(886)

(886)

மெய்யர்க்கே மெய்ய னாகும் விதியிலா வென்னைப் போல

பொய்யர்க்கே பொய்ய னாகும் புட்கொடி யுடைய கோமான்

உய்யப்போ முணர்வி னார்கட் கொருவனென் றுணர்ந்த பின்னை

ஐயப்பா டறுத்துத் தோன்றும் அழகனூ ரரங்க மன்றே.

பதவுரை

புள் கொடி உடைய கோமான்

கருடனைக் கொடியாகவுடைய ஸ்வாமியான திருமால்
வீதி இலா என்னை போல

(நெடுங்காலம் எம்பெருமானது அருளைப் பெறுதற்கு ஏற்ற) நல்வினை இல்லாதிருந்த என்னைப்போல
மெய்யர்க்கு

அத்வேஸமாத்திரமுடையவர்க்கு
மெய்யன் ஆகும்

(தன் ஸ்வரூபத்தை) உள்ளபடி காட்டித்தருவன்;
பொய்யர்க்கு

(எம்பெருமான் விஷயத்தில்) அத்வேஸத்தைப் பெற்றிராதவர்க்கு (எம்பெருமான் விஷயத்திலே பகைமை கொண்டிருப்பவர்க்கு)
பொய்யன் ஆகும்

(தனது ஸ்வரூபத்தைக் காட்டித்தராமல் தானும்) பொய்யனாயிருப்பன்;
உய்யபோம் உணர்வினார்கட்கு

உஜ்ஜீவிப்பதற்கு உரிய நல்லறிவு உடையவர்க்கு (கீழ்க்கூறிய மெய்யர்க்கு)
ஒருவன் என்று உணர்ந்த பின்னை

‘கடவுள் ஒருவன் உண்டு’ என்று நல்லறிவு பிறந்த பின்பு
ஐயப்பாடு அறுத்து

பின்னும் வரக்கூடிய ஸந்தேகங்களைப் போக்கி
தோன்றும்

ஸேவை ஸாதிக்கிற
அழகன்

அழகையுடையஅந்த எம்பெருமானது
ஊர்

இருப்பிடம்
ஆரங்கம்

திருவரங்கமாகும்;

(அன்றே ஈற்றசை; தேற்றமுமாம்)

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம் உபதேசத்தை மதியாத ஸம்ஸாரிகளைக் குறித்து ஹிதம் கூறுவதில் நின்றும் கால்வாங்கின ஆழ்வார் -‘ இந்த ஸம்ஸாரிகளுக்குள்ளே ஒருவனான என்னைப் பரோபதேசம் பண்ணவல்லேனாம்படி எம்பெருமான் தன்விஷயத்தில் படிப்படியாகப் பரமபக்தியளவான ஊற்றத்தைப் பிறப்பித்து இப்படி நிர்ஹேதுகமாகக் கடாக்ஷித்தவாறு என்னே!’  என்று தமது நன்றியறிவு தோன்றக் கொண்டாடுகிறார்;  இதுவன்றோ அறிவுடையாருடைய செயல்.

‘தெய்வம் உண்டு’ என்று ஆதரவோடு அங்கீகரியாவிடினும் ‘தெய்வம் உண்டு’ என்று ஒருவன் சொன்னால் அதில் ஆக்ஷேபாதிகளாலே பகைமை பாராட்டாதிருக்கும் நிலை – அத்வேஸ் மெனப்படும்:  இதுவே பரமபக்திக்கு முதற்படி எனப்படும்.  ஒருவஸ்துவில் ஒருவனுக்கு த்வேஷம் குடிகொண்டிருந்தால் அவன் அவ்வஸ்துவைப்பற்றிச் சிந்திக்கவே முடியாது:  அன்றி, ‘நேசமுமில்லை, த்வேசமுமில்லை’  என்கிற நிலைமையிலிருந்தால் அவன் நாளடைவில் அவ்வஸ்துவிடத்தில் பரமபக்திபர்யந்தமான அன்பைப் பெற்றுவிடக்கூடும் என்பது அனைவர்க்கு அநுபவம் ஸித்தமான விஷயம்.  ஆனதுபற்றியே அத்வேஷமென்பது பரமப்ரீதிக்கு முதற்படியாகக் கொள்ளப்புட்டிருக்கின்றதென்க.

இத்தகைய அத்வேஷமுடையார்க்குத் தனது ஸ்வரூபத்தைக் காட்டிக்கொடுத்தும், அவ்வாறன்றிப் பகைமை கொண்டிருக்கும் நாஸ்திகர்க்குத் தனது ஸ்வருபத்தைக் காட்டித்தராமலும் இருப்பவனான எம்பெருமான், ‘தெய்வம் ஒன்று உண்டு’ என்று மாத்திரம் கருதுபவரான அந்த ஆஸ்திகர்க்கு ‘நாம் அடைய வேண்டிய அக்கடவுள்தான் யாவன்?  அக்கடவுளை நாம் அடையுமிடத்து நமக்கு நேரக்கூடிய இடையூறுகளைத் தவிர்ப்போன் யாவன்?’  என்று இவை முதலாகத் தோன்றுகிற ஸந்தேககங்களையெல்லாம் தனது வடிவழகு முதலியவற்றால் போக்குவான்:  அப்படிப்பட்டவன் நித்யவாஸம் செய்யுமிடம் திருவரங்கம் என்பது இப்பாட்டின் கருத்து.  எம்பெருமானுடைய இத்தகைய தன்மையை இவர் தம் அநுபவத்தாலே உணர்ந்து கூறினராதலால் தம்முடைய குருதஜ்ஞதையை வெளியிடுவது இப்பாட்டு என உரைக்கப்பட்டதென்க.

‘மெய்யர்க்கு’ என்பதற்கு ‘தத்வஜ்ஞானமுடையவர்கட்கு’ என்று பொருள் கூறவேண்டியதாயிருக்க அங்ஙன்கூறாது ‘அத்வேஷமுடையார்க்கு ‘என்று கூறியது எங்ஙனே?  இது ஸப்தார்த்தமாகுமோ?  என்று ஸங்கிக்கக்கூடும்;  கேண்மின்;- ‘தத்துவ ஞானிகட்கு எம்பெருமான்தான் மெய்யனாவான்;’ என்று கூறினால் அதனால் எம்பெருமானுக்கு ஒரு சிறப்புத் தோன்றாதாகையாலும், எம்பெருமானது சிறப்பைக் கூற வேண்டியது இங்கு அவசியமாகையாலும் இங்ஙனே பொருள் கூறவேண்டியதாயிற்று.

மெய்யாவது – ஆஸ்திகபுத்தி, பொய்யாவது – நாஸ்திகபுத்தி;  அதாவது  – ‘கடவுளுண்டு’ என்பதை அங்கீகரியாமல் தாம் கண்ணாற் காண்கின்ற பொருளையே நம்புகின்ற ஞானம்;  ஆகவே இப்பாட்டில் மெய்யர் என்பது ஆஸ்திகரையும், பொய்யர் என்பது நாஸ்திகரைச்ஸ்யும் குறிக்குமென்க.

விதியிலா வென்னைப்போல என்பது மத்திமதீபமாக (மத்திமதீபமாவது – ஒரு மாளிகையின் நடுவிலே வைக்கப்பட்ட விளக்கு முன்னும் பின்னும் வெளிச்சம் தருவதுபோல, நடுநின்ற சொல்லாவது சொற்றொடராவது முன்னும் பின்னும் சென்று இயைவது.) மெய்யர்க்கு மெய்யனாவதற்கும் பொய்யார்க்குப் பொய்யனாவதற்கும் உவமையாம்.  எங்ஙனேயெனில்; நான் நாஸ்திக புத்திகொண்டு கடவுளின் உண்மையை மறுத்து உலகத்துப் பொருள்களிடத்துப் பற்றுக்கொண்டு திரிந்த கீழ்நாள்களிலெல்லாம் அவ்வெம்பெருமானும் என்னைக்கீட்டாமல், தான் ஒருவன் உளன் என்றும் தோன்றாதபடி உபேக்ஷித்திருந்தான்;  எனக்கு ஆஸ்தீக புத்தியால் தான் எம்பெருமானிடத்து அத்வேசம் தோன்றிய இப்போதோ அவ்வெம்பெருமான் தனது ஸ்வரூபமெல்லாம் நன்கு தோன்றுமாறு விசேஸஜ்ஞானத்தைப் பிறப்பித்தானெனக் காண்க.

ஞானம் பிறந்தபின்பு இவ்வாழ்வார் தம்மைக்குறித்து “ விதியிலாவென்னை”  என்று வெறுத்துக்கூறுவது – முன்னமே எம்பெருமானைக் கிட்டித்தாம் ஈடேற வேண்டியிருக்க அங்ஙணமில்லாமல் நெடுநாள் அவனை யிழந்துகிடந்த தமது தெளர்ப்பாக்யத்தை நினைப்பதனாலாம்.  “பழுதேபலபகலும் போயினவென்று அஞ்சியழுதேன்”  என்றார் பொய்கையாழ்வாரும்.

இப்படி ஆஸ்திகபுத்தி மாத்திரத்தையே வியாஜமாகக்கொண்டு தத்வஜ்ஞானம் நிரம்பாத உயிர்களையும் எம்பெருமான் காத்தருள்வதற்குக் காரணம் – அவர்கட்கெல்லாம் தாம் ஸ்வாமியாயிருப்பதே என்பது தோன்றக் கோமான் என்றார்.  “ ஸம்பந்நராயிருக்குமவர்களேயாகிலும் ஒருகாசு விழுந்தவிடத்தே போய்த் தேடாநிற்பந்தங்களாய் தந்தாம் வஸ்துவை விடமாட்டாமையாலே” என்ற வியாக்யாந ஸூக்தியை நோக்குக.

ஒருவனென்றுணர்ந்தபின்னை-கேவலம் தேகமே அன்று உள்ளது ;  தேஹாதிரிக்தமாயிருப்பதொரு ஆத்மா  உண்டு;  அவனுக்கு ஸ்வாமியாயிருப்பானொரு எம்பெருமானுமுண்டு, என்னும் அறிவு பிறந்தபின்பு என்றபடி.

ஐயப்பாடு-ஐயம், படு என்ற இரண்டு சொற்கள் சேர்ந்து ஒருசொல் தன்மைப்பட்டு ஐயப்படு என்று முதனிலையாகி அது ஐயப்பாடு எனத்திரிந்தது;  முதனிலைதிரிந்த தொழிற்பெயர்.

English Translation

For the truthful ones he is the truth, for the false ones he is a falsity. For the lowly ones like me, He is the king who bears a Garuda crest. For those who seek the elevation through consciousness, he dispels doubts and reveals himself. He is the beautiful Lord of Tiru-Arangam.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top