(2223)

(2223)

நினைப்பன் திருமாலை நீண்டதோள் காண,

நினைப்பார் பிறப்பொன்றும் நேரார், – மனைப்பால்

பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்ப மெல்லாம்,

துறந்தார் தொழுதாரத் தோள்.

 

பதவுரை

திருமாலை

லக்ஷ்மீநாதனான எம்பெருமானை

நீண்ட தோள் காண நினைப்பான்

(அவனது) சிறந்த திருத்தோள்  களைக் கண்டு அநுபவிப்பதற்காக நினைக்கின்றேன்.

நினைப்பார்

இப்படி நினைப்பவர்கள்

ஒன்று பிறப்பும் நேரார்

ஒருவகை யோனிப் பிறப்பையும் அடையமாட்டார்கள்

அத்தோள்

அந்தத் திருத்தோள்களை

தொழுதார்

தொழுமவர்கள்

மனைப்பால் பிறந்தார் பிறந்து எய்தும் பேர் இன்பம் எல்லாம துறந்தார்

ஸம்ஸாரத்தில் பிறந்தவர்கள் ஜன்ம மெடுத்ததனால் அடையக்கூடிய சிற்றின்பங்களை யெல்லாம் வெறுப்பவராவர்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ஸம்ஸார போகங்களைத் துறந்து அவனை அநுஸந்திக்குமவர்களே பிறவிகளை அடியறுக்கவல்லவரென்கிறார். திருமாலை நீண்டதோள்காண நினைப்பன் – ஐச்வரிய மளிக்கவேணுமென்றும் ஸந்தான மளிக்கவேணுமென்றும் பலபல கோரிக்கைகளை முன்னிட்டு எம்பெருமானைப்  பலர் அடிபணிவ ராகிலும் நான் அப்படி ஒரு கோரிக்கையும் கருதினவனல்லேன், “தோள் கண்டார் தோளே கண்டார்“ என்னும் படியான அவனது தோளழகை ஸேவிக்கப்பெற வேணுமென்பது தவிர வேறோராசையும் எனக்கில்லை என்றவாறு, இப்படி எம்பெருமானுடைய திவ்யாவயவத்தை ஸ்லயம் போக்யமாக நினைப்பவர்கள் “பொய்ந்நின்ற ஞானமும் பொல்லா வொழுக்கு மழுக்குடம்பு மிந்நின்ற நீர்மை இனியாமுறாமை“ என்று ஆழ்வார் பிரார்த்தித்த பிறப்பின்மையைப் பெற்று நித்ய முக்தராய் வாழ்ந்திடுவர்.

இனிமேல் பிறக்கமாட்டார்களென்பதுந்தவிர, இப்பிறவியிலும் ஸம்ஸாரிகள் உகக்கிற சிற்றின்பங்களை உகவாதே அவற்றைக் காறியுமிழ்ந்து கைவிடும்படியான விரக்தியும் பெறுவார்கள் அவனது திருத்தோள்களை ஸேவிக்குமவர்கள் – என்கிறார் பின்னடிகளில்.

பின்னடிகளை இரண்டுவகையாக யோஜிக்கலாம். அத்தோள் தொழுதார் (எவரோ அவரே) மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தாராவர், மனைப்பால் பிறந்தார் பிறந்தெய்தும் பேரின்பமெல்லாம் துறந்தார் எவரோ அவரே அத்தோள் தொழுதாராவர் – என்று. சிற்றின்பங்களை வெறுத்தவர்களே எம்பெருமானுடைய வடிவழகில் ஈடுபட்டவராவர், எம்பெருமானுடைய வடிவழகில் ஈடுபட்டவர்களே சிற்றின்பங்களை வெறுக்க வல்லவராவர் – என்றவாறு.

மனைப்பால் – பால –ஏழனுருபு. சிற்றின்பத்தைப் பேரின்பம் என்றுசொல்லாற் சொன்னது எதிர்மறை யிலக்கணையாம், ஸம்ஸாரிகளுடைய நினைவாலே பேரின்ப மென்கிறது.

எம்பெருமானார் ஒரு நாள் உச்சிப்போதில் திருக்காவிரியிலே மாத்யாஹ்நிகம் அநுஷ்டித்துக் கொண்டிருக்கையில் ஒருகாமுகன் தன்னுடைய மனைவியை அழைத்துக்கொண்டு அக்கரையில் நின்றும் ஆற்றிலே வரும்போது வெய்யிலின் கடுமையினால் அவளுக்கு வாட்டம் வாராமைக்காக அவன் அவளுக்கு நடைபாவாடை போட்டுக்கொண்டும் குடைபிடித்துக் கொண்டும் மற்றும் பல உபசாரங்கள் செய்து கொண்டும் மிக்க ஆதரந்தோற்ற அழைத்துக் கொண்டு வருவதை எம்பெருமானார் கண்டு ‘அப்படி! இவ்வளவு உபசாரங்கள் பண்ணுகிறாயே, என்ன விசேஷம்?‘ என்று கேட்டருள, இவளுடைய கண்ணழகிலே நான் மிகவும் ஈடுபட்டிருப்பேன், அதற்கொரு குறைபாடு நேராமைக்காக உபசாரங்களைப்பண்ணி வருகிறேன். என்று அவன் விடையளிக்க, அதை எம்பெருமானார் கேட்டு ‘இதனிலும் விஞ்சிய அழகுவாய்ந்த கண்களை நீ கண்டதில்லையோ?‘ என்ன, ‘எங்குங் கண்டதில்லை‘ என்று அவன் சொல்ல, ‘அப்படிப்பட்ட கண்களைக்காட்டினால் என்ன செய்வாய?‘ என்று உடையவர் கேட்க, ‘இங்ஙனே ஸகல உபசாரங்களும் அங்கே பண்ணக்கடவேன்‘ என்று விடையளிக்க, அப்போதே நம்பெருமாள் ஸ்ந்நிதியி னுள்ளே அழைத்துக்கொண் டெழுந்தருளி 1. “அரங்கத்தமலன் முகத்துக் கரியவாகிப்புடை பேதைமை செய்தனவே“ என்னப்பட்ட திருக்கண்களை ஸேவிக்கப் பண்ணினவாறே அத்தம்பதிகளிருவரும் அத்திருக்கண்களுக்கு அற்றுத் தீர்ந்தனர் என்றொரு இதிஹாஸம் ப்ரஸித்தம் இதனை இப்பாட்டின் பின்னடிகளுக்குப் பொருத்தமாக அநுஸந்திப்பது.

 

English Translation

The Lord is Tirumal, whom I contemplate. Those who contemplate him are freed of further birth. The realsied souls who do take birth in this world sacrifice all household pleasures and worship him alone.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top