(71)

உன்னையும் ஒக்கலையில் கொண்டு தமில்மருவி உன்னொடு தங்கள்கருத்தாயின செய்துவரும்

கன்னிய ரும்மகிழக் கண்டவர் கண்குளிரக் கற்றவர் தெற்றிவரப் பெற்ற எனக்குஅருளி

மன்னு குறுங்குடியாய் வெள்ளறை யாய் மதிள்சூழ் சோலை மலைக்கரசே கண்ண புரத்தமுதே

என்னவலம் களைவாய் ஆடுக செங்கீரை ஏழுலகும் முடையாய் ஆடுக ஆடுகவே.

பதவுரை

மன்னு

(ப்ரளயத்துக்குமழியாமல்) பொருந்தி யிருக்கக்கடவ
குறுங்குடியாய்

திருக்குறுங்குடியிலே எழுந்தருளியிருக்குமவனே!
வெள்ளறையாய்

திருவெள்ளறையிலே வர்த்திக்குமவனே!
மதிள் சூழ்

மதிலாலே சூழப்பட்ட
சோலை மலைக்கு

திருமாலிருஞ்சோலை மலைக்கு
அரசே

அதிபதியானவனே!
கண்ணபுரத்து

திருக்கண்ணபுரத்திலே நிற்கிற
அமுதே

அம்ருதம்போன்றவனே!
என் அவலம்

என் துன்பங்களை
களைவாய்

நீக்குபவனே!
உன்னை

(மகோஹரனான) உன்னை
ஒக்கலையில்

இடுப்பிலே
கொண்டு

எடுத்துக்கொண்டு
தம் இல்

தங்கள் அகங்களிலே
மருவி

சேர்ந்து
உன்னொடு

உன்னோடு
தங்கள்

தங்களுடைய
கருத்து ஆயின செய்து

நனைவுக்குத் தக்கபடி பரிமாறி
வரும்

மறுபடியும் கொண்டுவாரா நிற்கிற
கன்னியரும்

இளம்பெண்களும்
மகிழ

(இச் செங்கீரையைக் கண்டு) ஸந்தோஷிக்கும்படியாகவும்
கண்டவர்

(மற்றும்) பார்த்தவர்களுடைய
கண்

கண்களானவை
குளிர

குளிரும்படியாகவும்
கற்றவர்

(கவி சொல்லக்) கற்றவர்கள்
தெற்றிவர

பிள்ளைக்கவிகள் தொடுத்து வரும்படியாகவும்
பெற்ற

உன்னை மகனாகப் பெற்ற
எனக்கு

என் விஷயத்திலே
அருளி

கிருபை செய்து

செங்கீரை ஆடுக-;

ஏழ் உலகும்

ஸப்தலோகங்களுக்கும்
உடையாய்

ஸ்வாமியானவளே!

ஆடுக ஆடுக-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

*** – பிரானே! நீ எப்படி செங்கீரையாட வேணுமென்றால் உன்னை  இடுப்பிலெடுத்துக்கொண்டு தங்கள் தங்கள் வீட்டுக்குச் சென்று தங்களிஷ்டப்படி உன்னை யனுபவித்துவருகின்ற இளம்பெண்களும் மனமகிழும்படி ஆடவேணும்; ஸாமாந்யமாகப் பார்க்கிறவர்கள் எல்லாருடையவும் கண்கள் குளிரும்படி ஆடவேணும்; கவிதொடுக்கக் கற்றவர்கள் பிள்ளைக்கவிகள் பாடிக்கொண்டு வரும்படி ஆடவேணும்.

அர்ச்சாவதாரமாக ஆங்காங்குக் கோயில்களில் எழுந்தருளியிருக்கிற ஸ்ரீமந் நாராயணனே கண்ணபிரானாக அவதரித்தனனென்பதை மூன்றாமடியில் வெளியிடுகின்றனரென்க.  திவ்யதேசங்களில்  ஒவ்வோரிடத்தில் ஒவ்வொரு குணம் விளங்கும்; திருமாலிருஞ்சோலையில்  ராஜாதிராஜனாயிருக்கும் தன்மை விளங்குதல் பற்றி  “சோலைமலைக்கு அரசே” என்றார்; திருக்கண்ணபுரத்தில் பரமயோக்யனாயிருக்குந் தன்மை  விளக்குதல்பற்றி “கண்ணபுரத்து அமுதே” என்றார்.  ‘அபலம்’ என்னும் வடசொல் அவலமெனத் திரிந்தது.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top