(2189)
உகந்துன்னை வாங்கி ஒளிநிறங்கொள் கொங்கை
அகம்குளிர வுண்ணென்றாள் ஆவி, – உகந்து
முலையுண்பாய் போலே முனிந்துண்டாய், நீயும்
அலைபண்பா லானமையால் அன்று.
பதவுரை
|
(பூதனையானவள்) |
||
|
உகந்து |
– |
யசோதைப் பிராட்டியைப் போல அன்புடையவளாக அபிநயஞ்செய்து |
|
உன்னை வாங்கி |
– |
(நீ தூங்கும்போது வந்து) உன்னைத்தூக்கியெடுத்து |
|
ஒளிநிறம் கொள் கொங்கை |
– |
(பால் விம்மியிருத்தலால்) ஒளிவிட்டு அழகுபெற்றுள்ள (தனது) ஸ்தனத்தை |
|
அகம் குளிர உண் என்றான் |
– |
(‘குழந்தாய்!) மனமகிழ்ந்து உண்ணு’ என்று சொல்லிவாயிலே வைத்தாள். |
|
ஆனமையால் |
– |
ஆகையினாலே, |
|
அன்று |
– |
அவள் முலைதந்த; அக்காலத்தில் |
|
நீயும் |
– |
சிறு குழந்தையான நீயும் |
|
அலை பண்பால் |
– |
அலையெறிகிற (அதிகமான) உன் ஸௌலப்ய குணத்தினாலே |
|
முலை உண்பாய் போலே |
– |
மெய்யே ஸ்தன்யபானஞ்செய்பவனைப் போலே |
|
உகந்து |
– |
(பெறாப்பேறு பெற்றாற் போலே) மகிழ்ந்துகொண்டு |
|
முனிந்து |
– |
(மனத்தில்) சீற்றங் கொண்டு |
|
ஆவி |
– |
(அந்தப் பூதனையின்) உயிரை |
|
உண்டாய் |
– |
உறிஞ்சி உட்கொண்டாய். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பேய்ச்சியின் முலைப்பாலை அமுதமாகவுண்ட கதையை அநுஸந்தித்து ஈடுபடுகிறார். கண்ணபிரானைப்பெற்ற தாயான தேவகியினது உடன்பிறந்தவனாய் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீபுத்திரன் ஒளித்து வளர்தலையறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசுரர்களை ஏவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த க்ருஷ்ண சிசுவையெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்கிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தானென்பது கதை.
வந்த பேய்ச்சி யசோதையான பாவனையோடு வந்தாவாகையாலே அவளுடைய பரிவு போன்ற பரிவை ஏறிட்டுக்கொண்டது பற்றி ‘உகந்து’ எனப்பட்டது. 1. “ஒரு முலையை வாய்மடுத்து ஒரு முலையை நெருடிக்கொண்டு, இரு முலையும் முறை முறையா ஏங்கியேங்கி யிருந்துணாயே” என்னும்படியாகப் பால் விம்மியிருந்ததனால் ‘ஒளிநிறங் கொள்கொங்கை’ எனப்பட்டது. ,. “நந்தன் பெறப்பெற்ற நம்பீ! நானுகந்துண்ணுமமுதே! எந்தை பெருமானே! உண்ணாய் என்னம்மம் சேமமுண்ணாயே” ‘. “உருகியென் கொங்கையின் தீம்பால் ஓட்டந்து பாய்ந்திடுகின்ற மருவிக்குடங்காலிருந்து வாய்முலையுண்ண நீவாராய்’ என்று யசோதை ஆவலோடு சொல்லுமா போலே பூதனையும் சொன்னமைதோற்ற ‘அகங்குளிரவுண்ணென்றாள்’ எனப்பட்டது. அவள் தாயான பாவனையிலே எவ்வளவு அன்பு அபிநயித்தாளோ, அவ்வளவு அன்பை இவனும் மகனான பாவனையிலே அபிநயித்தமை தோற்ற “உகந்து முலையுண்பாய்போலே” எனப்பட்டது. ஈற்றடியிலுள்ள “ஆனமையால்” என்பதை இரண்டாமடியிற் கூட்டிக்கொள்க.
அலைபண்பால் = இதன் அருமையான பொருள் குறிக்கொள்ளத்தக்கது. பண்பாவது குணம்; அலையெறிகின்ற குணம் என்றது – அளவுகடந்த குணம் என்றபடி. “மித்ரபாவேநி ஸம்ப்ராப்தம் நி த்யஜேயம் கதஞ்சந்” (மெய்யான அன்போடு வராவிட்டாலும் மித்திரன் என்கிற பாவனை கொண்டுவந்தாலும் அன்னவனையும் நான் எவ்விதத்திலும் விடமாட்டேன்) என்று உறுதியாகச் சொல்லியுள்ள எம்பெருமான் ப்ரீதிபாவனையோடு வந்த பேய்ச்சியைக் கொன்றது ஏனென்றால் அவளைக்கொன்று உலகுக்கு ஓருயிரான தன்னைக் காப்பாற்றிக் கொள்வதானது உலகமுழுமைக்கும் உயிரளித்ததாக ஆகிறபடியால், இந்த மஹாகுணத்தை வெளியிடவேண்டிய அவளைக் கொன்றானென்க.
English Translation
Joyously taking you to her poisoned breasts, the ogress gave you suck, as if you were on innocent child. But you took her breast milk and her life then!
