(677)

(677)

ஊனேறு செல்வத் துடற்பிறவி யான்வேண்டேன்

ஆனேறேழ் வென்றா னடிமைத் திறமல்லால்

கூனேறு சங்க மிடத்தான்தன் வேங்கடத்து

கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே

பதவுரை

ஆன் ஏறு ஏழ் வென்றான்

நப்பின்னைப் பிராட்டிக்காக ஏழு எருதுகளை ஜயித்தவனான எம்பெருமானுக்கு
அடிமை திறம் அல்லால்

கைங்கரியம் செய்வதையே நான் வேண்டுவதல்லாமல்
ஊன் ஏறு செல் வத்து உடல் பிறவி

நாளுக்கு நாள் மாம்சம் வளர்ந்து தடிப்பதாகிற செல்வத்தையுடைய இம்மனிதவுடம்பெடுத்துப் பிறத்தலை
யான் வேண்டேன்

(விவேகம் பெற்ற) நான் (இனி) விரும்பமாட்டேன்;

(அன்றியும்,)

கூன்  ஏறு சங்கம்

வளைந்திருக்கிற ஸ்ரீபாஞ்சஜந்யத்தை
இடத்தான் தன்

இடத்திருக்கையிலேயுடையனான எம்பெருமானுடைய
வேங்கடத்து

திருவேங்கட மலையில்
கோனேரிவாழும்

திருக்கோனேரி என்கிற ஸ்வரமி புஷ்கரிணியில் வாழ்கிற
குருகு ஆய் பிறப்பேன்

நாரையாகவாவது பிறக்கக் கடவேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவேங்கடமலையில் வாழ்ச்சி கிடைக்கப் பெற்றால், விவேகமற்றதொரு திர்யக் ஜாதியாகப் பிறப்பதும்,  அடியேனுக்குப் பரமோத்தேச்யமாகும்.  அத்திருமலை வாழ்ச்சிக்கு விரோதியான இம்மானிட வுடற்பிறவி எனக்கு ஒரு நாளும் வேண்டா, என்கிறார்.  அடிமைத் திறமாவது – திருவடி திருவனந்தாழ்வான் இளைய பெருமாள் முதலானவர்கள் போலப் பல படியாலும் ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலா வடிமைசெய்யும் வகை.

கோன் ஏரி – ஸ்வாமி புஷ்கரிணி.  இப்பெயர் ஸர்வலொக நிர்வாஹகனான எம்பெருமானுக்கு மிகவும் பிரியமான தடாகமெனப் பொருள்படும்.  அன்றி, எல்லாத் தீர்த்தங்களிலும் தலைமை பெற்ற தீர்த்தமென்றும் பொருளாகலாம்.  இந்த ஸ்வாமி புஷ்கரிணியின் சிறப்பு. வராஹபுராணம் முதலியவற்றின் பாக்கக் காணத்தக்கது.  திருமலையில் ஸந்நிதிக்கு அருகிலுள்ள பிரதானமாக திவ்யதீர்த்தம் இது.

உடல் பிறவி யான் வேண்டேன் ” என்று பிறவியை இகழ்ந்தவர் தாமே, ” குருகாய்ப் பிறப்பேனே “ என்று பிறவியை விரும்பினமையால், அங்கே பிறப்பது பிறப்பன்று, அது விரஜாநதியைச் சேர்ந்து வைகுண்டத்தில் வாழ்வதொக்குமென்று கருதினர்  என்பது விளங்கும்.  ஊன்,ஆண், கோன் என்பவற்றில், ன் – சாரியை,  குருகு என்ற சொல் – அன்னம் க்ரௌஞ்சம் என்ற நீர்வாழ் பறவைகளைக் குறிப்பதாகவும். பறவைப் பொதுப் பெயராகவும் வழங்கும்.

English Translation

I do not wish to enjoy the pain -ridden life that follows birth, if I cannot serve the feet of the lord in Venkatam, who stands holding a coiled conch on his left. May I be born as a penitent stork in the Swami Pushkarini tank there!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top