(2185)
நகரிழைத்து நித்திலத்து நாண்மலர் கொண்டு, ஆங்கே
திகழும் அணிவயிரம் சேர்த்து, – நிகரில்லாப்
பைங்கமல மேந்திப் பணிந்தேன் பனிமலராள்,
அங்கம்வலம் கொண்டான் அடி.
பதவுரை
|
நகர் இழைத்து |
– |
என்னுடைய நெஞ்சை எம்பெருமான் வாழக்கூடிய திருமண்டபமாக அமைத்து |
|
நித்திலத்து நாள் மலர் கொண்டு |
– |
(அதிலே) ஸ்நேஹமாகிற முத்தை செவ்விகுன்றாத புறவிதழாக அமைத்து |
|
திகழும் மணி வயிரம் சேர்த்து |
– |
ஸங்கம காமம் என்கிற நல்ல மாணிக்கத்தையும் வயிரத்தையும் அல்லியும் தாதுமாக வைத்து |
|
நிகர் இல்லா |
– |
ஒப்பில்லாத |
|
பைங் கமலம் ஏந்தி |
– |
பக்தியாகிற அழகிய தாமரைப்பூவைத் தரித்துக்கொண்டு |
|
பனி மலராள் அங்கம் வலம் கொண்டான் |
– |
குளிர்ந்த தாமரைப் பூவிற் பிறந்த பிராட்டியை வலமார்பினில் வைத்துக்கொண்டிருக்கும் பெருமானுடைய |
|
அடி |
– |
திருவடிகளை |
|
பணிந்தேன் |
– |
வணங்கினேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்பாசுரம் பெரும்பாலும் ரூபகாதிசயோக்தியலங்காரம் கொண்டுள்ளது. அதாவது – விஷயங்களை மறைத்தும் ரூபகமாக்கியும் பேசுகிறது. திருமா மகள் பொகுநனான எம்பெருமானை என்னுடைய நெஞ்சிலே எழுந்தருளப்பண்ணி உயர்ந்த பக்திப் பெருங்காதலைக் காட்டினேன் என்று சொல்ல நினைத்த விஷயத்தை ஒரு சமத்காரமாகச் சொல்லுகிறார்.
நகரிழைத்து – ராஜாக்கள் வஸிக்குமிடம் நகரமெனப்படும்: தேவாதி தேவனான எம்பெருமான் உவந்து வஸிக்குமிடம் பக்தர்களுடைய ஹ்ருதயமேயாகையாலும் இவ்வாழ்வார் தாமும் பக்தசிரோமணியாகையாலும் இவர் தம்முடைய திருவுள்ளத்திலேயே உவந்து வஸிப்பதென்பது திண்ணம்; ஆகவே ‘நகரிழைத்து’ என்றது – என்னுடைய நெஞ்சை அவனுக்கு ‘உறைவிடமாக்கி’ என்றபடி.
அரசர்களை ஆந்தப்படுத்த விரும்புமவர்கள் தாமரை முதலிய நல்ல புஷ்பங்களைக்கொண்டு பணிவதுபோல, தாமும் எம்பெருமானை நல்லதொரு புஷ்பமிட்டுப் பணிந்தமை சொல்லுகிறார்மேலே. நிகரில்லாப் பைங்கமலமேந்திப் பணிந்தேன் என்று. சாஸ்த்ரங்களில் (அஹிம்ஸை, இந்த்ரிய நிக்ரஹம், ஸர்வபூததயை, பொறுமை, ஞானம், தபஸ், த்யாநம், ஸத்யம் என்னுமிவை யெட்டும் எம்பெருமானுக்கு ப்ரீதிகரமான எட்டுவகைப் புஷ்பங்கள்) என்று சொல்லியிருப்பதுபோல, இங்கு இவ்வாழ்வார் பகவத் விஷய பகதியை நிகரில்லாத தாமரைப்பூவாகக் கருதுகின்றனர். தாமரைப்பூவென்றால் அதற்குப் புறவிதழ் அகவிதழ் முதலானவை இருக்குமே; அவற்றின் ஸ்தானங்களிலே ஸ்நேஹம் ஸங்கம் காமம் என்கிற பக்தியின் பருவ விசேஷங்களையிட்டுப் பேச நினைத்து, அவற்றையும் நேரே சொல்லாமல் முத்தும் மணியும் வயிரமுமாக உருவகப்படுத்திப் பேசுகின்றார். “நிகரில்லாப் பைங்கமல” மென்றது பொற்கமலத்தையாகையால் அதற்கிணங்க முத்தையும் மணியையும் வயிரத்தையும் சொல்ல வேண்டிற்று. முதலடியில், மலர் என்றது மலரிதழைச் சொன்னபடி: ஆகுபெயர். புறவிதழின் ஸ்தானத்திலே முத்தாகச் சொல்லப்பட்ட ஸ்நேஹமும், அகவிதழின் ஸ்தானத்திலே மாணிக்கமாகச் சொல்லப்பட்ட ஸங்கமும், தாதின் ஸ்தானத்திலே வயிரமாகச் சொல்லப்பட்ட காமமும் கமலமென்னப்பட்ட பக்தியின் அவஸ்தாபேதங்களென்க.
நித்திலம் – வடமொழியில், ‘நிஸ்தலம்’ என்கிற சொல் முத்து என்னும் பொருளதாகக் கவிகளால் பிரயோகிக்கப்படுகிறது. அதிவித்ருமமஸ்த நிஸ்தலாளீருசம்” என்று வரதராஜஸ்தவத்திலே கூரத்தாழ்வானும் பிரயோகித்தருளினர். அந்த நிஸ்தலமென்னும் வடசொல்லே தமிழில் நித்திலமென்ற திரிந்து கிடப்பதாகக் கொள்க. இது தனியே ஒரு தமிழ்ச்சொல் என்பர் சிலர்.
English Translation
In that city, under a canopy of peals, gems and diamonds and strings of fresh flowers, the Lord is seated with the lotus-dame Lakshmi, borne on his right, I worship his feet.
