(2461)

(2461)

விரைந்தடைமின் மேலொருநாள் வெள்ளம் பரக்க,

கரந்துலகம் காத்தளித்த கண்ணன் – பரந்துலகம்

பாடின ஆடின கேட்டு,படுநரகம்

வீடின வாசற் கதவு.

 

பதவுரை

உலகம்

சிறந்த பாகவதர்கள்

பரந்து

எங்குத் திரிந்து

பாடின

பாடின பாடல்களையும்

ஆடின

ஆடின ஆட்டங்களையும்

கேட்டு

கேட்டதனால்

படு நரகம் வாசல்

க்ரூரமான நரகங்களின் வாசல்களிலிருந்த

கதவு

கதவுகள்

வீடின

விட்டொழிந்தன (நரக வாசல்கள் பாழாய்ப் போயின)

மேல் ஒருநாள்

முன்னொரு காலத்தில்

வெள்ளம் பரக்க

பிரளய வெள்ளம் பரவினபோது

உலகம்

உலகங்களை யெல்லாம்

கரந்து

(திருவயிற்றில்) மறைத்து வைத்து

காத்து அளித்த

துன்பங்களைப் போக்கி ரக்ஷித்த

கண்ணன்

கண்ணபிரானை

விரைந்து அடைமின்

சீக்கிரமாகச் சென்று பணியுங்கோள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முன்பு பிரளயம் வருகிறதென்று உலகங்களையெல்லாம் திருவயிற்றிலே வைத்து, பிரளயப்பெருவெள்ளம் தேடிவந்தாலும் அத்தனைபோதும் தெரியாதபடி மறைத்து காத்து ரக்ஷித்தருளின கண்ணபிரானை விரைந்து அடையுங்கோள் என்கிறார் முன்னடிகளால். இப்படி பகவத் பஜநம் பண்ணினால் நரகவாசற்கதவுகள் வேர்பறியுண்டு நரகமே ஒழிந்துபோம் என்று எதிர்கால நிகழ்ச்சி கூறவேண்டுமிடத்து, தேற்றத்தினால் இறந்தகால நிகழ்ச்சியாகவே பின்னடிகளிற் கூறுகின்றார்.

ஒருவனை ‘இங்கே வா‘ என்றழைக்க, அதற்கு அவன் இருந்தவிடத்திலிருந்து கொண்டே ‘வந்துவிட்டேன்‘ என விடையளித்தால் ‘உடனே (காலதாமதமின்றி) வந்துவிடுவேன்‘ எனப் பொருள்படுதல்போல, இங்கும் ‘படுநரக வாசற்கதவு வீடின‘ என்று இறந்த காலமாகச் சொல்லப்பட்டுள்ளது எதிர்காலமாகப் பொருள்படலாம். அன்றியே, இதுவரையில் பல பாகவத ச்ரேஷ்டர்கள் பகவத் பஜநம்பண்ணி மகிழ்ச்சிக்குப் போக்குவீடாக ஆட்டமும் பாட்டமும் செய்ததனால் நரகவாசல் புல்மூடிப் போயிற்று என்னும்படியாக அவர்கள் நற்கதி பெற்றார்களாதலால் அப்படி நீங்களும் நற்கதி பெறுமாறு கண்ணனை விரைந்தடையுங்கள் என்பதாகவும் உரைக்கலாம்.

‘உலகமென்பது உயர்ந்தோர்மாட்டே‘ என்ற தொல்காப்பியத்தை யடியொற்றி இங்கு ‘உலகம்‘ என்பதற்கு ‘சிறந்த பாகவதர்கள்‘ என்று பொருள் கொள்ளப்பட்டது.

‘பாடின‘ என்பதும் ‘ஆடின‘ என்பதும் இரண்டனுருபு தொக்க வினையாலணைபும் பெயர்கள். “அறிவிலாமணிச் ரெல்லாமரங்கமென்று அழைப்பராகில், பொறியில் வாழ்நரகம் எல்லாம் புல்லெழுந்தொழியு மன்றே“ என்ற திருமாலைப் பாசுரம் பின்னடிகட்டுச் சார்பாக அநுஸந்திக்கத்தகும்.

 

English Translation

Heart the songs of devotees, see their dances in the sacred world. Quickly attain the lord kirshna who came as a child and protected the Earth from the deluge. The doors to hell will close of their own.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top