(2666)

(2666)

தெரிந்துணர்வொன் றின்மையால் தீவினையேன்,

வாளா இருந்தொழிந்தேன் கீழ்நாள்கள் எல்லாம்,-கரந்துருவில்

அம்மனை அந்நான்று பிந்தொடர்ந்த ஆழியங்கை

அம்மானை யேத்தா தயர்ந்து.

 

பதவுரை

தீ வினையேன்

மஹாபாபியான நான்

தெரிந்த உணர்வு ஒன்று இன்மையால்

விவேகவுணர்ச்சி சிறிதுமில்லாமையினாலே

அந்நான்று

முன்பொருகாலத்தில்

கரந்த உருவிய அமானை பின் தொடர்ந்து

நிஜமான வுருவத்தை மறைத்துக்கொண்டு வந்த அந்த மாரீச மானைப் பின் தொடர்ந்து கொன்ற

ஆழி அம் கை அம்மானை

அறுகாழி மோதிரத்தை அழகிய திருக்கையிலணிந்திருந்த இராமபிரானை

ஏத்தாது

தோத்திரம் செய்யாமல்

அயர்த்து

அறிவுகெட்டு

கீழ் நாள்கள் எல்லாம் வானா இருந்தொழிந்தேன்

கீழ்க்கழிந்த காலமெல்லாம் வீணாக இருந்து விட்டேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  (தெரிந்துணர்வு.) ஆழ்வார் இப்போது பகவத் குணாநுபவம் பண்ணப் பெற்றதுபோல கீழ்நாள்களிலும் பண்ணப்பெறவில்லையே! என்று அனுதாபம் அதிகரிக்கப்பெற்று, “பழுதே பல பகலும் போயினவென்று அஞ்சியழுதேன்” என்று பொய்கையாழ்வார் கதறினதுபோலத் தாமும் கதறுகின்றார்.

“உணர்வின்மையால், உணர்வொன்றின்மையால், தெரிந்துணர் வொன்றின்மையால்” என்று மூன்றுபடியாக்கி யோஜிக்கவேணும். ‘தேஹத்திற் காட்டில் ஆத்மா வேறுபட்டவன்’ என்கிற ஞானமில்லாமையைக் கருதி ‘உணர்வின்மையால்’ என்றார்; ‘ஆத்மா எம்பெருமானுக்கு சேஷப்பட்ட வஸ்து’ என்கிற ஞானமில்லாமையைக் கருதி ‘உணர்வொன்றின்மையால்’ என்றார்; ‘பகவத்சேஷத்வத்துக்கு எல்லைநிலம் பாகவதசேஷத்வம்’ என்கிற ஞானமில்லாமையைக் கருதித் ‘தெரிந்துணர்வோன்றின்மையால்’ என்றார். ஆக, இப்படிப்பட்ட விவேகவுணர்ச்சிகளில்லாமையினாலே பாவியேன் வாணான் பலவற்றை வீணாளாகக் கழித்தொழிந்தேன்- என்கிறார்.

(கரந்துருவின் இத்யாதி.) அன்பர்கள் ஏவின காரியத்தை அன்புடன் ஏற்றுச் செய்யவல்ல பெருமானுடைய திருக்குணங்களிலீடுபட்டுத் துதிந்துவாழமே பாழேபோனேனென்கிறார் மாரீசன் நிறுரூபத்தை மறைத்துப் பொன்மான் வடிவுபூண்டு பஞ்சவடியில் வந்து தோன்றினபோது,1. “பொன்னொத்தமானொன்று புகுந்தினிதுவிளையாடவு நின்னன்பின் வழிநின்று சிலை பிடித்தெம்பிரானேக” (பெரியாழ்வார் திருமொழி 3-10-7)  என்கிறபடியே, பிராட்டியின் முகம் கன்றாமைக்காக அம்மாயமானைப் பிடித்து வருவதாக  அதன்பின்னேயெழுந்தருளினவனும் அறுகாழி மோதிரத்தைத் திருக்கையிலே அணிந்திருந்தவனுமான இராமபிரானைத் துதிக்கப்பெறாமல் அறிவு கெட்டுக் காலங்களைப் பாழேகழித்தேன்.

“கைகேயிலரத்தில் அகப்படாவிட்டது பெருமான் திருக்கையில் அறுகாழியொன்றுமெயிறே” என்றும், “பெருமாள் மாயமானை எய்து மீண்டெழுந்தருளுகிறபோது அடிக்கொதித்து நடக்கமாட்டாமை தளிர்களை முறித்திட்டு அதன்மேலே எழுந்தருளினாரென்று ஒருவன் கவிபாட எம்பெருமானார் கேட்டருளி ‘மாறியிடுகிற திருவடிகளிலே என் தலையை மடுக்கப் பெற்றிலேனே.” என்று வித்தராயருளினார்” என்றுமுள்ள வியாக்கியான ஸ்ரீஸூக்திகள் அநுஸந்திக்கத்தக்கன.

“தெரிந்துணர்வு” என்றவிடத்தும் “கரந்துருவின்” என்ற விடத்தும் தொகுத்தல்விகாரம்; தெரிந்த + உணர்வு; காந்த + உருவின்

 

English Translation

The Lord with the ring on his finger pursued a Rakshasa disguised as a deer and killed if. Alas, not realising the truth, the days I have been remiss in praising him tirelessly, are days wasted.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top