(946)
பயனன் றாகிலும் பாங்கல ராகிலும்
செயல்நன் றாகத் திருத்திப் பணிகொள்வான்
குயில்நின் றார்ப்பொழில் சூழ்குரு கூர்நம்பி
முயல்கின் றேனுன்றன் மொய்கழற் கன்பையே
பதவுரை
பயன் அன்று ஆகிலும் |
– |
(பிறர் திருந்துவதால்) தமக்கொரு பயனில்லாமற் போனாலும் |
பாங்கு அலர் ஆகிலும் |
– |
(அவர்கள் திருந்துகைக்குப்) பாங்காக அமையாமற் போனாலும் |
செயல் |
– |
தமது அநுஷ்டாகத்தாலே |
நன்றாக திருத்தி |
– |
நன்றாக சிக்ஷித்து |
பணி கொள்வான் |
– |
(அவர்களை) ஆட்கொள்வதற்காக |
குயில் நின்று ஆல் பொழில் சூழ் குருகூர் |
– |
குயில்களானவை நின்று ஆரவாரஞ் செய்யப் பெற்ற சோலைகளாலே சூழப்பட்ட திருநகரியிலே (எழுந்தருளியிருக்கிற) |
நம்பி! |
– |
ஆழ்வாரே! |
உன் தன் |
– |
தேவரீருடைய |
மொய் கழற்கு |
– |
சிறந்த திருவடிகளில் |
அன்பையே |
– |
அன்பு உண்டாவதைக் குறித்தே |
முயல்கின்றேன் |
– |
முயற்சி செய்கின்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஆசார்யர்கள், அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யரென்றும் க்ருபாமாத்ர ப்ரஸந் நாசார்யரென்றும் இருவகைப்படுவர். சிஷ்யன் பலகாலும் அநுவர்த்தித்தால் பின்பு அருள்புரிந்து அந்த ஸிஷ்யனை அநுக்ரஹிப்பவர்கள் அநுவ்ருத்தி ப்ரஸந்நாசார்யர் எனப்படுவர்; திருக்கோட்டியூர் நம்பி போல்வார். எம்பெருமானார், கோயிலுக்கும் திருக்கோட்டியூர்க்கும் பதினெட்டு தடவை நடந்து வருந்தின பின்புதானே திருக்கோட்டியூர் நம்பி ப்ரஸந்நாராயருளினார். அங்ஙனன்றியே, ஒருவன் அநுவர்த்தியாவிடினும் அதற்குமேல் விமுகனுமா யிருந்தாலும் முலைக்கடுப்பாலே தரையிலே பீச்சுவாரைப்போலே அவனே அநுக்ரஹூப்பதைத் தம் பேறாக நினைத்துத் தாங்களே அவனைப் பலகாலும் அநுவர்த்தித்துத் திருத்திப் பணிகொள்ளுமாசிரியர் க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்ய ரெனப்படுவர்; எம்பெருமானார், நம்பிள்ளை போல்வார். அப்படிப்பட்ட ஆசார்யத்வபூர்த்தியை மதுரகவிகள் நம்மாழ்வார் திறத்திலே ஸ்வாநுபவத்தாற் கண்டறிந்தவராதலால் அக்குணத்திலே ஈடுபட்டுப் பேசுகிறார். “தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவர்க்கும் இவரடி பணிந்தவர்களுக்குமே இவையுள்ளது” (ஆச்சர்யஹ்ருதயம்-ஙவது ப்ரகரணம்;.) என்ற ஸ்ரீஸூக்தியின் பொருள் இங்கு அநுஸந்திக்கத் தக்கது. (தாய்-ஸீதை; மகன் -ப்ரஹ்லாதன் தம்பி-விபீஷணன்; இவர்-நம்மாழ்வார்; இவரடிபணிந்தவர் -எம்பெருமானார்.)
உலகத்திலே ஸமாக்யமாக ஒருவன் ஒருவனுக்கு ஓருதவி செய்வது ஒரு கைம்மாறு பெறக் கருதியேயாம்; ஆழ்வார் தம்முடைய அநுக்ரஹத்துக்கு ஒருவனை இலக்காக்குவது அங்ஙன் ஒரு பயனைக் கருதியன்று; கருதினாலும் அவனால் ஒரு பயனும் பெறுவிக்கவும் முடியாது. அப்படிப்பட்ட நிஷ்பல ஜந்துவையாய்த்து ஆழ்வார் அநுக்ரஹிப்பது என்கிற அர்த்தம் பயனன்றாகிலும் என்பதில் அடங்கியுள்ளது. பாங்கலராகிலும் என்றது- அநதிகாரிகளாகிலும் என்ற படி. பழுதே பலபகலும் போக்கித்திரியும் ஸம்ஸாரிகளைத் திருத்துவதற்கென்றே திருவவதரித்த ஆழ்வார் இந்த வணங்காமுடி ஸம்ஸாரிகளோடு மாரடித்துக் கொள்ள இறாய்த்து “ஆரானுமாதானுஞ் செய்ய, அகலிடத்தை ஆராய்ந்து அது திருத்தலாவதே?” (பெரிய திருவந்தாதி) என்று வெறுத்துக் கைவாங்கினாலும் பின்னையும் அவர்களை விடமாட்டாதே “சொன்னால் விரோத” மித்யாதிகளாலே பல்லாயிரமுறை உபதேசித்துத் திருத்தப்பார்த்தது இவருடைய க்ருபாமாத்ர ப்ரஸந்நாசார்யத்வத்தை நன்கு விளக்கவற்றன்றோ.
பணி கொள்வான் என்பதை வான்விகுதி பெற்ற எதிர்கால வினையெச்சமாகக்கொண்டு, ‘திருத்திப் பணிகொள்வதற்காக’ என்று உரைத்தோம். இவ்வினை யெச்சம் எவ்வினையைக்கொண்டு முடிகின்றதென்னில்; குருகூர்நம்பி என்றதற்குக் ‘குருகூரிலே எழுந்தருளியிருக்கிற நம்பி’ என்று பொருளாதலால் ‘எழுந்தருளியிருக்கிற’ என்று வருவிக்கப்பட்ட பெயரெச்சத்தின் பகுதியான எழுந்தருளும் வினையைக் கொண்டு முடியுமென்க. அன்றி, நம்பி என்னும் பெயர், நம்பு என்னும் வினையடியாப் பிறந்ததாதலால் அவ்வினையைக் கொண்டு முடியுமென்பதும் சாலப்பொருத்தமுடைத்தாம். “நம்பும் மேவும் நசையாகும்மே.” திருத்திப் பணிகொள்வதற்காகத் திருக்குருகூரை மேவியிருப்பவரென்கை. இனி, ‘பணிகொள்வான்’ என்பதை வினையாலணையும் பெயராகக் கொண்டு, பணிகொள்பவனான குருகூர்நம்பி என்று இயைத்தால் குற்றமென்? என்று கேட்பீர்; கேண்மின்: இங்கு நம்பி! என்பது அண்மைவிளி; முதல் வேற்றுமையன்று: ஆகவே முன்னிலையாதலால் அதற்கேற்பப் ‘பணி கொள்வாய்’ என்று இருந்தால் நன்கு பொருந்தும்; கொள்வான் என்று படர்க்கையாயிருத்தலால் சிறிது வருத்தப்பட்டுப் பொருத்தவேணுமே.
“குயில்நின்று ஆர் பொழில்சூழ்” என்றும் ஓதுவர்.
“அன்பே முயல்கின்றேன்” = நீர்செய்த மஹோபகாரத்துக்கு நான் அது ரூபமாகச் செய்வதொரு ப்ரத்யுபகாரமில்லையாயினும் தேவரீருடைய திருவடிகளில் பரிபூர்ணமான அன்பையாவது அமைக்கலாம்; அதுவுமில்லை; ‘ஆழ்வார் திருவடிகளில் அன்புவைக்க வேணும் அன்புவைக்க வேணும்’ என்கிற யோசனையும் முயற்சியுமாயே யிருக்கிறதேயன்றி முற்றின அன்பு அமைந்திலது என்றபடி.
English Translation
The useless and the worthless souls, He will take and put to meet. O, Kurugur Lord, where cuckoos haunt, I only seek to love thy feet.