(2193)

(2193)

அவரிவரென் றில்லை அரவணையான் பாதம்,

எவர்வணங்கி யேத்தாதா ரெண்ணில், பலரும்

செழுங்கதிரோ னெண்மலரோன் கண்ணுதலோன் அன்றே

தொழுந்தகையார் நாளும் தொடர்ந்து.

 

பதவுரை

எண்ணில்

(எம்பெருமானை ஆச்ரயித்து ஸ்வரூபஸித்தி பெறுகிறவர்கள் ஆரார்?’ என்று) ஆராயுமளவில்

அவர் இவர் என்று இல்லை

இன்னார்தாம் ஆச்ரயிப்பவர்கள், இன்னார் ஆச்ரயிக்காதவர்களென்ற ஒருவாசியில்லை;

அரவு அணையான் பாதம்

சேஷசாயியான அப்பெருமானுடைய திருவடிகளை

வணங்கி

தொழுது

ஏத்தாதார்

துதியாதவர்கள்

எவர்

யாவர்? (ஒருவருமிலர்)

பவரும் செழுகதிரோன்

பரவின அழகிய ஆயிரங் கிரணங்களையுடையவனானஸூரியனும்

ஒள் மலரோன்

அழகிய (திருநாபிக் கமல) மலரை இருப்பிடமாகவுடைய பிரமனும்

கண் நுதலோன்

நெற்றிக்கண்ணனான ருத்ரனும்

(ஆகிய, நாட்டிலுள்ளவர்களால் ஆச்ரயிக்கப்படுகிறவர்களென்று பிரசித்தரான இவர்கள்)

நாளும்

நாள்தோறும்

தொடர்ந்து தொழும் தகையார் அன்றே

அப்பெருமானெழுந்தருளியிருக்கின்ற இடத்தைத்தேடி ஆச்ரயிக்கும் ஸ்வபாவமுள்ளவர்களன்றோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில், தேவதாந்தரபஜம் பண்ணுமவர்கள் அநர்த்தப்பட்டுப் போவதை யருளிச் செய்தார்; ‘ஆனால் அந்த தேவதைகளை ஆச்ரயிக்கலாகாதோ? இந்த்ரசந்த்ரருத்ராதிகளும் மேம்பட்ட தேவதைகளாகத்தானே சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டிருக்கின்றனர்’ என்று நினைப்பார்க்கு உத்தரமாக இப்பாட்டருளிச் செய்கிறார். எம்பெருமானொருவனையே தொழுது உஜ்ஜீவிப்பதில் நம்மோடு அந்த தேவதாந்தரங்களோடு ஒரு வாசியில்லையான பின்பு தேவாதிதேவனான ஸ்ரீமந் நாராயணனைத் தொழுவதே அனைவர்க்கும் கடமையாமென்பது இதனாலுணர்த்தப்பட்டதாம்.

கீழ்ப்பாட்டில் “நெடுமாலே! நின்னடியையாரோதவல்லார்?” என்றுசொல்லி வைத்து இப்பாட்டில்  “அரவணையான் பாதம் எவர் வணங்கி யேத்தாதார்?” என்றது முரண்படுமன்றோவென்று சங்கிக்க வேண்டா; எம்பெருமான் திருவடியைத் தொழுது துதித்தலைக் கடமையாகவுடையராகாதவர்கள் யாவர்?  என்பதே இப்பாட்டின் நோக்கமாகும்.  ஆகவே, எல்லாரும் எம்பெருமானைத் தொழுதேத்தக் கடமைப்பட்டவர்களென்று ஸ்வரூபயோக்யதையை உணர்த்துமிப்பாசுரமும் இந்த ஸ்வரூபத்தைப் பரிபாலனம் பண்ணுவாரில்லையே யென்றுரைத்த கீழ்ப்பாசுரமும் முரண்படா.  இப்பாட்டின் பின்னடிகளில், ஸூரியன் பிரமன் சிவன் முதலானவர்களும் நாடோறும் தொடர்ந்து தொழுவதாகச் சொல்லியிருந்தாலும், இவ்வுலகத்தவர்கள் பெரும்பாலோர் தொழாது கெட்டுப்போகின்றனரேயென்னும் வருத்தம் ஆழ்வார்க்குப் பெரிதுமுண்டு.

 

English Translation

Way between, the celestials stand and worship your feet, and enjoy the fruits of heaven.  O Lord eternal, with the hue of the ocean! who among them can praise your feet fully?  Not one.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top