி செய்த விசித்திரம். இவன் வளர்ந்ததோ கொண்டு வளர்க்கக் குழவியாய், உண்டதோ உலகேழுமுன்ளொடுங்க, இது என்னமாயம்.

ஸ்வாதீநமாக ஒருகாரியமும் செய்யமுடியாத மிகச்சிறிய குழந்தைப்பருவம் என்று காட்டுதற்காகக் கொண்டு வளர்க்கக் குழவியாய் என்றது

குடமாடி – தலையில் அடுக்குக்குடமிருக்க, இருதோள்களிலும் அங்ஙனே அடுக்குக்குடமிருக்க இவை சிறிதும் சலியாதபடி இரண்டுகைகளாலும் குடங்களை மாறிமாறியெறிந்து ஆடுவதொரு கூத்து குடக்கூத்தெனப்படும்.

‘கோபாலன்‘ என்பது கோவலனாயிற்று.

 

English Translation

My Master! You were brought up as a cowherd-child by Dame Yasoda. You danced with pots and wan all heart. You swallowed the seven worlds.  You reside in my heart forever!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top