(479)

(479)

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்தங் கரிஎன்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

பதவுரை

புள்ளும்

பறவைகளும்
சிலம்பின காண்

(இரை தேடுகைக்காக எழுந்து) ஆரவாரங்கள் செய்யநின்றன காண்;
பன் அரையன்

பறவைத் தலைவனான பெரிய திருவடிக்கு
கோ

ஸ்வாமியான ஸர்வேச்வரனுடைய
இல்லில்

ஸந்நிதியிலே
வெள்ளை

வெண்மை நிறமுடையதும்
விளி

(அனைவரையும்) அழையா நிற்பதுமான
சங்கின்

சங்கினுடைய
பேர் அரவம்

பேரொலியையும்
கேட்டிலையோ

செவிப்படுத்துகின்றலையோ?
பிள்ளாய்

(பகவத் விஷயரஸ மறியப் பெறாத) பெண்ணெ!
எழுந்திராய்

(சடக்கென) எழுந்திரு;
பேய் முலை நஞ்சு

பூனையின் முலையில் (தடவிக் கிடந்த) விஷத்தை
உண்டு

(அவளது ஆவியுடன் அமுது செய்து
கள்ளம் சகடம்

வஞ்சனை பொருந்திய (அஸுரா விஷ்டமான) சகடமானது
கலக்கு அழிய

கட்டுக் குலையும்படி
கால்

திருவடியை
ஒச்சி

ஓங்கச் செய்தவனும்
வெள்ளத்து

திருப்பாற்கடலில்
அரவில்

திருவனந்தாழ்வான் மீது
துயில் அமர்ந்த

திருக்கண் வளர்ந்தருளின
வுpத்தினை

ஐகத்காரண பூதனுமான எம்பெருமானை
முனிவர்களும்

மநநசீலரான ரிஷிகளும்
யோகிகளும்

யோகப்பயிற்சியில் ஊன்றினவர்களும்
உள்ளத்து கொண்டு

(தமது) ஹ்ருதயத்தில் அமர்த்திக் கொண்டு
மெள்ள எழுந்து

(ஹ்ருதயஸ்தனான அவ்வெம்பெருமான் அசையாதபடி) ஸாவதாநமாக எழுந்து
அரி என்ற

‘ஹாரிர் ஹரிர் என்ற
பேர் அரவம்

பேரொலியானது
உள்ளம் புகுந்து

(எமது) நெஞ்சிற் புகுந்து
குளிர்ந்து

குளிர்ந்தது;

ஏல் ஓர் எம் பாவாய்

(இனியாகிலும் எழுந்திரு என்று ஒருத்தியை உணர்த்துகின்ற படி)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டு முதல், மேல் “எல்லேயிளங்கிளியே” என்ற பாட்டளவாகப் பத்துப் பாசுரங்களாலே அநுபோக்தாக்களைக் குறித்துத் திருப்பள்ளியெழுச்சி பாடப்படுகின்றது.  திருஷ்ணாநுபவத்திற்குப் பிரதான உபகரணமான கதாலும், ஏகாந்தமான காலமும், கோவலக்கிழவர்களின் இசைவும் பஞ்சலக்ஷங்குடியிற் பெண்களுக்கும் ஒருங்கே வாய்த்திருக்கையாலே அவரவர் தனித்தனியே அநுபவிக்க அமைந்திருக்க, ஒருவரை ஒருவர் சென்றெழுப்புவானென் எனில்; பெருக்காற்றில் இழிவார் துணையின்றி இழியமாட்டாதவாறுபோல’ “காலாழும் நெஞ்சழியுங் கண் சுழலும்” என்றும், “செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்தாட் செய்மின்” என்று மருளிச்செய்தபடி – இழிந்தாரைக் குமிழ் நீரூட்டவல்ல ஆழியானென்னுமாழமோழையில் இழியுமிவர்கள் துணையின்றி இழிய அஞ்சித் துணைகூட்டிக்கொள்வதற்காக ஒருவரை ஒருவர் உணர்த்துகின்றனரென்க.  அன்றியும், “ஏக: ஸ்வாது ந புஞ்ஜீத” “இன்கனி தினயருந்தான்” என்றபடி சுவைமிக்க பொருள் தனியே புஜிக்கத்தக்கதல்லாமையால் தோழிமார்களுடன் கூடிப் புசிக்கப் பாரிக்கின்றன ரென்றுங்கொள்க.

“வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிந்து” என்றபடி பகவத்ஸமாச்ரயணம் பாகவத புரஸ்கார பூர்வகமாகச் செய்யப்படவேண்டுதலால், அதனை அனுட்டித்துக் காட்டுகின்றனரென்பது, ஆழ்கருத்து.

இனி. அனைவர்க்கும் கிருஷ்ணாநுபவத்தில் அவா ஒத்திருக்குமாகில் சிலர் எழுப்பச் சிலர் உறங்குகை அவாவிற்குக் குறையன்றோ எனின்; அன்று; கண்ணபிரானது திவ்ய சேஷ்டிதங்களும் கல்யாண குணங்களும் சிலரை நஞ்சுண்டாரைப் போலே மயங்கப்பண்ணும்; சிலரை இருந்தவிடத்தில் இருக்கவொட்டாதே துடிக்கப் பண்ணும்; ஆகையால் அவாவிற்குக் குறையாமாறு ஒன்றுமின்றென்க.

இனி இப்பாட்டின் கருத்து:- முந்துற உணர்ந்த பெண் பிள்ளைகள், பொழுது வடிந்தமையையு மறியாமற் கிடந்துறங்குகின்றாளொருத்தியின் மாளிகை வாசலிற் சென்று சேர்ந்து பிள்ளாய்! விடிந்த பின்பும் இங்ஙனே கிடந்துறங்கலாகுமோ?’ என்று வெறுக்க, அதனைக் கேட்ட அவள் ‘பொழுது விடிந்தாலன்றோ எழுந்திருக்கவேண்டுவது; பொழுது விடிந்தமைக்கு அடையாளமேது? ஏன்று கேட்க; ‘நாங்கள் இங்ஙனே உணர்ந்துவந்தது அடையாளமாகவற்றன்றொ?’ என்று இவர்கள் கூற, அதற்கு அவள் ‘உறங்கினார் உணரிலன்றோ விடிந்ததாவது; “கண்ணாரக்கண்டு கழிவதோர் காதலுற்றார்க்கு  முண்டோ கண்கள் துஞ்சுதலே” என்றபடி உங்களுக்கு உறக்கந்தானில்லையே; ஆனபின்பு உங்களுணர்த்தி விடிவுக்கு அடையாளமாக மாட்டாது; வேறடையான முண்டாகிற் சொல்லுங்கள்’ என்ன; “புள்ளுஞ் சிலம்பினகாண்” என்று முந்துற ஓரடையாளங் கூறுகின்றனர்.  பறவைகள், மார்கழி நீராடவேணு மென்னும் விரைவுமின்றி, வைகி எழுந்திருக்கில் குற்றமுண்டென்னுமறிவுமின்றி யிருக்க உணர்ந்தது – காலமுணர்த்த உணர்ந்தபடியாதலால் இது போதுவிடிவுக்கு ஏற்ற அடையாளமாமென்பது இவர்களின் கருத்து.

இவ்வடையாளங் கூறக்கேட்ட அவள், ‘உங்களுணர்த்தி விடிவுக்கு அடையாளமாக மாட்டாதவாறு போலவே உங்களூரிலுள்ள பறவைகளின் உணர்த்தியும் விடிவுக்கு அடையாளமாக மாட்டாது;  “ஊரும் நாடு முலகமுந்தன்னைப் போலவனுடைய, பேருந்தார்களுமே பிதற்ற” என்றாற்போல நீங்கள் நுமதருகிலுள்ள அனைத்தையும் தமமோடொத்தன வாக்குமவரர்களன்றோ’ என்று கூற, அதனைவிட்டு வேறடையாளங் கூறுகின்றனர் – திருப்பள்ளியெழுச்சிக்கு ஊதின சங்கின் ஒலியும் செவியிற்பட்டதில்லையோ? என்கிறார்கள்.

கண்ணபிரானுடைய குணங்களில் ஈடுபட்டிருப்பார் உறையுமிடமான திருவாய்ப்பாடியிலும் கோயிலுண்டோ என்னில்; “ராமோ ராமோ ராம இதி ப்ரஜாநாமபவந்கதா:” என்று திருவயோதியில் சக்ரவர்த்தித் திருமகனாருடைய குணங்களிலே தோற்றுச் செல்லா நிற்கச்செய்தே, “ஸஹ பத்ந்யா விசாலாக்ஷயா நாராயணமுபாகமத்” என்று பெருமாள் பிராட்டியுடன் கூடிப் பெரியபெருமாளை உபாஸித்ததாகச் சொல்லிற்றிறே; அங்குப்போலே இங்கும் ஒரு திருக்கோயில் உண்டென்னலாம்.

புள் அரையன் – புள் என்றே பெரிய திருவடியைச் சொல்லிற்றாய், அரையன் என்று அவற்குத் தலைவனான எம்பெருமானைச் சொல்லிற்றாகவுமாம்.  இப்படி பெரிய திருவடியையிட்டு எம்பெருமானை நிரூபிக்கிறவிது – “ராமம் லக்ஷமணபூர்வஜம்” என்று இளைய பெருமாளையிட்டுப் பெருமாளை நிரூபித்தாற்போலுமென்ப.  எம்பெருமானை அடியார் பக்கலிற் கொண்டுவந்து கூட்டுமவன் கருடனாகையாலே அவனிடத்துள்ள உகப்புத் தோற்ற அவனையிட்டு நிரூபிக்கிறபடி; “புள்ளின் பின்போன தனி நெஞ்சமே” என்றிருக்குமவர்களன்றோ.

இனி இவ்வடையாளத்துக்கும் மறுப்புக் கூறுகின்றாள் உள்ளுறங்குமவள்;-“வெள்ளை விறிசங்கின் பேரரவம்” என்றீர்கள்; சங்குக்கு வெண்மை நிறம் இயற்கை யாகையால், வெள்ளை என்ற அடைமொழி வியர்த்தம்; விளிசங்கு என்கிறீர்கள்; சாமர்தோறும் அழைக்கக் கடவதான சங்கு என்றதாகிறது; ஆகையாலே இது பொழுது விடிவை உணர்த்தவல்ல சங்கன்று; பேரரவம் என்கிறீர்கள்; பெருத்த ஒலியாகில் உங்களுக்குப்போலே எனக்கும் செவிப்படவேணும்; செவிப்படாமையாலே அப்ரஸித்தம்; ஆனபின்பு நீங்கள் சொல்லுமதெல்லாம் பொதுவிடிவுக்கு அடையாளமாக மாட்டாது என்றனள்.

இனி இதற்கு ஸமாதாநம் – கேட்டிலையோ என்பது.  இப்படிப்பட்ட பேரொலியும் செவிப்படாதபடி நீ உள்ளே செய்யுஞ்செய்கை என்னே என்கை.  பிள்ளாய் – பேதைமை யுடையவளே! என்றபடி; இது ஸாபிப்ராய ஸம்போதநம்.  பாகவத ஸம்ச்லேஷத்தளவு முண்டானாலல்லது பகவத் விஷய ப்ராவண்த்திற்குப் பரிபூர்த்தியில்லை; நீ அங்ஙனன்றியே கிருஷ்ண ஸம்ச்லேஷத் தளவிலேயே நின்று பாகவத ஸம்ச்லேஷத்தில் விருப்பமற்றிருப்பது பேதைமையின் பணியன்றோ என்றவாறு.

இங்ஙன் சொல்லக்கேட்ட அவள், “நானோ கிருஷ்ண ஸம்ச்லேஷத்தளவில் நிற்கிறேன்? உங்களது இனிய பேச்சுக்களைக்கேட்டு உளங்கனிந்திருக்கிற என்னைப் பிள்ளையென்கிற நீங்களன்றோ பிள்ளைகள்” என்ன; இவர்கள், ‘வெறுமனே பேச்சுக் கேட்டுக்கிடக்கவொண்ணுமோ? “அடியார்கள் தம், ஈட்டங் கண்டிடக் கூடுமேல் அது காணுங் கண் பயனாவதே” “அடியார்கள் குழாங்களை உடன்கூடுவ தென்றுகொலோ” “பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே” என்றிப்புடைகளிலே யன்றோ பெரியார் பணித்த பாசுரமிருப்பது; அப்படியே உன் வடிவை நாங்கள் கண்டு எங்கள் வடிவை நீ கண்டு அநுபவிக்க விரும்பாதே எங்கள் வார்த்தைகளுக்குக் கண்ணழிவுஞ் சொல்லுகிற நீயன்றோ பிள்ளை’ என்ன; அதுகேட்ட அவள், “நீங்கள் சொன்னபடியே நான் பிள்ளையாகிநேன்; கர்ணாமிருதமான சில பேச்சுக்களைச் சொல்லுங்கள்” என்னச் சொல்லுகிறார்கள், பேய்முலை நஞ்சுண்டு என்று தொடங்கி.

பேய்முலை நஞ்சுண்ட வரலாறு :- கிருஷ்ணனைப்பெற்ற தாயான தேவகியினது உடன் பிறந்தவனாதலால் அக்கண்ணபிரானுக்கு மாமனாகிய கம்ஸன், தன்னைக் கொல்லப்பிறந்த தேவகீ புத்திரன் ஒளித்துவளர்தலை அறிந்து, அக்குழந்தையை நாடியுணர்ந்து கொல்லும்பொருட்டுப் பல அசுரர்களை ஏவ, அவர்களில் ஒருத்தியான பூதனையென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுருவத்தோடு இரவிலே திருவாய்ப்பாடிக்கு வந்து, அங்குத் தூங்கிக்கொண்டிருந்த கண்ணனாகிய குழந்தையை எடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்லமுயல, பகவானான குழந்தை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப்பிடித்துப் பாலுண்ணுகிறபாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவளைப் போpரைச்சலிட்டுக் கதற உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்பதாம்.

கள்ளச்சகடங் கலக்கழியக் காலோச்சின வரலாறு:- நந்தகோபர் திருமாளிகையில் ஒரு வண்டியின் கீழ்ப்புரத்திலே தொட்டிலிற் பள்ளிகொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ணன், ஒருகால் அச்சகடத்திற் கஞ்சனால் ஏவப்பட்ட அசுரனொருவன் வந்து ஆவேசித்துத் தன்மேலே விழுந்து தன்னைக் கொல்ல முயன்றமை அறிந்து பாலுக்காக அழுகிற பாவனையிலே தன் சிறிய திருவடிகளை மேலே தூக்கி உதைத்தருள, அவ்வுதைபட்ட மாத்திரத்தில் அச்சகடு திருப்பப்பட்டுக் கீழே விழுந்து அசுரனுட்பட அழிந்ததென்பதாம்.

இவ்விரண்டு அபதாநங்களையும் இங்கெடுத்துக் கூறியது – உள்ளுறங்குமிவள் அஞ்சிக்கடுக எழுந்தோடி வருதற்கென்க.  ஸர்வேச்வரனாலே தத்தம் இடர்களைக் களைந்துகொள்ளக் கருதுவார் அல்லாதார்; பெரியாழ்வாரோட்டைச் சம்பந்தமுடையார் அங்ஙனன்றி “எம்பெருமானுக்கு என்ன அவத்யம் விளைகின்றதோ” என்று வயிறு பிடிக்குமவர்களாகையாலே, பூதனையினுடையவும் சகடத்தினுடையவும் பிரஸ்தாவத்தை தொடங்கினால் “கண்ணபிரானுக்கு இங்ஙனே சில தீமைகள் வினைந்தனவே!” என்று நெஞ்சு வெதுப்புண்டு துணுக்கென் றெழுந்திருக்கக் கூடுமென்பது வாசலிற் கூவுமாய்ச்சிகளின் கருத்து.  இங்குக் குலசேகராழ்வார் சரித்திரம் நினைக்கத்தக்கது.

திருப்பாற்கடலிற்கிடை அவதாரங்கட்கு அடிக்கிழங்காதல்பற்றி “வெள்ளைத் தரவில் துயிலமர்ந்த வித்தினை” எனப்பட்டது.  உழவர் விரையை நீரீலே சேர்ப்பது போல் உலக்ஙகட்கெல்லாம் விதைபோன்ற தான் நிரீலே சேர்ந்தானென்பது ரஸோக்தி.  முனிவர்கள் – மநந சீலர்கள்; அவராவார் – ஒரு ப்ரவ்ருத்திக்குங் கடவராகமாட்டாதே குணா நுபவ மாத்திரத்தில் ஒருப்பட்டவர்கள்.  யோகிகள் – கைங்கர்ய நிஷ்ட்டர்கள்.  ஸ்ரீ பரதாழ்வானையும் இளைய பெருமாளையும் அடைவே ஒப்புக்கொள்க.

மெள்ள எழுந்து – வயிறு வாய்க்கப்பெற்ற மாதர் (கர்ப்பிணி ஸ்திரீகள்) வயிற்றினுள் உரையும் பிள்ளைக்கு நோவுவராதபடி மெள்ள எழுந்திருப்பது போலவும், மகனை நலியுமாறு இரணியனால் எவப்பட்ட கிங்கரர்களினால் ப்ரஹலாதாழ்வான் மலைமுடிகளினின்று தள்ளுண்ணம் போது “ஹ்ருதயேநோத்வஹந் ஹரிம்” என்றபடி – ‘பார்த்தருள் பார்த்தருள்” என்று ஹ்ருதய குஹரவாஸியான ஸர்வேச்வரனைப் பிடித்துக்கொண்டாற் போலவும் எம்பெருமானை உள்ளத்துக்கொண்ட இம்முனிவர்களும் யோகிகளும் அவ்வெம்பெருமான் தறும்பாதபடி எழுந்திருப்பார்க ளென்றுணர்க.

உஷ: காலத்தில் உணரும்போது ‘ஹரிர் ஹரி:’ ‘ஹரிர் ஹரி:’ என்ற அநுஸந்தானத்துடன் உணரவேண்டுமென்பது விதியாதலால், அதன்படி அவர்கள் அத்தனை பேருந்திரண்டு அநுஸந்தித்த ஹரிநாமத்தின் பேரொலி இப்பாடியெங்கும் பரவிச்செல்ல, அதுகேட்டு நாங்கள் உணர்ந்து வந்தோம்; இது பொழுது விடிவுக்கு ஏற்ற அடையாளம்; இதற்குக் கண்ணழிவு சொல்ல உன்னாலாகாது; ஆனபின்பு கடுக எழுந்து எங்களுடன் கூடப்பெறாய் என்று கூவியவாறு.

“புள்ளரையன் கோயில்” என்ற பாடமும் கொள்ளற்பாலதே. “பேரரவம்” என்றவிடத்து, அரவம் – ரவ: என்ற வடசொல் விகாரம்.  வெள்ளம் – திருப்பாற் கடற்கு ஆகுபெயர்.  வித்தினை – வித்து இன் ஐ – , இன் சாரீயை; வித்தை யென்றபடி.  குளிர்ந்து-‘குளிர்ந்து’ என்னும் வினைமுற்றின் தொகுத்தல்.

(ஸ்வாபதேசம்) இது பெரியாழ்வாரைத் திருப்பள்ளி யுணர்த்தும் பாசுரம். பிள்ளாய்! ஏன்பது இதில் விளி.  அறிவில்லாதவனைப் பிள்ளை யென்பது.  எம்பெருமானுடைய ஸர்வரக்ஷகத்வம் முதலிய திருக்குணங்களை மறந்தே இவ்வாழ்வார்; மங்களாசாஸனத்தில் ஒருப்பட்டாராதலால் பள்ளை யென்னத் தகுதியுடையாராயினர். “ஜ்ஞாநவிபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவையெல்லாம் அடிக்கழஞ்சு பெறும்” என்ற ஸ்ரீவசனபூஷண திவ்ய பூஷ ஸூக்தியும் மங்களாசாஸநத்திற்கு அஜ்ஞானத்தையே மூலமாகக் காட்டிற்று.  இவ்வாழ்வார் பெரும்பாலும் நந்தனவனத்திலேயேபோது போக்குவராதலால் அவ்விடத்து அடையாளமாகிய ‘புட்களின் சிலம்புதல்’ முன்னே கூறப்பட்டது.  புள்ளரையன் என்று பெரிய திருவடியின் ப்ரஸ்தாவம் செய்திருப்பதில் இப்பெரியாழ்வார் பெரிய திருவடியின் அம்சமாகத் திருவவதாரித்தவர் என்று குருபரம்பரா ப்ரபாவாதிகளிற் கூறியுள்ள விஷயம் முத்ராலங்காராPதியில் ஸூசிதமாகிறது,

‘வெள்ளை விளிசங்கு’ என்கிற சொல்தொடர் முதன் முதலாகப் பெரியாழ்பாருடைய திருவாக்கில் தோன்றியது.  (பெரியாழ்வார் திருமொழி 4-1-7 காண்க.) அதனை இங்கு அநுவதித்துக் காட்டுவது ஒருவகையான லிங்கம்.  (பேய்முலை நஞ்சுண்டு) பெரியாழ்வார் திருமொழியில் (சீதக் கடலில்) கண்ணபிரானுடைய சரித்திரங்களில் பேய்முலை நஞ்சுண்ட கதை முதன் முதலாக அநுஸந்திக்கப்பட்டது. “பிறங்கிய பேய்ச்சி முலை சுவைத்துண்டிட்டு” என்றது காண்க.  மறுபடியும் அந்தச் சரித்திரத்தை அநுஸந்திக்கையில் சகடாஸுரபங்கத்தையும் கூட்டி யநுஸந்தித்தார். “நாள்களோர் நாலைந்து” என்ற பாசுரங் காண்க.  அதற்குப் பொருந்த இங்கு “பேய்முலை நஞ்சுண்டு கள்ளச் சகடங் கலக்கழியக் காலோச்சி” என்றது. “வெள்ளத்தரவில்” என்று தொடங்கிப் பெரியாழ்வார்க்குள்ள ‘விஷ்ணுசித்தர்’ என்னுற்திருநாமமும் அதற்கு விவரணமான “அரவத்தமளியினோடும்” “பனிக்கடலில் பள்ளிகோளை” என்ற பாசுரங்களின் தாற்ரியமும் நன்கு ரி ஸூசிதம்.

English Translation

Look, the birds have begun their morning song. Child, arise! Do you not hear the great booming sound of the snow-white conch in the temple of Vishnu, king of the birds? He who drained the ogress Putana’s poisoned breasts, and kicked the cart that ran amuck, lies reclining in the Milk Ocean. Sages and Yogis hold him in their hearts and gently rise, uttering ‘Hari’, the deep sound that enters our hearts and makes us rejoice!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top