(2141)

(2141)

சரணா மறைபயந்த தாமரையா னோடு,

மரணாய மன்னுயிர்கட் கெல்லாம், – அரணாய

பேராழி கொண்ட பிரானன்றி மற்றறியாது,

ஓராழி சூழ்ந்த வுலகு.

 

பதவுரை

சரண் ஆம் மறை

(எல்லார்க்கும்) ஹிதத்தை உரைக்குமதான வேதத்தை

பயந்த

(எம்பெருமானிடத்தில் தானடைந்து நாட்டிலுள்ளவர்கட்காக) வெளிப்படுத்தின

தாமரையானோடு

பிரமனோடுகூட

மரண் ஆய

மரணமடையுந் தன்மையுடைய

மன் உயிர்கட்கு எல்லாம்

நித்யமான ஸ்வரூபத்தையுடைய ஆத்மாக்களெல்லாவற்றுக்கும்

அரண் ஆய

ரக்ஷகமான விதங்களை

பேர் ஆழி கொண்டபிராண் அன்றி

பெரிய திருவாழியாழ்வானைக் கையிற்கொண்ட எம்பெருமான் அறிவனேயல்லது

மற்று

அவனிலும் வேறான

ஓர் ஆழி சூழ்ந்த உலகு

கடல் சூழ்ந்த இவ்வுலகத்திலுள்ளார்.

அறியாது

அறிமாட்டார்கள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- உலகத்தில் பொதுவாக ஒரு நியாயமுண்டு; எவன் பலனை அநுபவிக்கிறானோ அவன் அதற்கு உரிய உபாயத்தை அநுஷ்டிக்க வேணுமென்று. அந்த நியாயத்தைக் கொண்டு பார்க்கும்போது, எம்பெருமானைப் பெறுதலாகிற பயனை அநுபவிப்பவன் சேதநனாயிருக்க அதற்குரிய உபாயமும் இவனிடத்திலன்றோ இருக்க வேண்டும்; ‘எம்பெருமானே உபாயம்’ என்று, முறையிடுவது எங்ஙனே பொருந்தும்? என்று ஒருசங்கை தோன்ற, அஜ்ஞனாய் அசக்தனான இவனால் செய்யக் கூடியதொன்று மில்லாமையினால், ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தனான அவனே உபாயமாயிருக்க வேண்டியது  ஆவச்யகமாயிற்றென்கிறார். பலனை அநுபவிப்பவனும் எம்பெருமானே, அதற்கு உபமா நுஷ்டாநம் செய்பவனும் எம்பெருமானே என்கிற ஸத்ஸம் ப்ரதாய ஸித்தாந்தம் இங்கு ஸ்மரிக்கத்தக்கது. கைதவறிபோன பொருளைத் தேடிபிடித்து அநுபவிப்பதும் அதனால் ஆநந்தமடைவதும் ஸொத்தையுடைய ஸ்வாமியின் காரியமேயொழிய ஸொத்தின் காரியமல்லவே; இதுபோல அப்பரமபுருஷனுடைய ஸொத்தாகிய நாம் அவனை விட்டுத் தப்பித் தவறியிருக்கிறோமாயின், நம்மைத் தேடிப்பிடித்து ஆட்கொள்ளப் பெருதலும் பெற்று மகிழ்தலும் அவனுக்கே உரியனவாதலால் பலனை அநுபவிக்குமவனான தானே உபாயாநுஷ்டாநம் செய்கிறானென்க. ஸ்ரீபாஷ்யத்தில் முடிவான ஸூத்திரத்தின் பாஷ்யத்தில் “பரமபுருஷ: ஜ்ஞாநிநம் லப்த்வா” என்ற ஸ்வாரஸ்யமுணர்க.

இப்பாட்டில் சொல்லுகிற அர்த்தம் வேதங்களில் ஸித்தமானது என்பதைத் தெரிவிக்கவே “சரணாமறைபயந்த” என்ற விசேஷணம் தாமரையானுக்கு இடப்பட்டது.

அரணாய’ என்பதை பேராழிகொண்ட பிரானுக்கு விசேஷணமாகப் பலர் மயங்கி மொழிவர்; அது விசேஷணமன்று; இரண்டாம் வேற்றுமைச்சொல்: ‘அரணானவற்றை’ எனப் பொருள் படுதலால் பயனிலை.   பிரமன்முதல் எறும்பு ஈறாகவுள்ள ஸகல ஜந்துக்களுக்கும் உபாயமானவற்றை எம்பெருமான் அறிவனேயல்லது அற்பஞானிகளான உலகத்தவர்கள் அறியமாட்டார்கள் என்றவாறு.

ஆழி சூழ்ந்த வுலகமானது மன்னுயிர்க்கெல்லாம் அரணாயிருக்கிற பேராழிகொண்ட பிரானையன்றி மற்றதொன்றையும் அறியாது – என்றும் பொருள் சொல்லலாமே என்று முற்காலத்தில் ஒருவர் சொன்னாராம்; உலகமானது எம்பெருமானை மறந்து மற்றவற்றையே அறிந்திருப்பதால் ‘உலகானது பிரானையன்றி மற்றறியாது’ என்கிற விப்பொருள் இணங்காது என்று கொண்டு நஞ்சீயர், “உலகமென்பது உயர்ந்தோர்மாட்டே” என்றிருப்பதால் இவ்விடத்தில் உலகு என்பதற்கு ‘சிறந்த மாஞானிகள்‘ என்று பொருள்கொண்டால், ‘மஹான்கள் பேராழிகொண்ட பிரானையன்றி மாற்றறியார்கள்’ என்னும் பொருள் இணங்கி விடலாம் என்று அபிப்ராயம் கொண்டாராம்; இதை பட்டர் கேட்டருளி, “ இவ்விடத்தில் ‘ஓராழி சூழ்ந்தவுலகு’ என்றிருப்பதை நோக்கவேணும்; ‘ஆழிசூழ்ந்த’ என்கிற விசேஷணம் இல்லாதிருந்தால் நீர் சொல்லும் பொருள் ஏற்கும்; ’கடலால் சூழப்பட்ட மஹான்கள்’ என்று பொருள் சொல்லப்போகாமையாலே, ‘கடல் சூழ்ந்த இவ்வுலகமானது தனக்கு அரணானவற்றை அறியமாட்டாது, பேராழிகொண்ட பிரானே அறிவான்’ என்றே பொருள் கொள்ள வேணும்” என்று உபபாதித்து உரைத்தருளினராம். இங்ஙனே நிர்வஹித்து பட்டரருளிச்செய்தபோது நஞ்சீயரும் நம்பிள்ளையும் கேட்டிருந்தார்கள்; ஆனாலும் இதனை ஒருகால் நஞ்சீயர் மறந்திட, நம்பிள்ளை ஞாபகப்படுத்தினர் என்றும் பெரிய வாச்சான்பிள்ளை யருளிச்செய்தனர்.

இப்பாட்டின் பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியான அச்சுப்பிரதிகளில் சில பதங்களும் வாக்கியங்களும் விடுபட்டிருப்பதை ஒலை ஸ்ரீகோசங்களைக்கொண்டு பரிஷ்கரித்துக்கொள்க.

 

English Translation

For all from the permanently residing Vedic lord on the lotus navel down to the last ephemeral bodily scout, the Lord of discus is the only refuge. Other than him, there is none that the ocean-girdled Earth knows of.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top