(2584)
நளிர்மதிச் சடையனும் நான்முகக் கடவுளும் தளிரொளி யிமையவர் தலைவனும் முதலா,
யாவகை யுலகமும் யாவரும் அகப்பட, நிலநீர் தீகால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க, ஒருபொருள் புறப்பா டின்றி முழுவதும்
அகப்படக் கரந்து ஓர் ஆலிலைச் சேர்ந்தவெம்
பெருமா மாயனை யல்லது,ஒருமா தெய்வம்மற் றுடையமோ யாமே.
பதவுரை
|
நளிர்மதி சடையனும் |
– |
குளிர்ந்த சந்திரனை ஜடையிலே யுடைய சிவனும் |
|
நான்முகன் கடவுளும் |
– |
பிரமதேவனும் |
|
தளிர்ஒளி இமையவர் தலைவனும் முதலா |
– |
தழைத்த ஒளிபொருந்திய தேவேந்திரனும் ஆகிய இவர்கள் முதலாக |
|
யாவரும் |
– |
எல்லாப்பிராணிகளும் |
|
யாவகை உலகமும |
– |
எல்லா வுலகமும் |
|
அகப்பட |
– |
உட்பட |
|
நிலம் நீர் தீ கால் சுடர் இரு விசும்பும் |
– |
பூமி ஜலம் அக்நி வாயு, தேஜஸ் ஸுக்களையுடைய மஹத்தான ஆகாசம் ஆகிய பஞ்ச பூதங்களும் |
|
மலர் சுடர் பிறவும் |
– |
சந்திரன் ஸூர்யன் முதலிய மற்றும் சிறந்த தேஜஸ் பதார்த்தங்களும் |
|
சிறிது |
– |
சிறியதான திருவயிற்றின் ஒரு பக்கத்தில் |
|
மயங்க |
– |
கலசும்படியாக |
|
ஒரு பொருள் புறப்பாடு இன்றி |
– |
ஒரு வஸ்துவும் வெளிப்படாதபடி |
|
முழுவதும் |
– |
எல்லாப் பொருள்களையும் |
|
அகப்பட சுரந்து |
– |
உள்ளேயிட்டு மறைத்து |
|
ஓர் ஆல் இலை சேர்ந்த |
– |
அத்விதீயமான வொரு ஆலந்தளிரிலே பள்ளிகொண்ட |
|
எம் |
– |
எமக்கு ஸ்வாமியாய் |
|
பெரு மா மாயனை அல்லது |
– |
மிகப்பெரிய ஆச்சரியங்களை யுடையனான ஸ்ரீமந்நாராயனான ஸ்ரீமந்நாராயணனைத் தவிர்த்து |
|
மற்று ஒரு மா தெய்வம் |
– |
வேறொரு க்ஷுத்ரதேவதையை |
|
யாம் உடையமோ |
– |
நாம் சேஷியாகக் கொள்ளுவோமோ? (கொள்ளமாட்டோம்) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- ஸகல சேதநர்களும் ஸ்வரூப்ராப்தசேஷியான எம்பெருமானை அடிபணிந்து அவனுக்கே வழுவிலாவடிமைகள் செய்ய ப்ராப்தமாயிருக்க அப்படி செய்யாதே தேவதாந்தரங்களை ஆச்ரயித்து ஸம்ஸாரத்தையே பூண்கட்டிக் கொள்ளுகிறார்களே! அந்தோ! இஃது என்ன அனர்த்தம்! என்று கீழ்ப்பாட்டில் கவலைப்பட்டார். ஒரு ஸம்ஸாரியாவது இவருடைய துயரத்தைப் பரிஹரிக்க முன்வராமற்போகவே, ‘இப்பாழும் ஸம்ஸாரிகள் எக்கேடாவது கெடட்டும் நாமும் அவர்களைப்போலே அனர்த்தப்பட்டுப் போகாமல் எம்பெருமானுக்கே அடிமைப்பட்டிருக்கப் பெற்றோமே! என்று தம்முடைய மனவுறுதிக்கு உகந்து பேசுகிறார் இதில்.
ஸம்ஸாரிகள் பற்றுகிற தேவதாந்தரங்கள் யாவும் நம்மைப்போலவே பலவகை ஆபத்துக்களுக்கு உள்ளாகி எம்பெருமானுடைய திருவருளால் தப்பிப்பிழைப்பவர்களே யொழியபிறருடைய ஆபத்துக்களைத் தாம் பரிஹரிக்கவல்ல ஸர்வ சக்தர்களல்லர் என்பதை விளக்க வேண்டி ‘இந்தத் தெய்வங்களெல்லாம் பிரளயகாலத்தில் எம்பெருமானது திருவயிற்றிலே பதுங்கிக்கிடந்தனை காண்மின்‘ என்கிறார். எல்லாத் தெய்வங்களையும் உய்யக்கொண்ட பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனுக்கன்றி மற்றுயார்க்கும் நாம் அடிமைப்பட்டவர்களல்லோம் என்பது நிகமனம்.
நளிர்மதிச்சடையனும் என்றவிடத்துப் பெரியவாச்சான்பிள்ளை யருளிச்செயல் – “ஸாதக வேஷம் தோற்ற ஜடையைத் தரித்துக் கொண்டிருக்கச் செய்தேயும் துர்மானத்தாலே ஸுக்ப்ரதாநன் என்று தோற்றுபடி தாழை மடலைக் கீறித் தலையிலே வைப்பாரைப் போலே குளிர்ந்த சந்திரனை ஜடையிலே தரித்த ருத்ரனும்“ என்று. இதில்“ தரழைமடலைக்கீறி“ இத்யாதி த்ருஷ்டாந்த வாக்யத்திற்குப் பொருள் யாதெனில் உலகில் மூட்டை சுமந்து வருந்திக் கூஸிஜீவனம் பண்ணுகிறவர்கள் தாங்கள் கஷ்டப்படுகிறவர்களென்பது பிறர்க்குத் தெரியாமைக்காகவும் தாழம்பூ முதலிய பூக்களை யெடுத்துச் சூட்டிக்கொண்டு திரிவர்களாம், அப்படியே சிவபிரானும் தான ஸம்ஹாரக்கடவுளென்பதையும் ஸாதனாதுஷ்டாநம் பண்ணி ச்ரமப்படுகிறவன் என்பதையும் பிறரறிந்து அருவருக்காமைக்காவும் ‘இவன் உல்லாஸமாக இருக்கக்கூடிய ரஸிகன்‘ என்று பலரும் நினைத்துக்கொள்வதற்காகவும் அழகிய சந்திரகலையைச் சிரமீது அணிந்தான் போலும் என்று ஒரு விநோதமாக அருளிச்செய்தபடி.
இந்திரன், அரம்பை ஊர்வசி முதலிய அப்ஸரஸ் ஸ்திரீகள் தன்னை நன்கு காதலிக்கும்படி அலங்காரங்கள் செய்துகொண்டு அதனால் மேனிநிறம் விறுபெற்றிருப்பனாதலால் தளிரொளி என்று விசேஷிக்கப்பட்டான். ஆக முக்யமாகவுள்ள மூன்று தேவர்களைச் சொல்லவே மற்ற சேதநாசேதங்களை விவரித்துச் சொல்ல வேண்டாமை பற்றி முதலா யாவகையலகமும் யாவருமகபட என்றார். எம்பெருமானது திருவயிற்றிலுள்ளே அடங்கிக்கிடந்து ஸத்தைபெற்ற பதார்த்தங்களை தாம் வாய்கொண்டு சொல்லுவதும் நமக்குப் பெரும் பாக்கியமென்றோ என்றெண்ணி நிலநீர்தீகால் சுடரிருவிசும்பும் மலர்சுடர் என்று மீண்டு விவரித்துச் சொல்லத் தொடங்கினர் போலும்.
சிறிதுடன் மயங்க என்பதற்குப் பலவகையும் பொருள் கொள்ளலாம். (கீழ்ச்சொன்ன வஸ்துக்களெல்லாம்) சிறிது – மிகச்சிறிய வடிவத்தை உடையனவாய்க் கொண்டு, உடன் – ஏக்காலத்திலே, மயங்க – உள்ளேயடங்கும்படியாக என்பது ஒருவகை. உடன் மயங்க என்றவிடத்து உடல்மயங்க என்று பதம் பிரித்து, சிறிதாகிய உடலிலே – பேதைக் குழவியான எம்பெருமானது மிகச்சிறியவுடலிலே மயங்க என்றல் மற்றொருவகை. மற்றுங் கண்டுகொள்க. ஆக எல்லாப் பதார்த்தங்களையும் ஒன்று தப்பாமல் திருவயிற்றினுள்ளே அடங்கிக்கொண்டு “பாலன் தனதுருவாய் ஏழுலகுண்டு ஆலிலையின், மேலன்று நீவளர்த்த மெய்யென்பர்“ என்றபடி சிறுகுழந்தை வடிவமாகி முகிழ்விரியாத சிற்றாலந்தளிரிலே கண்வளர்ந்த அற்புத சக்திவாய்ந்த ஸ்ரீமந்நாராயண மூர்த்தியை தவிர்த்து வேறொரு தெய்வத்தை நாம் தெய்வமாகக் கொள்வோம்.
“நெற்றி மேற்கண்ணானும் நிறைமொழிலாய் நான்முகனும் நீண்டநால்வாய், ஒற்றைக்கை வெண்பகட்டிலொருவனையு முள்ளிட்டவமர்ரோடும், வெற்றிப்போர்கடலரையன் விழுங்காமல் தான் விழுங்கி உய்யக்கொண்ட, கொற்றப்போராழியான் குணம் பரவாச்சிறுடிதாண்டர் கொடியவாறே“ என்றும், “அன்றெல்லாருமறியாரோ எம்பெருமானுண்டு மிழந்த எச்சில் தேவர், அல்லாதார் தாமுளரே“ என்றும் (பெரிய திருமொழியில்) திருமங்கை யாழ்வார்ருளிச்செய்த பாசுரங்கள் இங்கே அநுஸந்திக்கத்தக்கவை.
“மங்கைபாகன் சடையில் வைத்த கங்கை யார்பதத்து நீர்? … அங்கண்ஞாலமுண்ட போது வெள்ளிவெற்பு அகன்றதோ? ஆதலாலரங்கனன்றி வேறு தெய்வமில்லையே“ என்ற பிள்ளைப்பெருமாளையங்கார் விடுதிப்பாசுரமும் குறிக்கொள்ளத்தக்கது.
இத்திவ்யப் பிரபந்தம் பெரும்பாலும் எம்பெருமானுடைய பரத்வஸ்ராபனத்திலே நோக்குடையதென்று உணரத்தக்கது.
திருவிருத்தத்திலும் திருவாய்மொழியிலும் ஆழ்வார் தம்முடைய திருநாமத்தை அருளிச்செய்துளர், இப்பிரபந்தத்தில்அப்படி அருளிச் செய்யவில்லை என்பதைக் காரணமாகக் கொண்டு சிலர் சொல்லுவதாவது – இத்திருவாசிரியம் இன்னும் பல பாசுரங்களையுடைய பிரபந்தமாயிருந்த்தென்றும், காலக்கிரமத்தில் சில பாசுரங்கள் லோபித்துவிட்டனவென்றும் சொல்லுகிறார்கள். நம்மாழ்வாருளிச்செய்த நான்கு பிரபந்தங்களும் இதற்கு அடுதத்தான பெரிய திருவந்தாதியிலும் ஆழ்வாருடைய திருநாமம் அருளிச் செய்யப்பட்டிருக்க வில்லையாகையால் இது சேராது அந்தாதித் தொடையாக அமைந்த பிரபந்தங்கள் எல்லாவற்றிலும் முடிவு பாசுரத்தின் அந்தமும் முதற்பாசுரத்தின் ஆதியும் ஒன்றாக அமையும்படி அருளிச் செய்யப்பட்டிருப்பதுபோல் இப்பிரபந்தத்தில் அமையாமையால் இதைக் கொண்டு இதில் சில பாசுரங்க் லோபித்துவிட்டவென்று சொல்லுவர் சிலர், அதுவும் சேராது ஈற்றுத் தமிழர் சொல்லிவைத்திருக்கையால் இப்பிரபந்தம் மண்டலித்தலாகாது என்று சொல்லாமத்தனையொழிய பாசுரங்கள் லோபித்தன என்றால் பொருந்தமாட்டாது. ஆகவே இப்பிரபந்தம் பூர்ணமென்றே கொள்ளத்தக்கது.
English Translation
All the worlds without a single exception, all the souls and all the gods, including the crescent-headed Siva, the four-faced Brahma, and the radiant Indra, along with Earth, fire, water air, space and the twin orbs, fitted into a small child’s stomatch. The Lord swallowed everything and lay sleeping on a fig leaf in the deluge waters, Knowing him as we do, will we ever serve another god?
