(2235)

(2235)

வெற்பென் றிருஞ்சோலை வேங்கடமென் றிவ்விரண்டும்

நிற்பென்று நீமதிக்கும் நீர்மைபோல், – நிற்பென்

றுளங்கோயி லுள்ளம்வைத் துள்ளினேன், வெள்ளத்

திளங்கோயில் கைவிடேல் என்று.

 

பதவுரை

வெற்பு என்ற

(தெற்கு) திருமலை யென்னப்படுகிற

இருஞ்சோலை

திருமாலிருஞ் சோலையென்ன

வேங்கடம்

திருவேங்கடமென்ன

என்ன இவ் இரண்டும்

ஆகிய இத்திருமலை களிரண்டும்

நிற்பு என்று

நாம் உகந்து வாழுமிடமென்று

நீ மதிக்கும் நீர்மை போல்

நீ திருவுள்ளம்பற்றி யிருக்குந் தன்மையை உடைத்தாயிருப்பது போலவே

உளம் கோயில்

(என்னுடைய) ஹ்ருதயமாகிற கோயிலும்

நிற்பு என்று

நீ உகந்து வாழுமிடமென்று

உள்ளம் வைத்து

பிரதிபத்தி பண்ணி

வெள்ளத்து இள கோவில்

திருப்பாற்கடலாகிற பாலாலயத்தை

கைவிடேல் என்று

கைவிட வேண்டா என்ற

உள்ளினேன்

பிரார்த்திக்கின்றேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் திருவுள்ளமுவந்து வாழுந் திருப்பதிகளில் எவர் விருப்பம் பண்ணுக்கின்றனரோ, அவர்களுடைய நெஞ்சிலே எம்பெருமான் உவந்து வந்து எழுந்தருளியிருப்பனன்றோ, அப்படியே திருமலை முதலிய திருப்பதிகளில் ஆதரம் விஞ்சப்பெற்ற இவ்வாழ்வாருடைய திருவுள்ளத்தில் எம்பெருமான் வந்து சேர்ந்து “தென்னனுயர் பொருப்புந் தெய்வவடமலையும்“ என்னப்படுகிற திருமாலிருஞ சோலைமலை திருவேங்கட மலைகளில் தான் பண்ணிப்போந்த விருப்பத்தை இவர் தம்முடைய திருவுள்ளத்திலே செய்து போருகிறபடியே ஒரு சமத்காரமாக வெளியிடுகிறார்.

ஸ்ரீவசநபூஷணத்தில் –“கல்லுங்கனைகடலு மென்கிறபடியே இது ஸித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும். இளங்கோயில் கைவிடேல் என்று இவன் பிரார்த்திக்க வேண்டும்படியாயிருக்கும்“ என்றருளிச் செய்தது இப்பாசுரத்தை உட்கொண்டதேயாம்.

திருமாலிருஞ் சோலைமலையென்றும் திருவேங்கடமலை யென்றுஞ் சொல்லப்படுகிறது இரண்டு திருமலைகளில் நீ எவ்வளவு மகிழ்ச்சியுடன் வாழ்கின்றாயோ அவ்வளவு மகிழ்ச்சியோடே என்னுடைய ஹ்ருதபமாகிற கோயிலிலும் வாழ்கின்றாய் என்று கண்டறிந்த அடியென் “வெள்ளத் திளங்கோயில் கைவிடேல்“ என்று பிரார்த்திக்கின்றேனென்கிறார். இதன் கருத்துயாதெனில் – திருப்பாற்கடலானது எல்லா அவதாரங்களுக்கும் மூலக்கிழங்கு எனப்படும் “ஏஷ நாராயண ஸ்ரீமாந் க்ஷீரார்ணவநிகேதந நாகபர்யங்க முதஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் – திருப்பாற்கடல் நாதனான ஸ்ரீமந்நாராயணன் சேஷசயனத்தை விட்டிட்டு வடமதுரையில் வந்து பிறந்தான்“ என்றாற்போலே ராமக்ருஷ்ணாதி விபவாவதாரங்களும் மற்றும் அர்ச்சசாவதாரங்களுமெல்லாம் திருப்பாற்கடல் மூலமாகவே நிகழ்வதாகக் கொள்ளுங்கொள்கை வைதிகர்களுக்கு உள்ளது. இக்காரணம்பற்றித் திருப்பாற்கடல் இளங்கோவில்“ எனப்படும். (அதாவது – பாலாலயம் என்றபடி, இக்காலத்தும் திருகோயில்களில் எம்பெருமான் திருமேனியை ஜீர்ணோத்தாரணம் செய்ய நேரும்போது பாலாலயப்ரதிஷ்டை செய்வது வழக்கமாயிருப்பது காண்க. வேறொரு பெருங்கோயிலிற் சென்று சேர்வதற்கு உறுப்பாக (பூர்வமாக) சிறுகக் கொள்ளுங் கோயிலை பாலாலய மென்கிறது) திருமலை முதலிய திவ்யதேசங்களும் அன்பருடைய ஹ்ருதயமுமாகிற பெருங்கோயில்களிற்சென்று சேர்ந்து வாழ்வதற்குப் பூர்வாங்கமாகவே எம்பெருமான் திருப்பாற்கடலில் வாழ்வதாக ஆழ்வார்கள் அநுஸந்திப்பர்களாதலால் இந்த அநுஸந்தானத்திற்கு இணங்க. திருப்பாற்கடலை இளங்கோயில் (பாலாலயம்) ஆகச் சொல்லுதல் பொருத்தமுடைத்தே பெருங் கோயிலிற்சென்று சேர்ந்த பின்பு இளங்கோயிலில் ஆதரம் இருக்க ப்ரஸக்தியில்லாமையாலே எம்பெருமானுக்கும் தமது திருள்ளமாகிற பெருங்கோயிலில் வாழ்ச்சி அமைந்தபின்பு இளங்கோயிலாகிய திருப்பாற்கடலில் ஆதரம் குறைந்துவிடுமென்றறிந்த ஆழ்வார். ‘பிரானே! அவ்விளங்கோயிலில் நீ ஆதரத்தைக் குறைத்துக்கொள்ளலாகாது. என்னுள்ளத்தில் வந்து சேர்வதற்கு அவ்விடம் பூர்வாங்கமாயிருததனால் அதுதன்னில் அடியேன் நன்றி பாராட்டக் கடவனாதலால் அந்த நன்றியறிவின் காரியமாகப் பிரார்த்திக்கின்றேன் – அவ்விடத்தை நீ ஒரு நாளும் கைவிடலாகாது‘  என்று – என்கிறார்.

இதனால் 1. “பனிக்கடலிற் பள்ளிகோளைப் பழகவிட்டு ஓடிவந்தென் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ!“ என்னுமாபோலே திருப்பாற்கடைலையும் உபேக்ஷித்துவிட்டுத் தம் ஹ்ருதயத்திலே வந்து சேரும்படியான வ்யாமோஹம் எம்பெருமானுக்கு விளைந்தமை வெளியிடப்பட்டதாயிற்று. ப்ரஸக்தியுள்ளதற்கே ப்ரதிஷேதங்கூடும்“ என்பது சாஸ்த்ரஜ்ஞர் வார்த்தையாகையால், ‘வெள்ளத்திளங் கோயில் கைவிடேல்‘ என்று ஆழ்வார் பிரதிஷேதிக்கும்போது எம்பெருமான் திருப்பாற்கடலைக் கைவிடத் தொடங்கினான் என்பது அவசியம்  விளங்குகின்றமையால் இப்படி திருப்பாற்கடலையும் கைவிடும்படியான விபாமோஹம் அவனுக்கு உண்டாயிற்றென்பதைத் தெரிவிப்பதே இப்பாசுரத்தின் பரமதாற்பரியமாகுமென்க.

 

English Translation

The hill resorts of venkatam and mairumsolai are your two favoured abodes, and equally my heart too has become your abode. But pray do not leave the ocean of Milk, your temporal abode, O Lord!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top