(2978)

(2978)

கண்ணா வானென்றும், மண்ணோர்விண்ணோர்க்கு,

தண்ணார் வேங்கட, விண்ணோர் வெற்பனே.

 

பதவுரை

மண்ணோர்

மண்ணுலகத்தார்க்கும்

விண்ணோர்க்கு

விண்ணுலகத்தார்க்கும்

என்றும்

எப்போதும்

கண் ஆவான்

கண்ணாயிருப்பன், (யாவனென்னில்)

தண் ஆர்

குளிர்ச்சி நிறைந்த

வேங்கடம்

திருவேங்கடமென்கிற பெயரையுடைய

விண்ணோர் வெற்பன்

நித்யஸுரிகட்கிடமான திருமலையை யுடையவன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இரட்டைப்பிள்ளைபெற்ற தாயானவள் இருகுழந்தைகட்கும் முலை கொடுக்கப்பாங்காக நடுவே கிடக்குமாபோலே நித்யஸூரிகளுக்கும் ஸம்ஸாரிகளுக்குமொத்த முகந்தருதற்காகத் திருவேங்கடமலையிலே நின்றருளும் நீர்மையை அருளிச்செய்கிறார்.

‘கண்ணாவான்’ என்பதைப் பெயர்ச்சொல்லாகவுங்கொள்ளலாம், வான்விகுதி பெற்ற வினையெச்சமாகவுங் கொள்ளலாம். பெயர்ச்சொல்லாகக்கொண்டால் ‘கண்ணாயிருப்பவன்’ என்றபடி வினையெச்சமாகக்கொண்டால் ‘கண்ணாயிருப்பதற்காக’ என்றபடி * சக்ஷுர் தேவாநாமுத மாத்யானாம்* என்கிற வேதவாக்கியத்தை மொழிபெயர்ப்பனபோலுள்ளன முதலிரண்டடிகள்.

மேலுள்ளவர்கள் சிறிதுதூரம் பயணமெடுத்துவந்து சேரும்படியாய் கீழுள்ளவர்களும் சிறிதுதூரம் சென்று சேரும்படியாய் “தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே, வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு” (நான்முகன் திருவந்தாதி). என்கிறபடியே இருதலையார்க்கும் நிதியாகவுள்ள திருவேங்கடமலையில் ஸந்நிதிபண்ணியிராநின்றான்.

திருமலையானது மண்ணவர்க்கும் விண்ணவர்க்கும் பொதுவான தலமாயிருக்கச்செய்தே இங்க ‘விண்ணோர்வெற்பு’ என்றது ஏனென்னில்; ஸம்ஸாரிகளைக் காட்டிலும் நித்யஸூரிகளே பெரும்பான்மையாக அநுபவிப்பவர்களாதல் பற்றியென்க. “மந்திபாய் வடவேங்கடமாமலை வானவர்கள் சந்நிசெய்யநின்றான்” என்பர் திருப்பாணாழ்வாரும். திருமலையிலுள்ள பசு பக்ஷி திர்யக் ஸ்தாவரங்களையுமெல்லாம் நித்யஸூரிகளின் ப்ராதுர்ப்பாவங்களாகவே கருதுவர் பெரியோர்.

 

English Translation

Always dear-as-eye to celestials and mortals, he rules over Venkatam, where gods vie to serve

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top