(483)

(483)

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறைதரும் புண்ணியனால்

பண்டுஒருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த

கும்ப கருணனும் தோற்றும் உனக்கே

பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற

அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.

பதவுரை

நோற்று நோன்பு நோற்று
சுவர்க்கம் புகுகின்ற ஸுகாநுபவம் பண்ணுநின்ற
அம்மனாய் அம்மே!
வாசல்திறவாதார் வாசற்கதவைத் திறவாதவர்கள்
மாற்றமும் தாராரோ ஒருவாய்ச் சொல்லுங்கொடுக்கமாட்டாரோ?
நாற்றமும் துழாய் முடி நறு நாற்றம் வீசாநின்றுள்ள திருத்துழாய் மாலையை அணிந்துள்ள திருமுடியையுடைய
நாராயணன் நாராயணனும்,
நம்மால் போற்ற பறை தரும் நம்மால் மங்களாசாஸனம் பண்ணப்பெற்றுப் புருஷார்த்தங்களைத் தந்தருள்பவனும்
புண்ணியனால் தர்மமே வடிவுகொண்டு வந்தாற் போன்றவனுமான இராமபிரானால்
பண்டு ஒரு நாள் முன் ஒரு காலத்திலே
கூற்றத்தின் வாய் வீழ்ந்த யமன் வாயில் (இரையாக) விழுந்தொழிந்த
கும்பகரணனும் கும்பகர்ணனும்
தோற்று தோல்வியடைந்து
பெருந்துயில் (தனது) பேருறக்கத்தை
உனக்கே தான் தந்தானோ உனக்கே தான் கொடுத்துவிட்டானோ?
ஆற்ற அனந்தல் உடையாய் மிகவும் உறக்கமுடையவளே!
அருகலமே பெறுதற்கரிய ஆபரணம் போன்றவளே!
தேற்றம் ஆய் வந்து திற தெளிந்து வந்து, (கதவைத்) திறந்திடு;

ஏல் ஓர் எம் பாவாய்,

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எல்லாரு முடன கூடிக் குளிக்கக் கடவோம், உடன கூடி நோன்பு நோற்கக் கடவோம்.  உடன் கூடிக் கிருஷ்ணாநுபவம் பண்ணக்கடவோம்’ என்று சொல்லிவைத்து, நாங்கள் உணர்த்தவும் உணராதே கிடந்துறங்கதியேலும், ‘இப்போது கதவைத்திறக்க அவகாசமில்லை’ என்றொரு வாய்ப்பேச்சுத்தான் சொன்னாலாகாதோ? இங்ஙனொத்த பேருறக்கம் உனக்கு வந்த வழி யாதுகொல்? பண்டு இராமபிரானது அம்புக்கு இலக்காகி மாண்டொழிந்த கும்பகரணன் தனது உறக்கத்தை உனக்குத் தந்தொழிந்தானோதான்? ஆ! சால நன்று இது; இப்பேருறக்கம் உனக்கு ஆகாதுகாண்; நீ ஒருத்தி எங்கள் திரளில் வந்து கூடாமையால் இத்திரள் இருள் மூடிக்கிடக்குமாற்றை வந்து காணாய் தோழி! என்கிறார்கள்.

முதலடிக்கு மூன்றுவகையாகக் கருத்துரைக்கலாம் :- கண்ணபிரானுடைய திருமாளிகைக்கு அடுத்த திருமாளிகையாய் இடைச் சுவரற்றிருப்பதனால், கண்ணபிரானோடு இடைவீடின்றிச் சுகாநுபவம் பண்ணும்படி நீ நோற்ற நோன்பு என கொல்? முன்பிறவியில் நோற்ற நோன்பின் பயனாக இப்போது கிருஷ்ணாநுபவ ஸுகம் பெற்று நிற்றி என்கிறாளென்பது முதற் கருத்து.

பொழுது விடிந்தபின்னரும் உணாந்தெழுந்து வாராமையினால், அம்மே! இங்ஙன் கிடந்துறங்காநின்ற நீயோ நோன்பு நோற்றச் சுகாநுபவம் பண்ணப்போகிறாய்? நினைவுக்கும் செயலுக்கும் பொருத்தம் அழகிதாயிருந்தது! என ஏசியவாறாகக் கொள்ளுதல், இரண்டாங்கருத்து.

எல்லாருமொக்கக்கூடி நோன்பு நோற்றுக் கிருஷ்ணாநுபஸுகம் பெறுவோம்’ என்று சொல்லிவைத்து, நீ தனியே நோன்பு நோற்றுச் சுகாநுபவம் பண்ணுவது என்ன தருமம்! ஏன வெறுக்கின்றவாறாகக் கொள்ளுதல், மூன்றாங் கருத்து.  இவள் நோற்ற நோன்பாவது – ஸித்த ஸதாந ஸ்வீகாரமென்க.  ழூவிது : க்ருஷ்ணம் ப்ராஹ்மணாஸ்தத்வதோயே தேஷாம் ராஜந்! ஸர்வயஜ்ஞாஸ் ஸமாப்தாழூ  என்ற மஹாபாரதங்காண்க.

ஸ்வர்க்கமென்ற வடசொற்றிரிபாகிய சுவர்க்க மென்னுஞ் சொல், இங்குச் சுகத்தைச் சொல்லிற்று.  “யஸ்த்வயா ஸஹ ஸ ஸ்வர்க்கோ நிரயோ யஸ்த்வயா விநா” (உன்னுடன் கூடி யிருத்தல் – சுவர்க்கம்; உன்னைப் பிரிந்திருத்தல் – நரகம்) என்ற ஸ்ரீராமாயணம் நோக்கத்தக்கது.  புகுகின்ற என்ற அடைமொழி – உள்ளே கிருஷ்ணா நுபவ ஸுகம் நிகழுமாற்றத்தைக் கூறும்; இதனால் அநுபவத்தில் இடைவீடின்மையும் தோற்றுமென்ப.

அம்மனாய்! என்ற விளியால் – நீ இங்ஙன் தனியே ஸுகாநுபவம் பண்ணுவது உன் பெருமைக்குப் பொருந்து மத்தனை யன்றித் தோழமைக்குத் தகாதென்பது போதரும்.  அம்மனை என்பதன் ஈறு திரிந்தவிளி; தாயே! என்று பொருள்.

அசோக வநத்திற் பிராட்டி களிப்பின் மிகுதியால் “ப்ரஹர்ஷேணாவருத்தா ஸா வ்யஜஹார ந கிஞ்சந” என்றபடி ஒன்றும் பேசாதே திடுக்கிட்டுக் கிடந்தாற்பால, இவளும் இவர்களது மதுரமான வாய்மொழியைக் கேட்டுப் பரமாநந்தத்திற்கப் பரவசப்பட்டிருந்தமையாலும், ‘இவர்களுக்கு அடிச்சியாகிய என்னை இவர்கள், ‘தாயே!’ என்று விளித்துப் பழியிடுகின்றனரே’ என்ற உள் வெதுப்பினாலும், ‘நாம் கிருஷ்ணாநுபவம் பண்ணுவதாக இவர்கள் பழியிடா நின்றார்கள்; இத்தருணத்தில் நாம் இவர்கட்கு மறு மொழி கூறுதல் தகாது’ என்ற நினைவினாலும் அவள் பேசாதே கிடந்தாள்; அவளது கருத்தை அறியாத இவர்கள், தாங்கள் வெளியே நின்று துவள்கிற துவட்சி பொறுக்க மாட்டாமல், “மாற்றமுந் தாராரோ வாசல் திறவாதார்” என்கிறார்கள்.  நீ வாயைத் திறவாதொழியினும் கதவையாகிலுந் திறக்கலாகாதோ? என்றவாறு.  உன் உடம்பைக் கிருஷ்ணனுக்குத் தந்தால், உன் பேச்சை எங்களுக்குத் தரலாகாதோ? என்றிப் புடைகளிலே கருத்துரைப்பர்.

முதலடியில் ‘அம்மனாய்’ என முன்னிலைப்படுத்தி விளித்தமைக்கு ஏற்ப “மாற்ற முந தாராயோ வாசல் திறவாதாய்” என முன்னிலையாகவன்றோ கூற அடுப்பது; படர்க்கையாகக் கூறியுள்ளவிது பொருந்துமாறென் எனில்: “ஓரிடம் பிறவிடந்தழுவலுமுளவே” (நன்னூல்) என்பது இலக்கணமாகலின் இது பொருந்துமென்க.

இங்ஙன்  இவர்கள் பழியிட்டுக் கூவுகின்றமையை உணர்ந்த அவள், ‘ஐயோ! நம் மேல் இவர்கள் வீண்பழி இடுகின்றனரே; இவர்கட்கு ஒரு மறுமொழி சொல்லியாகிலும் பிழைப்போம்’ என்றெண்ணி, “தோழிகாள்! நீங்கள் நெடும்போதாக இங்ஙனே பழியிடுவதென்?  கண்ணபிரான் இங்கு இல்லையே” என்ன; அதுகேட்ட இவர்கள் அம்மா! நன்று சொன்னாய்; நீ மறைத்தாயாகிலும் திருத்துழாய் மணம் அவனிருப்பைக் கோட் சொல்லித் தாரா நின்றதே; அதனை நீ மறைக்கவல்லையல்லையே’ என்ன; அதற்கு அவள், “அந்தோ! பாரமே!! அவன் இப்போது இங்குக் கிடந்தால் தான் துழாய் மணநாறுமென்று கருதுகின்றீர்களோ? ஒருகால் அவன் அணைத்துவிட்டால் அந்நாற்றம் நூறு குளிக்கு நிற்குமென்பதை நீங்கள் அறியீரோ?  அன்றியும், நான் உங்களைப் பிரிந்துவந்து படுக்கையிற் சாய்ந்தபோதே தொடங்கி நீங்கள் வாசலைப்பற்றிக்கொண்டு நிற்கிறீர்கள்; கட்டுங்காவலுமான வாசலிலே அவன் எங்ஙனம் புகவல்லன்? இவற்றை ஆராயாது நீங்கள் பழியிடுவது தருமமன்று” என்ன; “அவன் எங்களைப் போலக் கதவு திறக்குந்தனையும் காத்திருக்கவேணுமோ?  அவன் நாராயணனென்பதை நாங்களறியோமோ, நீ தான் அறியாயோ; அவன் வியரபகனாயிருந்து வைத்து, வேண்டின விடத்தே வந்து தோற்றமாட்டிற்றிலனாகில் அவனுடைய வியாப்திக்குப் பிரயோஜனம் என்னாகும்?” என்று இவர்கள் சொல்ல; அவள் மறுமாற்றஞ்சொல்ல வல்லமையற்று வாய்திறவாதே கிடந்து உறங்குமவள் போலப் பாவனை செய்தாள்; குறட்டைவிட்டாள்; அதனைச் செவியுற்ற இவர்கள், ‘அம்மா! கும்பகரணனும் உனக்குத்தோற்றுத் தனது உறக்கத்தை உனக்கே தந்தொழிந்தனனோ?’ என்கிறார்கள்.

கும்பகரணன் இவட்குத் தோற்றுத் துயில் தருகையாவதென் எனில்;

சிற்பிகள் இருவர்கூடி, ‘நாமிருவரும் தனித்தனியே ஒரு பதுமை யெழுதுவோம், பின்பு மத்தியஸ்தர்கள் எவனுடைய சிற்பத்தை இகழ்ந்துரைக்கின்றனரோ, அவன் அன்று முதல் சிற்ப வேலையை விட்டிட வேண்டியது’ என்று ஸமயபந்தஞ் செய்து கொண்டு, இருவருஞ் சித்திரமெழுத, முடிவில் இகழ்வடைந்தோன் முன் ஸமயபந்தத்தின்படி சிற்பத்தொழிலை விட்டிடுமாறுபோல, கும்பகரணனும் இவளுங்கூடி, ‘நாமிருவரும் உறங்குவோம்; உறக்கத்தில் தோல்வியடைந்தோர் உறக்கத்தை விட்டிடவேண்டியது’ என்று ஸமயபந்தஞ்செய்துகொண்டு உறங்க, அதில் கும்பகரணன் தோல்வியடைந்து, ஸமயபந்தத்தின்படி உறக்கத்தை விட்டிட, அவ்வுறக்கத்தை இவள் கைப்பற்றினாள் எனக் கவிமரபிற்கேற்பச் சமத்காரந் தோற்றக் கூறப்பட்டுள்ளமை அறிக.  இதனால் இவளது உறக்கத்தின் ஒப்புயர்வின்மை கூறியவாறாம்.

“ஸ்ரீ பரசுராமாழ்வானை வென்று பெருமாள் அவன் கையில் வில்லை வாங்கினாற் போலே, நீயும் அவனை வென்று நித்திரையைக் கைக்கொண்டாயோ?” என்பது ஆறாயிரப்படி.

கூற்றத்தின் வாய்வீழ்ந்த – தன்னால் சிறையிலடைக்கப்பட்டிருந்த யமனுடைய வாயில் வீழ்ந்தானென்க.  கூற்றம் – உடலையு முயிரையும் வேறு கூறாக்குபவன், யமன்.  “வாய்விழுந்த” என்றும் ஓதுவர்.

இராமபிரானை புண்ணியன் என்றது – “ராமோ விக்ரஹவாத் தர்ம:” என்னம் பிரமாணத்தை அடியொற்றியதாம்.

‘அஸஹ்யாபசாரிகளில் அக்ரேஸரனான இராக்கதப் பையலோ டொக்காம்மைச் சேர்க்கின்றனரே இவர்கள்! இஃது என்ன கொடுமை! இனி வெளியிற் சென்று முகங்காட்டுவோம்’ என்று எண்ணி, தான் உணர்ந்தமை தோற்றச் சோம்பல் முறித்தாள்; அதனை உணர்ந்த இவர்கள், ‘ஓ! உறக்க மிருந்தபடி யென்!’ என வியந்து, “ஆற்ற அனந்தலுடையாய்!” என விளிக்கின்றனர்.  பின்பு சாலகவாசலாலே அவளுணர்ந்தபடியை உற்று நோக்கினார்கள்; அவள் தங்கள் திரளில் வந்து கூடினால் நவரத்நமாலையில் நாயகக்கல் அழுத்தினாற்போலாமெனக் கருதி, அருங்கலமே! என்கிறார்கள்.  நாயகமணி இல்லாத ஹாரம்போல் இத்திரள் இருள் மூடிக்கிடக்கிறது; இதனை நீ விளக்கவாராய் என விளித்தவாறாம்.

இவர்களுடைய ஆதராதிசயத்தை உணர்ந்த அவள் துணுக்கென்று வரப்புறப்பட, அஃதறிந்த இவர்கள், “தேற்றமாய் வந்து திற” என்கிறார்கள்.  புறப்பட்டு மேல் நிலங்களில் நின்று தடுமாறாதே தெளிந்து வந்திழிந்து திற என்றபடி.  இதற்கு மற்றொரு வகையாகவுங் கருத்துரைக்கலாம் :-

பஞ்சவடியிற் பிராட்டியைப் பிரிந்த இராமபிரான் கிஷ்கிந்தையிற் புக்கு ஸுக்ரிவ மஹாராஜனை நண்பனாகக் கொண்டு வாலியை வதைசெய்து மால்யவத் பர்வதத்தில் கார்காலத்தைக் கழித்தவனந்தரம், ‘ஸுக்ரிவன் பிரதிஜ்ஞைபண்ணியிருந்தபடி இன்று காறும் படை திரட்டிக் கொண்டு போர்க்குப் புறப்படவில்லை’ என்ற அளவற்ற சீற்றத்தினால் இளையபெருமாளை நியமித்தருள, அவரும் அந்நியமநத்தைச் சிரமேற் கொண்டு ஸுக்ரிவன பள்ளியறை வாசலிற் போந்து நாணொலியைத் தலைப்பெய்விக்க, அவரது சீற்றத்தைத் தணிக்கக்கருதிய தாரை வெளிவரும் போது, ஸம்போக லக்ஷணங்களை  மறைத்திடாது அரைகுலையத்தலை குலைய வந்தாற்போல வாராதே கொள்; இத்திரவில் உன்னை நியமிக்கக் கடமைப்பட்ட குருகுல மாதருமுளராதலால் ஸுரத சின்னங்களை நன்கு மறைத்து ஸதஸ்ஸில் வருகைக்கு உரிய கோலத்துடன் வந்து திறவாயாக என்கிறார்கனென்றுமாம்.

“ஊராகத் திரண்டுகிடக்கிறது; அவர்களிலே உன்னையும் நியமிக்க வல்லாருண்டு’ அவர்கள் முன்னே படுக்கையில் சாய்ந்தபடியே வாராதே உன்னைப் பேணிக்கொண்டு ஸதஸ்யையாய் வந்து திற”

ஸித்தஸாதந ஸ்வீகாரம்பண்ணி, உபாயாத்யவஸாயத்தில் நிறைந்த ஊற்றமுடைய மஹாநுபாவரை உணர்த்துதல், இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாம்.

(ஸ்வாபதேசம்) திருமழிசை யாழ்வாருக்கு அடுத்த முந்தினவரான பேயாழ்வாரை யுணர்த்தும் பாசுரமிது.  ஓடித்திரியும் யோகிகளாய் ஒருவரோடு ஒருவர் சேராமல் ஸஞ்சரித்துக் கொண்டிருந்த பொய்கையார் பூதத்தார் பேயார் இம்மூவரையும் ஒன்று சேர்த்து அநுபவிக்கக் கருதிய எம்பெருமான் ஒரு பெருமழையை வியாஜமாக்கித் திருக்கோவலிடைகழியில் நெருக்கி யநுபவித்தானென்பது வரலாற்றின் சுருக்கம்.  இப்பேயாழ்வாரைப் பற்றித் திருவரங்கத்தமுதனார் நூற்றந்தாதியில் அருளிச் செய்யுமிடத்து “மன்னிய போpருள் மாண்டபின் கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ் தலைவன்” என்றார்.  பொய்கையாரும் பூதத்தாரும் இருவிளக்கேற்றியிருளையகற்ற, இவ்வாழ்வார் “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று தொடங்கிப் பலாநுபவம் செய்தருளினார் என்பர் ஆன்றோர்.  ஆவ்வர்த்தமே யிங்கு முதலடியிற் பொலியும்.  நோற்று – மற்றையிரண்டு ஆழ்வார்களும் விளக்கேற்றுகையாகிற உபாயாநுஷ்டானஞ் செய்யவே என்றபடி.  சுவர்க்கமாவது ஆனந்தாநுபவம்.  “யஸ்த்வயாஸஹ ஸஸ்வர்க்கோ நிரயோ யஸ் த்வயாவிநா” என்று ஸ்ரீ ராமாயணத்தில் பிராட்டி அருளிச் செய்ததுங் காண்க.  “வாசல் திறவாதார்” என்றது பேயாழ்வார்க்கு மிகவும் பொருத்தமான லிங்கம்.  திருக்கோவ லிடைகழியில் பொய்கையார் முன்னே புகுந்து தாளிட்டுக் கொண்டார்; பிறகு பூதத்தார் வந்து சேர அவர்க்கு அப்பொய்கையார் வாசல் திறந்தார்.  பிறகு வந்து சேர்ந்த பேயார்க்குப் பூதத்தார் வாசல் திறந்தார்.  இப்பேயார்க்குப் பிறகு ஒருவரும் வந்து புகாமையினால் வாசல் திறக்கவேண்டிற்றில்லை.  ஆகவே வாசல் திறவாதார் என்றது பேயாழ்வார்க்கு மிகப்பொருத்தமாக அமைந்த குறிப்பு.  (நாற்றத்துழாய்முடி நாராயணன்) இவ்வாழ்வாருடைய பாசுரங்கள் திருத்துழாய் மயமாகவேயிருக்கும்.  திருக்கண்டேனுக்கு அடுத்த பாசுரம் “பொன் தோய்வரை மார்பில் பூந்துழாய்” என்பது.  அதற்கடுத்த பாசுரம் “மலராள் தனத்துள்ளான் தண்டுழாய் மார்வன்” என்பது.  முடிவு பாசுரத்திலும் “தண்டுழாய்த்தார் வாழ் வரை மார்பன்” என்றார்.  இடையிலும் பல பாசுரங்கள் காண்க.  ஒன்பதாவது பாசுரத்தில் (நாமம் பல சொல்லி – யென்பதில்) நாராயணனையும் திருத்துழாயையும் கண்ணனையும் சேர்த்துப் பாடினார் பேயார்.  இதுவும் ஒரு சிறந்த பொருத்தம்.  “காண்காணென விரும்பும் கண்கள்” என்று ஒரு நொடிப் பொழுதும் கண்மூடியிருக்க மாட்டாமையைச் சொல்லிக்கொண்ட நீர் கும்பகர்ணனுக்கும் மேலாக இன்னமும் துயில் கொள்ளல் தகுதியோ என்கிறாள் பண்டோருநாளென்று தொடங்கி.  இப்பாட்டில் நட்ட நடுவில் இராமபிரானுடைய திவ்ய சரித்திர மொன்றை ஆண்டாள் அமைத்தது பேயாழ்வாருடைய திருவந்தாதியில் நட்ட நடுவில்; “அவனே – இலங்காபுரமெரித்தானெய்து” என்றும் “எய்ததுவும் தென்னிலங்கைக் கோன்வீழ” என்றும் அருளிச்செய்தமைக்கு நன்கு ஒக்கும்.  திருமழிசையாழ்வாரை யுணர்த்தின் கீழ்ப்பாட்டில் அனந்தலோ என்று வெறும் அனந்தலே சொல்லிற்று.  இப்பாட்டில் ஆற்றவனந்தலுடையாய்! என்கிறது – மழிசையர் கோனுக்கும் இவ்வாழ்வார் ஆசாரியராதலால் விசேஷணமிட்டபடி அனந்தல் என்று ஹேயமான உறக்கமன்று சொல்லுகிறது.  ழூஉரோவிந்யஸ்த ஹஸ்தாஸ்தே நித்ராயந்தே ஸுநிர்ப்பரா :- என்று பகவச் சாஸ்திரங்களில் கொண்டாடப்பட்ட ‘அனந்தல்’ பரமைகாந்தித்வ ஸீமா பூமியைக் காட்டுமது.  (அருங்கலமே!) எம்பெருமானது திருவருளை மிக அருமையாகப் பெற்ற ஸத்பாத்ரமெ! என்றபடி. பாசுரம் தொடங்கும் போதே “திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன்” என்று ஆனந்தமாகத் தொடங்கப்பெற்ற பகவத் பரமக்ருபா பாத்ரபூதர் மற்றொரு ஆழ்வாரில்லையே.  (தேற்றமாய் வந்துதிற) உம்முடைய திருநாமமோ பேயார்; பேய்த்தனமாக வாராமல் தேறி வந்து திறவும் என்கிறாள்.

English Translation

O cousin entering high heaven through vows, will you not answer, nor open the doors? In the days of Yore, the demon king Kumbhakarna fell into the jaws of death through our blessed boon giver, Narayana, who wears the fragrant Tulasi on his crown. But did the demon then transfer his sleep to you? O Rare gem of immense stupour! Come quickly, open the door!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top