(2126)

(2126)

ஆமே யமரர்க் கறிய? அதுநிற்க,

நாமே யறிகிற்போம் நன்னெஞ்சே, – பூமேய

மாதவத்தோன் தாள்பணிந்த வாளரக்கன் நீண்முடியை,

பாதமத்தா லேண்ணினான் பண்பு.

 

பதவுரை

நல் நெஞ்சே

நல்ல மனமே!

பூ மேய மாதவத் தோன் தாள்பணிந்த

திருநாபிக் கமலத்திற்பொருந்திய மஹா தபஸ்வியான பிரமனுடைய பாதத்திலே வந்து ஆச்ரயித்த

வாள் அரக்கன்

கொடிய இராவணனுடைய

நீள் முடியை

நீண்ட பத்துத்தலைகளையும்

பாதம் அத்தால் எண்ணினான் பண்பு

அந்தத் திருவடிகளாலே கீறி எண்ணிக்காட்டின எம்பெருமானுடைய குணம்.

அமரர்க்கு அறிய ஆமே

பிரமன் முதலிய தேவர்கட்கு அறியக் கூடியதோ?

அது நிற்க

அவர்கள் அறிய வல்லரல்லர் என்பது கிடக்கட்டும்;

நாமே அறிகிற்போம்

(எம்பெருமானுடைய நீர்ஹேதுக க்ருபாகடாக்ஷத்திற்குப் பாத்திரமாகிய) நாம் அறியக் கடவோம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாட்டின் பின்னடிகளில் அநுஸந்திக்கப்பட்டிருக்கும் பகவத்கதை மூன்றாந்திருவந்தாதியில்- “ ஆய்ந்தவருமறையோன் நான்முகத்தோன் நன்குறங்கில், வாய்ந்த குழவியாய் வாளரக்கன்- ஏய்ந்த, முடிப்போது மூன்றேழென்றெண்ணினான், ஆர்ந்த அடிப்போது நங்கட்கரண். “என்ற எழுபத்தேழாம் பாட்டிலும், நான்முகன் திருவந்தாதியில் – “ கொண்டுகுடங்கால் மேல்வைத்த குழவியாய், தண்டவரக்கன் தலைதாளாற் பண்டெண்ணிப் – போங்குமரன்….. “என்ற நாற்பத்துநாலாம் பாட்டிலும் பேயாழ்வாராலும் திருமழிசைப்பிரானாலும் அநுஸந்திக்கப்பட்டுள்ளது. முன்பு இராவணன் தனது பத்துத்தலைகளை மறைத்துக்கொண்டு நான்முகனிடஞ் சென்று வரம் வேண்டிக்கொள்ளுமளவிலெம்பெருமான் ஒரு சிறு குழந்தை வடிவாய் அப்பிரமனுடைய மடியிலே உறங்குவான் போலே கிடந்து ‘இவன் பத்துத்தலைகளையுடைய இராவணன்; ஸ்வஸ்ரூபத்தை மறைத்துக்கொண்டு உன்னை வஞ்சித்து வரம் வேண்டிக் கொள்ள வந்திருக்கிறான்; இவனுக்கு நீ வரமளித்தால் பெருந்தீங்காக முடியும்’ என்று தெரிவிப்பவன்போன்று தன் திருவாயால் அவ்விராவணனுடைய பத்துத்தலைகளையும் எண்ணிக்காட்டினன் – என்பதாக இவ்வரலாறு விளங்குகின்றது. இதிஹாஸ புராணங்களில் உள்ளவிடம் தெரியவில்லை; பெரியாழ்வார் திருமொழியில் 1. “சீமாலிக னவனோடு தோழமைக்கொள்ளவும் வல்லாய், சாமாறவனை நீ யெண்ணிச் சக்கரத்தால் தலைகொண்டாய் “ என்றும் 2. ‘ எல்லியம் போதினி திருத்தலிருத்ததோரிடவகையில், மல்லிகைமாமாலை கொண்டங்கார்த்தது மோரடையாலம்” என்றும்  அருளிச்செய்த கதைகள் வ்யாஸர் வால்மீகி முதலிய முனிவர்களால் ஸாக்ஷாத்கரிக்கப்படாமல் ஆழ்வாரால் மாத்திரம் நிர்ஹேதுக கடாக்ஷமடியாக ஸாக்ஷாத்கரிக்கப்பட்டவை என்று நம்பூருவாசாரியர்கள் நிர்வஹித்திருப்பது போலவே இக்கதையும் ஆழ்வார்களால் மாத்திரம் ஸாக்ஷாத்கரிக்கப்பட்டதென்று பெரியோர் கூறுவர். இனி, இதற்கு இதிஹாச புராணங்களில் ஆகர முண்டேல் கண்டு கொள்க: விரிவும் வல்லார்வாய்க் கேட்டுணர்க.

பூமேய மாதவத்தோன் தாள் பணிந்த வாளரக்கன் நீண்முடியைப் பாதமத்தாலெண்ணினானான எம்பெருமானுடைய குணங்களைத் தேவர்களால் அறியமுடியாது; எம்பெருமானுடைய திருவருளாலே தெளியக் காணவல்ல நாமே அறியவல்லோம் – என்பது ஒருபொருள்; தேவர்களே அறியமாட்டாதபோது நாமோ அறியக்கடவோம் என்று நைச்சியமாகச் சொல்லிக் கொள்வதாக மற்றொரு பொருள்.

பாதமத்தால் – பாதத்தால் என்றபடி.

 

English Translation

The Lord is accessible to the gods, But more, he is accessible to us fool The Rakshasa king Ravana worshipped Brahma.  but our Lord counted the ten heads of the foe with his toes.  Let us count his glories.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top