(2630)

(2630)

நான்கூறும் கூற்றவ தித்தனையே, நாணாளும்

தேங்கோத நீருருவன் செங்கண்மால்,-நீங்காத

மாகதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு,

நீகதியா நெஞ்சே! நினை.

 

பதவுரை

தேங்கு ஓதம் நீர் உருவன்

ஓடாமல் தேங்குகின்ற கடல் போன்ற திருநிறத்தையுடையவனும்.

செம் கண்

செந்தாமரை போன்ற திருக்கண்களையுடையவனுமான

மால்

ஸர்வேச்வரன்

நீங்காத

ஒருநாளும் விட்டுப்பிரியக்கூடாத

மா கதி ஆம்

சிறந்த உபேயமாயிரா நின்றான்; (அவ்வளவு மல்லாமல்,)

வெம்நரகில்

கொடியஸம்ஸாரத்திலே

சேராமல்

பொருந்தாமல்

காப்பதற்கு

நம்மை ரக்ஷிப்பதற்கு

கதி ஆம்

உபாயமாகவும் இராநின்றான்;

நெஞ்சேரி நினை

நெஞ்சே!  (இதை) நீ அநுஸந்திக்கக்கடவை;

நாள் நாளும்

நாள்தோறும் (உடனுக்கு) நான்

நான் கூறும் கூற்று ஆவது இத்தனையே

சொல்லும் சொல்லாவது இங்ஙனமே காண்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- (நான் கூறும் கூற்றாவது.) உபாய உபேயங்களிரண்டும் எம்பெருமானேயென்னும் உறுதியை உரைக்கின்றார். கடல்வண்ணனாய்ச் செந்தாமரைக் கண்ணனான ஸ்ரீமந்நாராயணனே மீட்சியில்லாதபடி நம்மைச் சேரவொட்டாமல் செய்தருளவல்ல உபாயமும் அவனே; ஆகையாலே அவனைத்தவிர்த்து வேறொரு உபாய வஸ்துவும் உபேய வஸ்துவும் நமக்கு இல்லை என்கிற இவ்வுறுதியையே மனமே! நீ எப்போதும் சிக்கனக் கொண்டிரு. இவ்வளவே உனக்கு நான் உபதேசிக்க வேண்டிய விஷயம். இந்த ஒரு வார்த்தையையே நான் உனக்கு நாள்தோறும் சொல்லிக் கொண்டிருப்பேன்- என்று தம் திருவுள்ளத்தை நோக்கி அருளிச் செய்தாராயிற்று.

கூற்று – சொல்; கூறப்படுவது கூற்று. நாணாளும் என்பது முதலடியிலேயே சேர்ந்து அந்வயிக்கவேண்டிய பதமாகையால் அதனை இரண்டாமடியோடு கூட்டி ஓதுவது அஸம்ப்ரதாயமென்க. இப்பாட்டில் கதி என்ற சொல் மூன்றாமடியிலும் நான்காமடியிலும் உள்ளது. இது வடசொல் விகாரம் கதி என்ற வடசொல் வ்யுத்பத்தி பேதத்தால் கமநஸாதநம் என்கிற பொருளையும் கந்தவ்ய ஸ்தலம் (அடைய வேண்டுமிடம்) என்கிற பொருளையும் தரக்கடவது. அதாவது- உபாயம் உபேயம் என இரண்டையுஞ் சொல்லக் கடவது. ஆகவே, இங்கு மூன்றாமடியிலுள்ள கதி சப்தம் உபேயப் பொருளது; ஈற்றடியிலுள்ள கதி சப்தம் உபாயப்பொருளது “நீங்காத மாகதியாம் வெந்நரகில்” என்று கூட்டி ஓதுதல் ஒவ்வொது; ‘மாகதி ஆம்’ என்று முற்று; வெந்நரகுக்கு விசேஷணமல்ல. ஸம்ஸாரத்தை ‘வெந்நரகு’ என்கிறது.

 

English Translation

This is the substance of what we speak, day after day. The Ocean-hued Lord with adorable lotus eyes is our eternal refuge. He is our protection against being cast into terrible hell.  O Heart! contemplate him.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top