(2246)

(2246)

பணிந்தேன் திருமேனி பைங்கமலம் கையால்

அணிந்தேனுன் சேவடிமே லன்பாய், – துணிந்தேன்

புரிந்தேத்தி யுன்னைப் புகலிடம்பார்த்து, ஆங்கே

இருந்தேத்தி வாழும் இது.

 

பதவுரை

திருமெனி

உனது திருமேனியை

பணிந்தேன்

ஸேவித்தேன்

உன் சே அடி மேல்

உனது செவ்விய திருவடிகளின் மேல்

பை கமலம்

அழகிய தாமரை மலர்களை

அன்பு ஆய்

அன்புகொண்டு

கையால் அணிந்தேன்

கையால் ஸமர்ப்பித்தேன்

உன்னை

உன்னை

புரிந்து ஏத்தி

விரும்பித் துதித்து

புகல் இடம் பார்த்து

பரமபதத்திலிருக்குமிருப்பை நோக்கி

ஆங்கே இருந்து ஏத்திவாழும் இது துணிந்தேன்

அவ்விடத்திலேயே இருந்துகொண்டு மங்களாசாஸநம் பண்ணி வாழும் வாழ்ச்சியே உரிய தென்று அத்ய வஸாயங்கொண்டேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இதுவரையில் தாம்பெற்ற லாபத்தை முன்னடிகளிற்பேசி, இனிப்பெறவிரும்பும் லாபத்தைப் பின்னடிகளிற் பேசுகிறார். திருமேனி பணிந்தேன் – உன்னுடைய திவ்யமங்கள விக்ரஹத்தை ஸேவித்து அதிலே ஆழங்காற்பட்டு வேரற்ற மரம் போலே விழுந்தேன் என்றபடி. அன்பாய் உன் சேவடிமேல் கையால் பைங்கமலமணிந்தேன் – அடிமை செய்யாவிடில் தரிக்க மாட்டாத ப்ரேமத்தை யுடையேனாய்க்கொண்டு உன்னுடைய திருவடிகளின்மேல் அழகிய தாமரைப்பூ முதலிய நன்மலர்களை, கைபடைத்த ப்ரயோஜ்னம் பெறுமாறு ஸமர்ப்பிக்கப்பெற்றேன்.

இப்படிச்சொன்ன ஆழ்வாரைநோக்கி எம்பெருமான் ‘இவ்விபூதியில் உமக்கு இவ்வளவு அநுபவம் வாய்த்ததாகில் இனி ஒரு குறையுமில்லையே, இங்கேயே இருந்துகொண்டு இப்படியே போது போக்கலாமன்றோ என்றாருளிச்செய்ய அதற்கு உத்தரமாகப் பின்னடிகளில் கூறுகின்றார் – இவ்விபூதியில் கிடைக்கிற அநுபவம் நிலைத்திருக்கமாட்டாதே, ஆற்றங்கரைவாழ் மரம்போல் அஞ்சவேண்டிய விபூதியாயிற்றே இது, ஆகையால், முடிவாகப்போய்ச் சேரவேண்டுமிடமான பரமபதிற் போய்ச்சேர்ந்து அங்கேயிருந்துகொண்டு “பல்லாண்டும் பரமாத்மனைச் சூழ்ந்திருந்தேத்துவர் பல்லாண்டே“ என்று சொல்லப்படுகிற மங்களாசாஸநத்தைச் செய்துகொண்டு வாழும்வகையொன்றை உரியதென்று துணிந்திருக்கின்றேன் என்றாராயிற்று.

புகலிடம் – நாம்போய்ப் புகவேண்டுமிடம் என்று காரணத்தினாலாவது அவதாரஸமாப்தியான பின்பு எம்பெருமான் போய்ப்புகுமிடம் என்ற காரணத்தினாலாவது பரமபதத்தைச் சொல்லுகிறது.

 

English Translation

With a heart of love I worship your form, with my hands I stew fresh flowers at your feet, With my fond words I praise your other-wordly form, that I may continue this service there too.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top