(3009)
வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்,
ஆயும் அமருலகும்துஞ்சிலும் நீதுஞ்சாயால்,
நோயும் பயலைமையும் மீதூரவெம்மேபோல்,
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட் பட்டாயே.
பதவுரை
|
வாயும் திரை உகளும் கானல் |
– |
மேன் மேலுங் கிட்டுகின்ற அலைகள் தாவு மிடமான |
|
கடற் கரையிலுள்ள சோலையிலுள்ள |
||
|
மடம் நாராய் |
– |
இளமை தங்கிய நாரையே!, |
|
ஆயம் அமர் உலகும் துஞ்சிலும் |
– |
(நமது) தாயும் தேவலோகமும் உறங்கினாலும் |
|
நீ துஞ்சாய் |
– |
நீ உறங்குகிறாயில்லை; |
|
ஆல் |
– |
ஆதலால் |
|
நோயும் பயலைமையும் மீதூர |
– |
மனவருத்தமும் (அதன் காரியமான) பசலை நிறமும் மேலிட்டுவர |
|
எம்மேபோல் |
– |
எங்களைப்போல |
|
நீயும் |
– |
நீயும் |
|
திருமாலால் |
– |
திருமகள் கொழுநனான எம்பெருமானாலே |
|
நெஞ்சம் கோள் பட்டாயே |
– |
நெஞ்சு பறித்துக் கொள்ளப் பட்டாயோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- பிரிந்தவர்கள் இரங்குவது நெய்தல் நிலத்திலாதலால் ஆழ்வார்இப்போது கடற்கரைச் சோலையிலிருப்பதாகக் கொள்க. ஆங்கு உணவுக்காக ஊக்கங்கொண்டிருக்கின்ற ஒரு நாரை கண்ணுக்குப் புலப்பட, அதனுடம்பில் இயற்கையாகவுள்ள வெண்மையைக்கண்டு அதுவும் தம்மைப்போலவே பிரிவாற்றாமையினால் விவர்ணப் பட்டிருக்கின்றதாகக்கொண்டு நாராய்! ஐயோ! நீயும் நானகப்பட்ட விஷயத்திலே அகப்பட்டு இப்படியானாயோ? என்பதாகச் செல்லுகிறது இப்பாசுரம்.
வாயுந் திரை உகளும்–இதை நாரைக்கு விசேஷணமாகக் கொள்வாருமுளர் , கானலுக்கு விசேஷணமாகக் கொள்வாருமுளர். மேன்மேலும் எறிகின்ற அலையிலே அமுக்கி நடக்கின்ற நாரையே ! என்னவுமாம் திரைகள் உகளப்பெற்ற கானலிலே (கழியிலே) வர்த்திக்கின்ற நாரையே! என்னவுமாம்.
என்னைப்பெற்ற தாயும், உறங்காமையே வடிவான தேவலோகமும் உறங்கினாலும் நீ உறங்குவதில்லையே! இதற்குக் காரணமறிகின்றிலேன்; இப்படி நீ இருப்பதைக் காணுமிடத்து இதற்கொரு சிறந்த காரணமிருத்தல் வேண்டும் உள்ளே யுரகிநைந்து அதன்காரியமாகப் பயலை நிறமும் மேலே ஸ்பஷ்டமாகத் தெரியும்படி யிருந்து நான் நோவுபடுவது பகவத் விஷயத்திலீடுபட்டதனாலே; இப்படிப்பட்ட ‘நோவை நீயும் உற்றிருப்பதாகக் காண்கின்றபடியால் என்னைப்போலவே நீயும் திருமாலால் நெஞ்சு கொள்ளை கொள்ளப் பெற்றாய்போலும் என்றதாயிற்று.
ஆழ்வார் பெண்ணிலைமை யெய்திப் பேசுகிற பதிகம் இது என்பது இரண்டாமடியின் முதற்பதத்தினால் விளங்கும். என்தாய் உறங்கினாலும் நீ உறங்குவதில்லை என்றதனால் பராங்குசநாயகியாகிய இத்தலைமகளின் தாய்க்கு உறக்கமேயில்லை யென்பது வெளியாம். மகளின் உறக்கமின்மை கண்டு வருந்தித் தாயும் உறங்காளென்க. தம்முடைய கண்களுக்குத் துஞ்சுதலில்லாமையை ஆழ்வார்இவ்வழியால் வெளியிட்டது ஒரு சமத்காரம்.
இங்கே நம்பிள்ளை யீடுகாண்மின்;— “இவளைப் பெற்ற தாய்க்கு உறக்க மின்றிக்கே யொழிவானென்னென்னில் முன்பெல்லாம் ‘இவளுக்கு ஸத்ருசனாயிருப்பானொருவனைப் பெற்றுக்கொடுத்தோமாக வல்லோமே’ என்று கண்ணுறங்காது; பின்பு நாயகனைப் பிரிந்து இவள் நோவு படுகிறபடியைக்கண்டு அத்தாலே கண்ணுறங்காது.”
நோயும் பயலைமையும்ஸ்ரீநோய் கண்ணுக்குத் தெரியாதது; பயலைமை கண்ணுக்குத் தெரிவது. (பயலைமையைப்பற்றின விவரணம், கீழ்முதற்கத்தில் நான்காந்திருப்பதிகத்தில் நாலாவது பாசரத்தின் தீபிகையில் விரித்துரைக்கப்பட்டுள்ளது, காண்க.)
மீதூர = விஷமேறினாற்போலே உடம்பிலே வியாபிக்க என்றபடி இப்படிப்பட்ட நாரையின் நிலைமையைக்கண்ட ஆழ்வார்“நீயுந் திருமாலால் நெஞ்சங் கோட்பட்டாயே” என்று பகவத் விஷய ப்ராவண்யமடியாகத்தான் உனக்கு இந்த நிலைமை ‘உண்டாயிருக்க வேணுமென்று கூறுதற்குக் காரணம் அவதாரிகையிற் காண்க.
ஆசார்யஹ்ருதயத்தில் “அச்சேத்யமென்னுமது ஈரும் வேம் ஈரியாயுலர்த்த வெள்ளப்பட” இத்யாதி சூர்ணிகையில் “காற்றுங் கழியுங்கட்டியழக் கொண்ட பெருங்காதலுக்குப் பத்திமை நூல் வரம்பில்லையே” என்றருளிச்செய்தது நோக்கத்தக்கது. இதனால் ஆழ்வாருடைய ப்ரேமம் ஒரு நூல்வரம்புக்கு அடங்காதது என்று ஸ்தாபிக்கப்பட்டது.
English Translation
O white egret, flapping over brackish waters! Even if my mother and the godly world sleep, you do not go to sleep, Are you tool, like me, forsaken by the Lord, -spouse of Lakshmi, -and left to pale and sicken?
