(2527)

(2527)

ஒண்ணுதல் மாமை ஒளிபய வாமை, விரைந்துநந்தேர்

நண்ணுதல் வேண்டும் வலவ! கடாகின்று தேன்நவின்ற

வண்முதல் நாயகன் நீள்முடி வெண்முத்த வாசிகைத்தாய்

மண்முதல் சேர்வுற்று அருவிசெய் யாநிற்கும் மாமலைக்கே.

பதவுரை

வலவ

பாகனே!
ஒன்நுதல்

அழகிய நெற்றியையுடையவளான நாயகியின்
மாமை ஒளி

மேனி நல்நிறத்தின் விளக்கம்
பயவாமை

பசப்பு அடையாதபடி (அதற்கு முன்னமே!)
நம் தேர்

நமது தேர்
விரைந்து நண்ணுதல் வேண்டும்

துரிதமாகச் சென்று சேர வேண்டும்;

(எவ்வித்திற்கு? என்றால்)

தேன் நவின்ற

வண்டுகள் பாடப்பெற்ற
விண் முதல் நாயகன் நீள் முடி

பரமபதநாதனான பெருமானது நீண்ட திருமடியில் தரித்த
வெள் முத்தம் வாசிகைத்து ஆய்

வெண்ணிறமான முத்துமாலையின் தன்மையதாய்
மண்முதல் சேர்வு|ற்ற

(முடிதொடங்கி) அடிவாரத்து நிலத்திலே சேரும்படியான
அருவி

நீர்ப்பெருக்கை
செய்யா நிற்கும்

செய்து நிற்கிற
மா மலைக்கு

பெரிய திருமலைக்கு
இன்று கடாக

இப்பொழுது (தேரை)நடத்துவாயாக

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகன் நாயகியினிருப்பிடம் நோக்கி மீண்டு வருகையில் தேர்ப்பாகனோடு கூறுதல் இது. பொருளீட்டிவரப் பிரிந்துசென்ற நாயகன் காரியந் தலைக்கட்டித் தேரில் திரும்பி வருகின்றான்; வரும்போது தான் காலங்கடந்து வருகின்றமை கருதி நாயகி மிகவும் துயரப்படுவளென்றெண்ணித் தேர்ப்பாகனை நோக்கி விரைந்து தேரை நடத்துமாறு கட்டளையிடுதல் இது.

தன்னைப் பிரிந்து நந்திக்ராமத்தில் துடித்துக்கொண்டிருக்கின்ற பரதாழ்வானுடைய ஆற்றாமையைக் கருதி ஸ்ரீராமபிரான் பதினான்கு வருஷகாலம் சென்ற வழியைச் சிறிது காலத்தில் கடந்து மீண்டு வந்தாற்போல, நெடுஞ்காலம் பிரிந்த நாயகன் தான் மீண்டும் வரக்கடவதாக முன்பு சொல்லிப்போன காலம் வந்திட்டவளவிலே இவளாற்றாமையைக் கருதி நெடுநாட்போன வழியைச் சிறிதுபொழுதில் கடந்து மீண்டுவர நினைத்துப் பாகனை நோக்கி ‘விரையத்தேரை நடத்து’ என்கிறான்.

வலவ! ஒண்ணுதல் மானமயொளி பயலாமை மாமலைக்கு நம் தேர் விரைந்து நண்ணுதல் வேண்டும்  (ஆகையாலே) விரைந்து கடாக’ என்று அந்வயிப்பது. நாயகியின் மேனிநல்நிறத்தின் விளக்கம் விகாரப்படுவதற்கு முன்னம் திருமலைக்குச் சென்று சேரவேண்டுமானால் தேரை விரைந்து நடந்து என்றதனால், நாயகியின் மேனியழகு மாறிப்போனால்தான் ஆறியிருக்க வொண்ணாதென்பதும் பசலை நிறம் படர்ந்து விட்டால் அது தன்னாலும் மீட்கவொண்ணாதென்பதும் தோன்றும். விரைந்து நந்தேர் கண்ணுதல் வேண்டும்= விரையச்சென்று சேராவிடில் ஆற்றாமை அதிகப்பட்டு அவள் இறந்து படுவளாதலால் நமக்குப் பழி நேர்ந்திடும். அதற்கு முன்பு செல்லவேண்டுமென்றவாறு.

‘வலவ!’ என்றது அண்மைவிளி. கடாக = கடாவுக. ‘கடாக இன்று’ – கடாக வின்று என்று ஆக வேண்டுவது அங்ஙனம் ஆகாமை தொகுத்தல். இனி, ‘கடாகின்று’ என பனகத் ‘கடாவுக’ என்னும் பொருளதான ஓர் வினைத்திரி சொல்லாகக் கொள்வாருமுண்டு. ‘கடாகின்று நண்ணுதல் வேண்டும்’ என அந்வயித்து, தேரைக் கடாவிக்கொண்டு கிட்டவேண்டும் என்று உரைப்பாருமுளர். அப்போது ‘கடாகின்று’ என்பது- நிகழ்கால வினையெச்சம்.

தேரை நடத்தவேண்டுவது வடதிருவேங்கட மாமலையை நோக்கி என்கிற பின்னடிகளில், இதனால், பாங்குச நாயகி திருமலையில் அவகாஹித்து நோவுபடுகின்றமை தோன்றும். கீழ் “காண்கின்றனகளும்” என்ற எட்டாம்பாட்டில் “இதெல்லாமறிந்தோம் மாண்குன்றமோதி தண்மாமலை வேங்கடத்தும்பர் நம்புஞ் சேண்குன்றஞ் சென்று பொருள் படைப்பான் கற்றதிண்ணனவே” என்று நாயகன் பொருளீட்டுதற்காகப் பிரிந்து திருவேங்கடமலைக்குச் செல்ல நினைத்திருப்பதாகச் சொல்லியிருக்கிறது; இதில் பொருள்வயிற்பிரிந்த தலைமகன் வினைமுற்றித் திருவேங்கடமலைக்குத் திரும்பி வருவதாகச் சொல்லப்படுகிறது; இவை ஒன்றோடொன்று முரண்படுமவையல்ல. இனி, அழகிய மணவாள சீயருரையில்- “இவ்விடத்தில் மாமலைக்கே யென்கிறவிடம் ஆழ்வார்க்கு அணித்தான தெற்குத் திருமலையையாகவுமாம்” என்றதுங் காண்க; திருமாலிருஞ்சோலைமலையைச் சொன்னவாறாம்.

தேன் நவின்ற விண்முதல் நாயகன் நீண்முடி – ‘தேன்நவின்ற முடி’ என்று அந்வயிப்பது எம்பெருமானது திருக்குழல் இயற்கையில் திவ்ய பரிமள முடையதாகையாலும், செண்பக மல்லிகையோடு செங்கழுநீரிருவாட்சி முதலிய நன்மலர்களை எப்பொழுதும் தரித்துள்ளதனாலும் தேன் நவின்ற நீண்முடி யெனப்பட்டது. இனி, ‘தேன்நவின்ற” என்பதை முடிக்கு விசேஷணமாக்காமல் நாயகனுக்கே விசேஷணமாக்கி, மிக்க போக்யதையினால் தேனாகச் சொல்லப்படுகிற எம்பெருமான் என்னவுமாம். “திருவரங்கத்த வளருந்தேன்” என்றார் கலம்பகத்தில் ஐயங்கார். அன்றியே ‘தேன் நவின்ற மாமலைக்கே’ என்று அந்வயித்து மலைக்கு விசேஷணமாக்கவுமாம். ‘தென்னாதெனா வென்று வண்டுமுரல் திருவேங்கடம்” என்றவை காண்க. தேன்- மதுவும், வண்டும். விண்முதல் நாயகன்- விண்ணுலகத்துக்கு முதன்மையான நாயகன் என்றும், விண் முதலிய உலகங்கட்கெல்லாந் தலைவன் என்றும் உரைக்கலாம். வாசிகை- மாலை. ‘வாசிகைத்து’ என்றது- ஒன்றன்பாற் குறிப்பு வினையாலணையும் பெயர். கரிய திருநிறமுடைய எம்பெருமானது திருவடியினின்று திருவடியளவுந் தொங்குகின்ற முத்துமாலை- கரியமலையின் உச்சிமுதல் அடியளவும் இடையறாது பெருகுகின்ற வெள்ளருவுக்கு வாய்த்த உவமை. சேர்வுற்ற அருவி- சேர்வுற்றருவி; பெயரெச்சவீறு தொகுத்தல். ‘மாமலைக்கு கண்ணுதல் வேண்டும்’ என்றதனால் குறிஞ்சி நிலத்துத் தலைமகளென்பது போதரும். ‘கூடுமிடம் குறிஞ்சி’ என்றதும் நினைக்கத்தக்கது.

இப்பாட்டுக்கு உள்ளுறை பொருளாவது- பேறு பெறாமையால் வருந்துகின்ற அழ்வாருடைய ஆற்றாமையை உணர்ந்து அன்புடைய பாகவதர் தேசாந்தரத்தின்று விரைந்து வருதலாம். எம்பெருமானையும் எம்பெருமானடியாரையும் பிரிதலுமாகிய துயர¬ ஆறி ஆழ்வாரைத் தோற்றுவதாக மநோரதம் மேற்கொண்ட பாகவதர் அம்மனோரதத்தைச் செலுத்துலில் வல்ல நெஞ்சை விரையத் தூண்டிய தன்மையாகும் அது. (ஒண்ணுதல் மாமையொளி பயவாமை) திவ்யமான ஊர்த்வபுண்ட்ரத்தால் விளங்குகின்ற திருநெற்றியையுடைய ஆழ்வாரது இயற்கை வண்ணங் கெடாதபடி யென்க. மலை என்றது- ஆழ்வார் எழுந்தருளியுள்ள மேலான இத்தை. அதன் உணர்வு தோன்ற ‘மாமல¬’ என விசேஷித்தது.

English Translation

O Deft one, drive our chariot speedily before the girl’s bright forehead pales, before her colour fades. We have to reach the great bee-humming hill of venkatam where streams drop to Earth like strings of pearls from the crown to feet of the lord.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top