(2144)

(2144)

தோளவனை யல்லால் தொழா, என் செவியிரண்டும்,

கேளவன தின்மொழியே கேட்டிருக்கும், – நாநாளும்

கோணா கணையான் கூரைகழலே கூறுவதே,

நாணாமை நள்ளேன் நயம்.

 

பதவுரை

தோள்

(எனது) கைகளானவை

அவனை அல்லால் தொழா

(வேறு சிலரைத் தொழு என்று நான் சொன்னாலும்) அப்பெருமானையல்லது வேறு எவரையும் வணங்கமாட்டா;

என்செவி இரண்டும்

எனது காதுகளிரண்டும்

கேள் அவனது

ஸகலவித பந்துவுமாகிய அப்பெருமான் விஷயமான

இன்மொழியே

இனிய பேச்சுக்களையே

கேட்டு இருக்கும்

கேட்டுக்கொண்டு (அதனாலே) ஸத்தை பெற்றிருக்கும்;

என் நா

என்னுடைய நாவானது

நாளும்

நாள்தோறும்

கோள் நாக அணையான்

மிடுக்கையுடையனான திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய அப்பெருமானது

குரை கழலே

ஒலிக்கின்ற வீரக்கழலையணிந்த திருவடிகளையே

கூறுவது

சொல்லா நிற்கிறது

(இப்படியான பின்பு)

நயம்

சப்தாதி விஷயங்களை

நாணாமை நள்ளேன்

வெட்கப்படாமல் விரும்பு வாரைப்போலே நான் விரும்பமாட்டேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- தம்முடைய எல்லா இந்திரியங்களும் எம்பெருமான் பக்கலிலேயே ஊன்றபெற்ற படியை அருளிச்செய்கிறார். எம்பெருமானைத் தவிர்த்து வேறொருவரைத் தொழும்படி நான் சொன்னாலும் என் கைகள் தொழமாட்டோமென்கின்றன; இதர சப்தங்களைக் கேட்போமென்று நான் பாரித்தாலும் எனது காதுகளானவை பகவத் கதைகளைத் தவிர்த்து வேறு எதையும் ஏற்றுக்கொள்ள மாட்டோமென்கின்றன! நாவினால் விஷயாந்தரங்களைப் பேசுவோமென்று நாம் பார்த்தாலும் பகவத் பாதாரப்விந்தத்தையன்றி மற்றும் எதையும் னச நா எழுகின்றதில்லை; இப்படி எனது இந்திரியங்களெல்லாம் ஒரே உறுதியாயிருக்கவே, நானும் நாணங்கொண்டு இதர விஷயங்களைக் காறியுமிழ்ந்தேன் என்றாராயிற்று.

இரண்டாமடியில், கேள்- உறவு; “ சேலேய் கண்ணியரும் பெருஞ் செலவமும் நன் மக்களும் மேலாத் தாய் தந்தையுமவரே யினியாவாரே” என்கிறபடியே ஸகலவித பந்துவுமான எம்பெருமானுடைய என்றபடி இன்மொழி-கீர்த்தி நாகஅணை,  ‘நாகவணை’ என வரவேண்டுவது நாகணையெனவந்தது தொகுத்தல் விகாரம். குரைகழல்—வினைத்தொகையன் மொழி என்னலாம்: நாணாமை – எதிர்மறை வினையெச்சம். நயம்  – நயக்கப்படுவது  நயம்; ஆசைப்படத்தக்க விஷயாந்தரங்கள். “நயந்தரு பேரின்பமெல்லாம்” என்ற இராமாநுச நூற்றந்தாதித் தனியன் பிரயோகமுங் காண்க.

 

English Translation

The serpent-reclining Lord’s feet alone are worthy of my tongue’s praise. My hands will worthy of my tongue’s praise.  My hands will worship none else, my two ears yearn to hear his sweet songs alone.  No more shall shamelessly seek a life of pleasure.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top