(1318)
கவள யானைக் கொம்பொசித்த கண்ண னென்றும், காமருசீர்க்
குவளை மேக மன்னமேனி கொண்ட கோனென் னானையென்றும்,
தவள மாட நீடுநாங்கைத் தாம ரையாள் கேள்வனென்றும்,
பவள வாயா ளென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.
பதவுரை
|
பவளம் வாயாள் என் மடந்தை |
– |
பவழம்போற் சிவந்த அதரத்தையுடையளான என் பெண்ணானவள் |
|
கவளம் யானை கொம்பு ஒசித்த கண்ணன் என்றும் |
– |
கபளம் கபளமாக உணவை யூட்டி மா மூட்டப்பட்ட (குவலயாபீடமென்னும்) யானையினுடைய தந்தைகளை முறித்தொழித்த கண்ணபிரான் என்று சொல்லிக்கொண்டும் |
|
காமரு சீர் |
– |
ஆரைப்படத் தகுந்த அழகையுடைய |
|
குவளை மேகம் அன்ன |
– |
கருநெய்தற் பூவென்ன காளமேக மென்ன இவற்றோடொத்த |
|
மேனி கொண்ட |
– |
திருமேனியையுடைய |
|
கோன் (என்றும்) |
– |
ஸ்வாமியென்று சொல்லிக்கொண்டும் |
|
என் ஆனை என்றும் |
– |
என்னுடைய யானை என்று சொல்லிக்கொண்டும் |
|
தவளம் மாடம் நீடு நாங்கை |
– |
வெண்மையான மாடமாளிகைகளினால் நீண்டிருக்கிற திருநாங்கூரில் வாழ்கிற |
|
தாமரையாள் கேள்வன் என்றும் |
– |
லக்ஷ்மீநாதன் என்று சொல்லிக் கொண்டும் |
|
பார்த்தன் பள்ளி பாவொள் -. |
– |
பார்த்தன்பள்ளி யென்னுந் திருப்பதியைப் பாடா நின்றாள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருமங்கை யாழ்வாராகிற பரகாலநாயகியைப் பெற்றெடுத்த திருத்தாயார், பார்த்தன்பள்ளிப் பெருமானிடத்தில் தன் மகள் காதல்கொண்டு இருக்கிறபடியை வெளியிட வேண்டி மகளுடைய வாய்மொழிகள் இருக்கும் படிகளை ஒவ்வொரு பாசுரத்திலும் ஒவ்வொரு வகையாகக் கூறுகின்றாள்.
என் கணவன் செய்த அருமைச் செயல்கள் உங்கட்குத் தெரியுமா? கம்ஸன் தனது மதயானையைக் கொழுப்பேற்றி என் கணவனைக் கொல்லுமாறு அரண்மனை வாயிலில் நிறுத்தி வைத்தான்; இவனோ சேற்றிலிருந்து கொடியை இழுப்பவன்போல அதன் தந்தங்களை எளிதிற் பறித்திட்டு அதனை உயிர் தொலைத்திட்டான்; அப்படிப்பட்ட சூரன் காண்மின் என் கணவன் – என்கிறாள்.
அதற்குமேல் திருமேனி நிறத்தைப்பற்றிச் சொல்லத்தொடங்கி, குவளைப் பூப்போலும் காளமேகம்போலும் கறுத்துக் குளிர்ந்து கண்ணைக் கவரும் நிறமன்றோ என் கணவனது நிறம் – என்கிறாள். யானையை எத்தனை தடைவைப் பார்த்தாலும் ஒவ்வொரு தடவையிலும் அபூர்வ வஸ்துவாகியே ஆநந்தாவஹமாயிருப்பதுபோல, அப்பொழுதைக்கப்பொழுது ஆராவமுதமாயிருப்பன் என் கணவன் – என்கிறாள். அவனெழுந்தருளியிருக்கும் ராஜதானியின் சிறப்பும் பெயரும் உங்கட்குத் தெரியுமோ? வெள்ளிய சாந்திட்டுப் பளபளவென்று விளங்குகின்ற மாடமாளிகைகள் ஓங்கியிருக்கப் பெற்ற திருநாங்கூரிலே ஸ்ரீமானாய் விளங்குமவன் காண்மின் அவன் – என்கிறாள். இவ்வளவும் சொல்லிவிட்டுப் பார்த்தன்பள்ளித் திருப்பதியின் திருநாமத்தையிட்டு இசைபாடத் தொடங்கிவிட்டான் – என்று திருத்தாயார் கூறினளாயிற்று.
கவள யானை – யானையின் உணவுக்குக் கவளம் என்று பெயர்; தீனிகளையிட்டு மதமூட்டப்பட்ட யானை என்றபடி, ‘காமம் தரு’ என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து ‘காமரு’ என விகாரப்பட்டது; ஆசையை விளைக்கின்ற என்றபடி. தவளம் – தவளம் என்பது வடசொல்.
பார்த்தன்பள்ளி – பார்த்தனென்று அர்ஜுநனக்குப் பெயர்; அர்ஜுநனுக்காகப் பள்ளிகொண்ட திருக்கோலமாய் ஸேவைஸாதிக்குமிடமென்பது பற்றி இத்தலத்திற்கு இத்திருநாமமாயிற்றென்பர்.
English Translation
“Hungry elephant’s tusk remover, -kanna, most adorable Lord!” “Hue of lotus!”, “Hue of dark cloud?”, “King and Elephant-master is he!” “Painted rising mansion Nangai Lord of Lotus Dame is he!” Lips of coral hue, my tender daughter sings of Parttan –Palli-O!
