(739)
தேன்நகுமா மலர்க்கூந்தல் கெளசலையும் சுமித்திரையும் சிந்தை நோவ
கூனுருவில் கொடுந்தொழுத்தை சொற்கேட்ட கொடியவள்தன் சொற்கொண்டு இன்று
கானகமே மிகவிரும்பி நீதுறந்த வளநகரைத் துறந்து நானும்
வானகமே மிகவிரும்பிப் போகின்றேன் மனுகுலத்தார் தங்கள் கோவே.
பதவுரை
| மனுகுலத்தார் தங்கள் கோவே |
– |
மநுகுலத்திற் பிறந்த அரசர்களிற் சிறந்தவனே! |
| தேன் நகு மா மலர் கூந்தல் |
– |
தேனைப் புறப்பட விடுகிற சிறந்த மலர்களைச் சூடிய கூந்தலையுடைய |
| கௌசலையும் |
– |
கௌஸல்யையும் |
| சுமித்திரையும் |
– |
ஸுமித்ரையும் |
| சிந்தை நோவ |
– |
மனம் வருந்த |
| கூன் உருவின் கொடும் தொழுத்தை சொல்கேட்ட கொடியவள்தன்சொல் கொண்டு |
– |
வக்ரமான வடிவம் போலவே மனமுங் கோணலாகப் பெற்ற வேலைக்காரியான கூனியினது வார்த்தையைக் கேட்ட கொடியவளான கைகேயியின் சொல்லை ஏற்றுக்கொண்டு |
| கானகமே மிக விரும்பி இன்று நீ துறந்த |
– |
காட்டையே மிகவும் விரும்பி இப்பொழுது நீ கைவிட்ட |
| வளம் நகரை |
– |
(உன்பட்டாபிஷேகத்தின் பொருட்டு) அலங்கரிக்கப் பட்டிருக்கிற இந்நகரத்தை |
| நானும் துறந்து |
– |
நானும் விட்டிட்டு |
| வானகமே மிக விரும்பி போகின்றேன் |
– |
மேலுலகத்தையே மிகவும் விரும்பி (அவ்விடத்திற்குச்) செல்கின்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- மூன்று தாய்மார்களில் இரண்டுபேர் வருந்தவும் ஒருத்தி மகிழவும் நீ அயோத்தியை துறந்து கானகஞ் சென்றாயாதலின், நானும் இவ்வயோத்தியை துறந்து மேலுலகை நோக்கிச் செல்லுகின்றே னென்கிறான். கூனுருவின் = இன் – ஐந்தனுருபு ஒப்புப்பொருள். கொடுமை- தீமையேயன்றி வளைவுமாதலை கொடுங்கோல் கொடுமரம் என்ற இடங்களிலுங் காண்க. தொழுத்தை தொழும்பன என்பதன் பெண்பால். மநு-ஸூர்யனது குமாரன்; வைவஸ்வதமநு.
English Translation
O King of all mankind! Listening to the words of the cruel Kaikeyi, ill-advised by the notorious hunchback maid, you gladly went into the forest leaving the flower-coiffured Kousalya and Sumitra in grief. Today, I too leave this city you renounced, and gladly enter my abode in heaven.
