(2137)

(2137)

பேரே வரப்பி தற்றல் அல்லாலெம் பெம்மானை,

ஆரே அறிவார்? அதுநிற்க, – நேரே

கடிக்கமலத் துள்ளிருந்தும் காண்கிலான், கண்ணன்

அடிக்கமலந் தன்னை அயன்.

 

பதவுரை

[நாம் வாயினால் ஏதெனுமொன்றைச் சொன்னாலும், அது]

பேரே

எம்பெம்மானது திருநாமமாகவே

வர

வரும்படியாக

பிதற்றல் அல்லால்

பிதற்றுவதைத்தவிர

எம்பெம்மானை

[அந்த] எம்பெருமானை

ஆரே

ஆர்தான்

அறிவார்

(உள்ளபடி) அறிய வல்லவர்கள்?

அது நிற்க

அந்த விஷயம் இருக்கட்டும்;

அயன்

பிரமனானவன் .

கடி

பரிமளம் மிகுந்த

கமலத்துள்

(அவ்வெம் பெருமானது, நாபிகமலத்திலே (பிறந்து)

நேரே இருந்தும்

(அங்கே) நிரந்தர வாஸம் பண்ணிக்கொண்டிருந்தும்

கண்ணன் அடி கமலம் தன்னை

அந்த ஸர்வேச்வரனுடைய திருவடிகளை

காண்கிலான்

ஸேவிக்கப்பெற்றானில்லை.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய பிரபாவம் ஆர்க்கும் அளவிட்டறிய முடியாதது; கடற்கரையில் குடிசை கட்டிக்கொண்டிருப்பவர்க்கும் அந்தக் கடலினுடைய ஆழம் அறிய முடியாமற் போவதுபோலவே அவனுடைய திருநாபிக்கமலத்தில் தோன்றின நான்முகக்கடவுள் எப்பொழுதும் அவ்விடத்தே வாஸஞ்செய்து கொண்டிருந்தும் அவனுக்கும் அப்பெருமானுடைய பெருமை அளவிட்டறியக் கூடாததாயிராநின்ற தன்றோ; ஆகையினால் ‘எம்பெருமான் உணர்வதற்கு முடியாதவன் ’என்று நாம் உணர்ந்து அவனது திருநாமங்களை வாயில்  வந்தபடியெல்லாஞ் சொல்லிக் கூப்பிடுவது செய்யலாமத்தனையொழிய, அவனது மஹிமையை உள்ளபடியறிந்து எவராலும் சொல்லப்போகாது என்றவாறு. சாஸ்திரங்களில் பலபேர்களைக் குறித்து ‘ப்ரஹ்மஜ்ஞாநி’ என்று சொல்லியிருப்பதெல்லாம்- பரப்ரஹ்மத்தை உள்ளபடி  அளவிட்டறிந்தமையைச் சொன்னதன்று; ‘எம்பெருமான் அளவிட முடியாதவன்’ என்ற இவ்வுண்மையை அறிந்தவர்களே ப்ரஹ்மவித்துக்களெனப்படுவார் என்றறிக.

கன்றுகுட்டியானது ஓரிடத்திலிருந்துகொண்டு தன் தாயைக்காணாமல் அம்மே! என்று கத்தினால் அக்கத்துதல் தன் செவிப்பட்ட மாத்திரத்தில் தாய்ப்பசு இரங்கிக் கன்றின் பக்கத்தில் வந்து நிற்பதுபோலவே, எம்பெருமானை உள்ளபடி அறியாவிட்டாலும் அவனது திருநாமத்தை வாய்வந்தபடி பிதற்றினால் அவன் வந்து அருள்புரிவான் என்ற கருத்து முதலடியில் உய்த்துணரத்தக்கது.

பெம்மான் – ‘பெருமான்’ என்பதன் மரூஉ. நிற்க- வியங்கோள்முற்று. இப்பாட்டில் “நேரே கடிக்கமலத்துள்ளிருந்தும் அயன் கண்ணனடிக் கமலந்தனைக் காண்கிலான்; (ஆதலால் ) எம்பெம்மானை ஆரேயறிவார்? என்று கைமுதிகநியாயம்படக் கூறியிருத்தலால் தொடர்நிலைச்செய்யுட் பொருட்பேறணியாம்.

 

English Translation

Nama-japa or repeating his names over and over again is the only way to know the Lord; who knows of another way?  Be that as it may, even Brahma, though seated on krishna’s lotus navel, cannot see the Lord’s lotus feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top