(1051)

(1051)

பாவி யாதுசெய் தாயென் னெஞ்சமே! பண்டு தொண்டுசெய் தாரை, மண்மிசை

மேவி யாட்கொண்டு போய்வி சும்பேற வைக்குமெந்தை,

கோவி நாயகன் கொண்ட லுந்துயர் வேங்க டமலை யாண்டு, வானவர்

ஆவி யாயிருப் பாற்கு அடிமைத் தொழில் பூண்டாயே.

 

பதவுரை

என் நெஞ்சமே

என் மனமே!

பாவியாது செய்தாய்

அலைபாயாமல் திண்ணிதான அத்யவஸாயம் கொண்டாய்;

பண்டு மண்மிசை மேவி

முன்பு இந்நிலத்திலே வந்தவதரித்து,

தொண்டு செய்தாரை ஆள் கொண்டுபொய்

அடிமை செய்தவர்களை ஆட்படுத்திக்கொண்டு போய்

விசும்பு ஏற வைக்கும் எந்தை

பரமபதத்திலே ஸ்தாபித்தருளும் ஸ்வாமியும்,

கோவி நாயகன்

கோபிகளுக்கு நாதனும்,

கொண்டல் உந்து உயர்

மேகங்களைத் தள்ளும்படியான உயர்த்தியையுடைய (சிகரங்கள் பொருந்திய)

வேங்கடம் மலை

திருமலையை

ஆண்டு

அரசாட்சி செய்துகொண்டு

வானவர் ஆவியாய் இருப்பாற்கு

ஞானிகளைத் தனக்கு உயிர் நிலையாகவுடையவனுமான அப்பனுக்கு

அடிமைத்தொழில் பூண்டாயே-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமான் இந்த மண்ணுலகத்திலே வந்து அவதரித்து, பக்தர்களிடத்தில் பல பல கைங்கரியங்களைக் கொண்டருளி அவ்வளவிலும் திருப்திபெறாமல் இன்னமும் இவர்களிடத்தில் நித்ய கைங்கரியங் கொள்ளவேணுமென்று அவர்களைத் திருநாட்டிலே கொண்டு வைக்குமவனாய் கோபால க்ருஷ்ணனான திருவேங்கடமுடையானுக்குத் தொண்டு பூண்டாயே நெஞ்சே! என்று உகக்கிறார்.

(பாவியாது செய்தாய்.) பாவித்தலாவது ஆராய்தல்;  ஆராயாதே செய்தாய் என்றதன் கருத்தாவது-அத்தைச் செய்வோமோ இத்தைச் செய்வோமோ என்று அலைபாயாமல் திண்ணிதான அத்யவஸாயம் கொண்டு தொண்டு செய்தாயே! என்கை. ‘ விஷயாந்தரங்களை அநுபவித்து ஸம்ஸாரியாய்க் கிடக்கலாமா, எம்பெருமானுக்குத் தொண்டு பூண்டு ஸ்வரூபம் நிறம் பெறலாமா? என்று தடுமாறாமல் சடக்கெனக் கைங்கரியத்தில் அந்வயிக்கப் பெற்றாயே! என்கை.

கோவிநாயகன் = (கோபீ) என்ற வடசொல் கோவியெனத் திரியும்;  ஆய்ச்சிகட்கு அன்பன் என்றபடி.

 

English Translation

O Heart! You did right. The cowherd Lord who accepts devotees on Earth and takes them to his heavenly abode resides in Venkatam where clouds touch the peaks. He is the soul of the celestials. Today you too have entered into his service.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top