(2213)

(2213)

மகிழ்ந்தது சிந்தை திருமாலே, மற்றும்

மகிழ்ந்ததுன் பாதமே போற்றி, – மகிழ்ந்த

தழலாழி சங்க மவைபாடி யாடும்,

தொழிலாகம் சூழ்ந்து துணிந்து.

 

பதவுரை

திருமாலே!

லக்ஷ்மீபதியே!

சிந்தை

என் நெஞ்சமானது

மகிழ்ந்தது

(உன்னைச் சிந்தித்து அதனாலே) ஆநந்த முற்றது;

மற்றும்

நெஞ்சுக்கு அடுத்ததான வாக்கும்

உன் பாதமே போற்றி

உன் திருவடிகளையே துதித்து

மகிழ்ந்தது

ஆநந்திக்கப்பெற்றது;

ஆகம்

என்னுடைய தேஹமானது

அழல்

எதிரிகளின் மீது நெருப்பை உமிழ்கின்ற

ஆழி

திருவாழியையும்

சங்கம்

ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தையும்

அவை

மற்றுமுள்ள திவ்யா யுதங்களையும்

பாடி ஆடும்

கொண்டாடிப்பாடிய ஆடுகையாகிற

தொழில்

வியாபாரத்திலே

சூழ்ந்து

பொருந்தி

துணிந்து

இதுவே நமக்குக் காரியமென்று துணிவு கொண்டு

மகிழ்ந்தது

களிக்கப்பெற்றது.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய ‘மனமொழிமெய்கள் மூன்றும் பகவத் விஷயத்திலேயே ஊன்றினபடியைப் பேசுகிறார்’.  திருமாலே! சிந்தை மகிழ்ந்தது = நாட்டாருடைய மனம் விஷயாந்தரங்களிலே ஊன்றி அதனால் ஆநந்தமடையும்; என்னுடைய சிந்தை அப்படியன்றியே அவற்றைக் காறியுமிழ்ந்து, நீயும் பிராட்டியுமாகச் சேர்ந்திருக்கும் சேர்த்தியைச் சிந்தித்த மாத்திரத்தில் மகிழ்ச்சியடையா நின்றது.

மற்றும் உன் பாதமே போற்றி மகிழ்ந்தது = மனம் நினைத்ததை வாய் சொல்லக்கடவ தாகையாலே மனத்துக்கு அடுத்ததான வாக்கை ‘மற்றும்’ என்கிறது.  நாட்டாருடைய வாக்கு விஷயாந்தரங்களை வருணித்து அதனாலே களிப்புறும்; என்னுடைய வாக்கு அப்படியன்றியே உனது திருவடிகட்கு வாழ்த்துக்கூறி மகிழ்வுறுகின்றது. இனி, பின்னடிகளால் சரீரத்தின் தொழிலுறுதியைக் கூறுகின்றார்.  திருவாழி திருச்சங்கு முதலிய திவ்யாயுதங்களோடே நீ சேர்ந்து விளங்குகின்ற அழகை வருணித்து வாய் பாட, அப்பாடலுக்குத் தகுதியாக ஆடுவதையே என்னுடைய சரீரம் தொழிலாகக் கொண்டுள்ளது என்றாராயிற்று.

 

English Translation

My heart rejoice in you.  O Tirumal! My tongue rejoices praising your feet alone. Singing “Conch”, and “Discus”, dancing around you, my body too rejoices madly.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top