(2643)

(2643)

மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்

காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப்

போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்

பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.

 

பதவுரை

பேர் ஓதம்

விசாலமான கடலிலே

சிந்து திரை ஊடேபோய்

சிதறிவிழுகின்ற அலைகளினுள்ளே சென்று

கண்வளரும்

திருக்கண் வளர்ந்தருளா நின்ற

பேராளன்

எம்பெருமானுடைய

பேர்

திருநாமங்களை

ஓத

அநுஸந்திக்க வேணுமென்று

சிந்திக்க

நினைத்த மாத்திரத்திலே,

வல்வினையார்

கொடிய பாவங்கள்

பேர்ந்து

நம்மைவிட்டுக் கிளம்பி

காடானும் ஆதானும் கைக்கொள்ளார்

காடுகளிலோ மற்றேதேனு மோரிடத்திலோ போய்ச் சேராமலிருக்கின்றனவே, (இது)

மாடு வரப்பெறுவராம் என்றே?

இன்னமும் நம்மிடத்திலே வாழப்பெறலாமென்கிற எண்ணத்தினாலோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (மாடே வரப்பெறுவர்.) இவ்விருள் தருமாஞாலத்திலே எப்படிப்பட்ட ஞானியர்களும் ப்ரக்ருதிஸ்வபாவங்களை உதறித்தள்ளிவிட்டு எம்பெருமானுடைய திருக்குணங்களை அநுபவித்துக் கொண்டேயிருந்தாலும்,இடையிடையே இந்நிலத்தின் காரியம் நிகழ்ந்தே தீருமிறே. இல்லாவிடில் இருள் தருமாஞாலமென்று இவ்விபூதியின் பெயர் பொய்யாகுமே; இருள் இடையிடையே கலந்து பரிமாறுமிறே. கீழே சில பாட்டுக்களாலே ஆச்சரியமாக பகவத்குணாநுபவஞ் செய்து வந்த ஆழ்வார்க்கு இந்த ஸமஸார நிலத்திற்குரிய துன்பங்களின் ஸம்பந்தம் தோன்றத் தொடங்கிற்று; தொடங்கவே, திருவுள்ளம் நொந்து பேசுகிறார்-; திருப்பாற்கடலிலே அலைகள் துடைகுத்தத் திருக்கண் வளாந்தருளாநின்ற திருமாலின் திருநாமங்களை நாம் அநுஸந்திக்க வேணுமென்று சிந்தித்த மாத்திரத்திலேயிருக்க இன்னமும் இவ்விடத்திலேயே சுற்றுக் காலிட்டுக்கொண்டு திரிகின்றனவே, முன்போல இன்னமும் நம்மிடத்திலேயே தங்கியிருக்கலாமென்று நினைத்திருக்கின்றனவோ? என்கிறார்.

கீழ் ஐம்பத்து நான்காம்பாட்டில் “வானோ மறிகடலோ மாருதமோ தீயகமோ கானோவொருங்கிற்று” என்று வல்வினைகள் போனவிடம் தெரியவில்லையென்றருளிச்செய்த ஆழ்வார் திருவாக்கிலே மீண்டும் “வல்வினையார் காடானுமாதானும் கைக்கொள்ளார்” என்கிற இப்பாசுரமும் வெளிவரும்படியாயிருக்கிறகிறே இவ்விருள் தருமாஞாலத்தின் கொடுமை!.

கீழ்ப்பாட்டில் மாடு என்பதற்கு செல்வம் என்று பொருள்; இப்பாட்டில் அப்பதமே பக்கமென்ற பொருளில் வந்தது. (“மாடு பொன்பக்கம் செல்வம்” என்பது நிகண்டு.) வரப்பெறுவராமென்றே? என்ற சொல் நயத்தினால், இனி அவ்வாசைக்கு இடமில்லை; வல்வினைகட்கு இனி நம்மிடத்தில் தங்க முடியாது- என்பது விளக்கப்பட்டதாம்.

 

English Translation

The Lord reclines on a serpent in the middle of the ocean lapped by splashing waves,  Even as we think of him, out terrible karmas leave us, but they do not go away to the forest of elsewhere.  They remain close by, so that they can enter again.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top