(2834)
சொல்லார் தமிழொரு மூன்றும் சுருதிகள் நான்குமெல்லை
இல்லா அறநெறி யாவும் தெரிந்தவன் எண்ணருஞ்சீர்
நல்லார் பரவும் இராமா னுசன்திரு நாமம் நம்பிக்
கல்லார் அகலிடத் தோர், எது பேறென்று காமிப்பரே.
பதவுரை
|
அகல் இடத்தோர் |
– |
விசாலமான இப்பூமியிலுள்ளவர்கள், |
|
சொல்ஆர் தமிழ் ஒரு மூன்றும் |
– |
சொல் நிரம்பிய இயல் இசை நாடகம் என்கிற ஒப்பற்ற முத்தமிழையும் |
|
சுருதிகள் நான்கும் |
– |
நான்கு வேதங்களையும் |
|
எல்லை இல்லா அறம் நெறி யாவும் |
– |
கணக்கில்லாத தரும சாஸ்திரங்களையும் மற்றும் எல்லாக்கலைகளையும் |
|
தெரிந்தவன் |
– |
அறிந்தவராயும், |
|
எண் அரு சீர் |
– |
எண்ண முடியாத குணங்களையடையவராயும் |
|
நல்லார் பரவும் |
– |
ஸத்துக்களான் துதிக்கப்படுபவராயு மிருக்கிற |
|
இராமாநுசன் |
– |
எம்பெருமானாருடைய |
|
திருநாமம் |
– |
திருநாமத்தை |
|
நம்பி கல்லார் |
– |
(என் வார்த்தையை) நம்பிக் கற்கின்றார்களில்லை; |
|
(ஸ்ரீ ராமாநுஜ நாமஸங்கீர் த்தநமே புருஷார்த்த மென்று அறியாதவர்களாய்) |
||
|
எதுபேறு என்று காமிப்பரே! |
– |
நமக்குப் புருஷார்த்தம் எது? என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஐயோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சொல் ஆர் தமிழொரு மூன்றும் = இயல் இசை நாடகம் என மூவகைப்படும் தமிழ் – ‘எழுத்துப் பதின்மூன்று இரண்டசை சீர்முப்பதேழ் தளை ஐந்து, இழுக்கிலடிதொடை நாற்பதின் மூன்று ஐந்துபா இனம் மூன்று, ஒழுகிய வண்ணங்கள் நூறு ஒன்பது ஒண்பொருள் கோள் இருமூ, வழுக்கில் விகாரம் வனப்பெட்டு யாப்புள் வகுத்தனவே” என்று தொகுத்து உணர்த்தப்படும் இயற்றமிழின் இலக்கணங்கள் குறிஞ்சி, செருந்தி, இந்தளம், கொல்லி, நாமரம், தக்கேசி, பஞ்சமம், கைசிகம் காந்தாரம் பாலை யாழ் முதலிய பண்களைக் கொண்டுள்ள தமிழ் இசைத்தமிழாம் இயலுக்கும் இசைக்கும் பொது வானது நாடகத் தமிழாம் தராவிட சாஸ்த்ரங்களெல்லாவற்றையும் அறிந்தவர் எம்பெருமானார் என்கிறது.
சுருதிகள் நான்கும் = ருக்கு, யஜூஸ், ஸாமம், அதர்வணம் என வேதங்கள் நான்காம். எல்லையில்லா அறநெறி = தர்மசாஸ்த்ரங்கட்கு அளவே யில்லை. யாவும் = கீழ்ச் சொன்னவற்றையும் மற்றுமுள்ள கலைகளையும்.
English Translation
The good ones praise Ramanuja as the knower of the countless paths of righteousness fought by all religious. He is a master of the four Vedas, and well-vesed in the three aspects of sweet Tamil –poetry, music and drama. For those who do not learn his name with faith, what great purpose awaits them in this world?
