(2519)

(2519)

வன்காற் றறைய ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த

மென்காற் கமலத் தடம்போற் பொலிந்தன மண்ணும்விண்ணும்

என்காற் களவின்மை காண்மினென் பானொத்து வான்நிமிர்ந்த

தன்கால்பணிந்த வென்பால் எம்பிரான தடங்கண்களே.

பதவுரை

எம் பிரான்

எம்பெருமானுடைய
கட கண்கன்

பெரிய திருக்கண்களானவை (எங்ஙனம் விளங்குகின்றனவென்றால்.)
மண்ணும் விண்ணும்

மண்ணுலகமும் விண்ணுலகமுமாகிய விசாலமான இடமிரண்டும்
என் காற்கு

எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு
அளவு இன்னும் காண்மின்

இடம் போதாத அற்புதத்தை பாருங்கள்
என்பான் ஒத்து

என்று (அந்தந்த உலகங்களிலுள்ளார்க்குக் கூறி) ஒரு வித்தை காட்டுபவன் போன்று
வான் நிமிர்ந்த

மேலுலகை நோக்கி வளர்ந்த
தன்

தன்னுடைய
கால்

திருவடிகளை
பணிந்த

வணங்கின
என்பால்

என்னிடத்து.
வன் காற்று அறைய

பெருங்காற்று வீசுதலால்
ஒருங்கே மறிந்து கிடந்து அலர்ந்த

ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த
மென்கால்

மெல்லிய நாளத்தையுடைய
கமலம் தடம்போல்

தாமரைத் தடாகம்போல
பொலிந்தன

அழகுமிக்கு விளங்கின.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நாயகனது நோக்கில் ஈடுபட்ட நாயகி வியந்துரைத்த பாசுரம் இது. ஸர்வேச்வரனாகிய நாயகன் தன் கடைக்கண் பார்வையால் பராங்குச நயாகியாகிய தன்னை ஒருக்கணித்துக் குறிப்பாக நோக்கிப்போன தன்மையில் ஈடுபட்டுக் கூறியதென்க.

எம்பெருமானுடைய திருக்கண்களானவை தனது உலகமளந்த திருவடிகளில் வணங்கின என்னிடத்தில் எப்படியிருந்தனவென்றால், வலிய காற்று வீசுவதால் ஒரு பக்கமாகச் சாய்ந்து கிடந்து மலர்ந்த தாமரைத் தடாகம்போல அழகு மிக்கு விளங்கின- என்கிறாள். ஒருக்கணித்துக் கடைக்கண்ணால் நோக்கிய கண்கள்- வலிய காற்றினால் நேர்நிற்கமாட்டாது ஒருபுறஞ் சாய்ந்து அந்நிலைமையில் மலர்ந்த தாமரைமலர் போன்றனவாம்.

இப்பாசுரத்தைச் சிறுபான்மை அடியொற்றி ஸ்ரீரங்கராஜஸ்தவ உத்தர சக்கரத்தில் ‘ஸ்ரீரங்கேசய! சரணம் மமாஸி வாத்யாவ்யாலோலத்கமல தடாக தாண்டவோ” என்று பட்டா அருளிச்செய்த ச்லோகம் இங்கு ஸ்மரிக்கத்தரும்.

எம்பெருமாள் உலகமளந்த வரலாற்றை ஒரு உத்ப்ரேக்ஷையிலே யிட்டுப் போசுகிறது மூன்றாமடி; ‘மண்ணுக்கும் விண்ணுலகுமாகிய பரந்த இடமிரண்டும் எனது இரண்டு பாதங்களின் அளவுக்கு இடம்போதாத ஆச்சரியத்தைப் பாருங்கோள்’ என்ற அவ்வவ்வுலகங்களிலுள்ளார்க்குக் கூறி ஒரு வித்தை காட்டுபவன் போன்ற உலகமளந்தனனாம் எம்பெருமான். மண்ணும் விண்ணும் எம்பெருமானுடைய பாதங்களின் அளப்புக்கு இடம்போதாத தன்மை கம்பராமாயண்திலும் 1. “நின்றகால் மண்ணெலாம் நிரப்பியப்புறம், சென்ற பாவிற்றிலை சிறிது பாரெனா, ஒன்ற வானகமெலாமொடுக்கி யும்பரை,வென்ற கால் மீண்டது வெளிபெறாமையை” 2. “உலகலாமுள்ளபடி யடக்கி” என்வற்றால் காட்டப்பட்டது. ‘தவகால் பணிந்த’ என்றவிடத்து ‘கால்’ என்பதை ஏழலுருவாகக் கொண்டு ‘தன்னிடத்தில் ஈடுபட்ட’ என்றும் பொருள் கொள்ளலாம்.

எல்லாவுலகத்து உயிர்களையும் தன் காற்கீழடிமைகொள்ளத் திருவுள்ளமுகந்த எம்பெருமான் அவ்வுலகை நோக்கி ‘உங்கள் தலையில் என் காலை வைக்கிறேன்’ என்று சொன்னால் அவ்வுயிர்களின் அஹங்கார மமகாரமுடையவை ‘நாங்கள் உன்காலை எம் தலையில் வைக்கவொட்டோம்’ என்று ஆணையிட்டு தடுக்கக்கூடுமென்று கருதி அங்ஙனஞ் சொல்லாமல்’ என் காலுக்கு இவை இடம்போதாத வேடிக்கையைப் பாருங்கோள்’. என்று ஒரு வியாஜமிட்டுச் சொல்லி அவற்றின் முடிமேல் அடிவைத்து அவற்றை ஆட்கொண்டருளினென்பது “மண்ணும் விண்ணுமென் காற்களவின்மை காண்மினென்பானொத்து வான்நிமிர்ந்த தன்கால்” என்றதிற்போதகரும். உயிர்களுக்கு முயற்சியில்லாமல் எம்பெருமான் அருள் செய்தமை இதனால் அறியக்கிடக்கிறது.

இரண்டாமடியில் “மண்ணும் விண்ணும்” என்றிருப்பது ‘விண்ணும் மண்ணு..’ என்றிருந்தால் மோனைக்கு இனிது பொருந்தும்; அப்பாடமேயிருந்து மாறியுமிருக்கலாம். ‘எம்பிரான்’ என்றதில், அ- ஆறனுருபு; “கலியன தமிழிவை’ என்றவிடத்திற்போல.

ஆழ்வார் தம் பக்கல் எம்பெருமான் பரிபூர்ண கடாக்ஷம் பண்ணினபடியைப் பாவனையாலே அநுபவித்து அருளிச்செய்த பாசுரமிது. ‘வன் காற்றறைய’ என்றது தடையில்லாத நடையையுடைய கருணையால் தூண்டப்பட்டது கடாக்ஷவீக்ஷணம் என்றபடி. ‘காருண்ய மாருதாநீதை.” என்றாரிறே திருக்கச்சிநம்பிகள். ‘ஒருங்கே மறிந்து கிடந்தலர்ந்த’ என்றது- இவ்வாழ்வாரொருவர் பக்கலிலே அபிமுகமாய் இவரையே நோக்கி மலர்ந்தமை சொன்னபடி. மென்காலாவது- இந்த அருள்நோக்குக்கு மூலமான திருவுள்ள நெகிழ்ச்சி. கமலத்தடமென்றது நிறத்தாலும் குளிச்சியாலும் பரப்பாலும் உண்டான போக்யதையைப்பற்ற.

English Translation

When the lord grew into the sky, his eyes glanced side wards as if saying, “See, these worlds are not enough for my feet” The wind blowing over me now shows a lake full lotuses, all learning to one side.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top