(1089)

(1089)

பூண்டவத்தம் பிறர்க்கடைந்து தொண்டுபட்டுப் பொய்ந்நூலை மெய்ந்நூலென் றென்றுமோதி

மாண்டு,அவத்தம் போகாதே வம்மினெந்தை என்வணங்கப் படுவானை, கணங்களேத்தும்

நீண்டவத்தைக் கருமுகிலை எம்மான்தன்னை நின்றவூர் நித்திலத்தைத் தொத்தார்சோலை,

காண்டவத்தைக் கனலெரிவாய்ப் பெய்வித்தானைக் கண்டதுநான் கடல்மல்லைத் தலசயனத்தே.

 

பதவுரை

அவத்தம் பூண்டு

ஸ்வரூபத்தைக் கெடுக்கவல்ல காரியங்களை ஏறிட்டுக் கொண்டு

பிறர்க்கு அடைந்து

பிறரை(நீசர்களை) ஆச்ரயித்து

தொண்டுபட்டு

(அவர்களுக்கு)அடிமை செய்தும்

பொய் நூலை

அபத்தங்களான பாஹ்யமதச்சுவடிகளை

மெய்நூல் என்று

யதார்த்தமான சாஸ்த்ரமாகக் கொண்டு

என்றும்

எப்போதும்

ஓதி

(அந்தச் சுவடிகளையே) வாசித்துக்கொண்டிருந்து

மாண்டு

முடிந்து

அவத்தம் போகாதே வம்மின்

பாழாய்ப் போகாமல் (உஜ்ஜீவிக்க) வாருங்கள்;

எந்தை

எனக்குத் தந்தையானவனும்

என் வணங்கப்படுவானை

என்போல்வாரும் வணங்குதற்கு உரியவனும்

கணங்கள் ஏத்தும்

(ஞானிகளின்) கூட்டங்களாலே துதிக்கப்படுபவனும்

நீண்ட அத்தை

அளவிறந்த அப்படிப்பட்ட வஸ்துவாக உள்ளவனும்

கரு முகிலை

காளமேகம் போன்றவனும்

எம்மான் தன்னை

அஸ்மத் ஸ்வாமியானவனும்

நின்றவூர் நித்திலத்தை

திருநின்றவூரில் (எழுந்தருளியிருக்கிற) முத்துக்கோவை போலக் குளிர்ந்த வடிவையுடையவனும்

தொத்து ஆர் சோலை காண்டவத்தை

பூங்கொத்துகள் நிறைந்த சோலைகளையுடைய காண்டவவனத்தை

கனல் எரிவாய் பெய்வித்தானை

ஜ்வலிக்கிற அக்நியினுடைய வாயிலே புகுவித்தவனுமான பெருமானை

நான் கண்டது கடல்மல்லைத் தலசயனத்தே-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தலசயனத்துறைவாரைத் தாம் ஸேவிக்கப் பெற்றதுபோல உலகிலுள்ளாரெல்லாரும் ஸேவிக்கப் பெறவேனுமென்கிற ஆசையினால், இங்கே ஸேவிக்க வாருங்களென்று மற்றும் பலரையும் அழைக்கிறார்.  வயிற்றுப் பிழைப்புக்காகப் பிறர்க்கு அடிமைப்பட்டுக் காலத்தைப் பாழாக்குவாரும், வேதபாஹ்யர்கள் வேதகுத்ருஷ்டிகள் என்று சொல்லப்படுகிற மதாந்தரஸ்களின் திரளிலே புகுந்து ஸ்வரூபநாசம் அடைவாரும் பலருண்டாகையாலே அவர்களையும் விடமாட்டாத காருண்யத்தினால் அவர்களையும் மங்களாசாஸநத்திற்கு ஆளாக்கிக் கொள்ளப் பாரிக்கிறார்.

அவத்தம் பூண்டு ஸ்ரீ அவத்தமாவது அவத்யம்; பொல்லாங்கு;  ஸ்வரூபத்துக்கு ஹாநியை விளைக்கவல்ல காரியங்களைச் சொன்னபடி.  ஸாத்விகர்களோடு ஸஹவாஸம்.  வைதிக புருஷார்த்தங்களைப் பெற வேணுமென்னும் விருப்பம் முதலியவற்றைத் தவிர்ந்து, ராஜஸர்களோடும் தாமஸர்களோடும் உறவு பண்ணுதல், நரகத்துக்கு வழிதேடிக்கொள்ளுதல் முதலிய தீமைகளை ஏறிட்டுக்கொண்டு க்ஷத்ரமநுஷ்யர்களிடத்தில் இழி தொழில் செய்தும், மதாந்தரஸ்தர்கள் ப்ரமத்தினாலும் வஞ்சனையினாலும் தப்புந்தவறுமாக எழுதிவைத்த புத்தகங்களை மெய்யான சாஸ்த்ரமென்று கொண்டு  அவற்றோடே போது போக்கியும் பாழாய்ப்போகிற மனிசர்களே!  இவ்விதமாக நீங்கள் கெட்டுப்போகாமல் என் சொல்லை ஆதரித்து இப்படி வாருங்கள்-என்று ஆழ்வார் அன்பார்ந்த சிந்தையராய் அழைத்தவிடத்தலும் ஒருவரும் மீண்டுவரக்கானாமையாலே, அவர்களை விட்டொழிந்து. திருக்கடல்மல்லைப் பெருமானைத் தாம் ஸேவிக்கப்பெற்ற பாக்கியத்தை வாயாரச் சொல்லி மகிழ்கிறார்-எந்தையென் வணங்கப்படுவானை என்று தொடங்கி.

கணங்கள் ஏத்தும் = கணம்  என்ற வடசொல் கூட்டமென்று பொருள் பெறும்;  ஞானிகளான மஹான்கள் கூட்டங்கூட்டமாக வந்து நின்று ஏத்தும்படியாக வுள்ளவன் என்று கருத்து.

“நீண்டவத்தைக் கருமுகிலை” என்றும், “நீண்டவத்தக் கருமுகிலை” என்றும் பாடபேத முள்ளதாக வியாக்கியானம் காண்கிறது.  முந்தின பாடத்தில் ஒருவகையாலும் அளவிடமுடியாத வஸ்துவாகவுள்ளவனை என்று பொருள்.  பிந்தின பாடத்தில், ‘ஹஸ்தம்’ என்னும் வடசொல் அத்தம் எனத்திரிந்திருப்பதாகக் கொள்க;  யாசகர்கள் இருக்குமிடம் வரையில் நீண்டு செல்லுகிற  திருக்கையையுடைய காளமேகமென்று பொருளாம். உலகத்திற் காண்கிற காளமேகத்தற்குக் கை இல்லையாயினும், நீண்ட திருக்கைகளையுடைய விலக்ஷ்ணமான காளமேகம் எம்பெருமான் என்கிறார் போலும்.

நின்றவூர் நித்திலத்தை = கீழ் இரண்டாந் திருமொழியில் ஆழ்வார் எவ்வுள் கிடந்தானை ஸேவித்த பின்பு திருவல்லிக்கேணிக்கு எழுந்தருள்வதற்கு முந்தியே திருநின்றவூரைச் சேர்ந்தார்; அத்திருப்பதியிலெழுந்தருளியுள்ள பத்தராவிப்பெருமாள் அப்பொழுது ஆழ்வார்க்கு முகங்கொடாமல் பிராட்டியோடு ஸரஸ ஸல்லாபம் செய்துகொண்டு பராங்முகமா யிருந்திடவே, ஆழ்வார் அத்திருப்பதியை விட்டு அப்பால் சென்று திருவல்லிக்கேணியையும் திருநீர்மலையையும் ஸேவித்து இப்போது திருக்கடல்மல்லையையடைந்து பெருமானை ஸேவித்து நிற்கும்பொழுது திருநின்ற வூரெம்பெருமான் திருமகளால் தூண்டப்பட்டு  இவ்வாழ்வார் திருவாக்கினால் பாடல்பெற்றுச் சிறப்புறக் கருதிக் கடன்மல்லையில் வந்து ஸேவைஸாதிக்க, இப்போது, “நின்றவூர் நித்திலத்தைக் கண்டதுநான் கடன்மல்லைத் தலசயணத்தே”  என்று – திருநின்றவூர்ப் பத்தராவிப் பெருமாளையும் இங்கே ஸேவிக்கப் பெற்றதாக அருளிச்செய்கிறாரென்று பெரியோர்களின் நிர்வாஹம்.

 

English Translation

Do not waste your time going to others and becoming their slaves, learning false texts as great truth, then losing your life to them. Come, my lord is extolled by hordes, he is eternal, he is the cloud hued one, standing in Tiruninravur, who swallowed the forest fire that ravaged kandava vana. I have seen him in Talasayanam at Kadal Mallai.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top