(750)

(750)

அன்றுசரா சரங்களைவை குந்தத் தேற்றி அடலரவப் பகையேறி யசுரர் தம்மை

வென்றுஇலங்கு மணிநெடுந்தோள் நான்கும் தோன்ற விண்முழுது மெதிர்வரத்தன் தாமம் மேவி

சென்றினிது வீற்றிருந்த வம்மான் றன்னைத் தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்

என்றும்நின்றா னவனிவனென் றேத்தி நாளும் இன்றைஞ்சுமினோ வெப்பொழுதும் தொண்டீர் நீரே.

பதவுரை

அன்று

(தன்னடிச்சோதிக்கு எழுந்தருள்கிற) அந்நாளில்
சர அசரங்களை

(அயோத்யாபுரியிலுள்ள) ஜங்கமும் தாவரமுமான எல்லாவுயிர்களையும்
வைகுந்தத்து ஏற்றி

பரமபதத்துக்குப் போகச் செய்து
அடல் அரவம் பகை ஏறி

வலிமையையுடைய பாம்புகளுக்குப் பகையான கருடன் மேல் ஏறிக்கொண்டு
அசுரர் தம்மை வென்று

அசுரர்களை ஜயித்து
இலங்கும் அணி நெடு தோள் நான்கும் தோன்ற

(அந்த ஜயலக்ஷ்மி) விளங்கப் பெற்ற அழகிய நீண்ட (தனது) திருக்கைகள் நான்கும் விளங்க
விண் முழுதும்

பரமபதத்திலுள்ளாரெல்லாரும்
எதிர் வர

எதிர்கொண்டு உபசரிக்கும்படி
தன் தாமம் மேவி சென்று

தமது ஸ்தாநமான அப்பரமபதத்திலே போய்ப்புக்கு
இனிது வீற்றிருந்த

(தன் மேன்மையெல்லாம் தோன்றும்படி) இனிமையாகத் (திவ்யஸிம்ஹாஸநத்தில்) எழுந்தருளியிருந்த
அம்மான் தன்னை தில்லை நகர் திரு சித்ரகூடம் தன்னுள் என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி

ஸர்வேச்வரனை (அந்த இருப்பில் ஒன்றுங் குறையாமல் அவ்வாறே) தில்லைச் சித்ரக்கூடத்தில் எந்நாளும் (நமக்காக) நித்யவாஸம் பண்ணுகிற அப்பெருமான் இவ்விராமபிரானே யென்றறிந்து துதித்து
தொண்டீர் நீர்

அவனுக்கு அடியவர்களான நீங்கள்
நாளும் எப்பொழுதும்

தினந்தோறும் எப்பொழுதும்
இறைஞ்சு மின்

வணங்கி உஜ்ஜீவியுங்கள்

(ஏ – இசைநிறை.)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இளையபெருமாளை விட்டு பிரிந்ததனால் தரிக்கமாட்டாமல் மிகவும் க்லேஸமடைந்த இராமபிரான் ராஜ்யத்தை விட்டு எழுந்தருளத் தொடங்கியபோது அயோத்யா நகரத்து உயிர்களெல்லாம் பெருமாளைச் சரணமடைந்து தேவரீர் எங்குச் சென்றாலும் அடியோங்களையும் கூடவே அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்று பிரார்த்திக்க ஸ்ரீராமன் அவர்களுடைய பக்திப்ரகர்ஷத்தைக் கண்டு அப்படியே ஆகட்டும் என்று அருளிச்செய்து, அனைவரையும் தம்மைப் பின் தொடர்ந்து வருமாறு பணித்தருளிப் பிரயாணப்பட்டனர். அப்பொழுது அந்நகரத்திருந்த மனிதர்களேயன்றி விலங்கு பறவை முதலிய அஃறிணை உயிர்களும் அகமகிழ்ந்து பெருமாள் பின்சென்றன. இங்ஙனம் பலரும் புடைசூழ ஸ்ரீபகவான் ஸரயூநதியில் இறங்கித் தன்னடிச் சோதிக்கு எழுந்தருளும்போது தம்மிடத்து இடையறாத அன்புகொண்டு பின்பற்றிச் சரயுவில் மூழ்கி உடம்பைத் துறந்த எல்லாவுயிர்கட்கும் ப்ரஹ்மலோகத்துக்கு மேற்பட்டதாய் பரமபதம் போலவே அபுநராவ்ருத்தியாகிற மேம்பாடுள்ள ஸாந்தாநிகமென்னும் உலகத்தை அளித்தனர். ஸ்ரீராமபிரான் பரமபதத்துக்கு சென்றபோழ்து சங்க சக்கரங்களிரண்டையும் தரிக்கிற மேற்பாற் கரமிரண்டுந்தோன்றப் பெற்றமை விளங்க அசுரர் தம்மைவென்றிலங்கு மணிநெடுந்தோள் நான்குந்தோன்ற என்றார். இந்த அடைமொழியை வீற்றிருந்த என்பதனோடாவது சித்ரகூடந்தன்னுள் நின்றான் என்பதனோடாவது இயைத்தலும் ஏற்கும். அடலரவப் பகையேறி என்றது, தன்தாமமேவி என்றதனோடும் அசுரர் தம்மை வென்று என்றதனோடும் இயைக்கத்தக்கது.

English Translation

My sweet lord Rama then elevated all creatures, –moving and non-moving, –to Vaikunta, mounted his Garuda Vahana, destroyed the Asuras, took his glorious four-armed form, entered his abode in the sky to the tumultuous welcome of gods in throngs, and ascended his eternal throne. He resides in Tillainagar Tiruchitrakutam. Devotees come to praise and worship him there saying “that’s him”.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top