(2120)

(2120)

இடந்தது பூமி எடுத்தது குன்றம்,

கடந்தது கஞ்சனைமுன் அஞ்ச, – கிடந்ததுவும்

நீரோத மாகடலே நின்றதுவும் வேங்கடமே,

பேரோத வண்ணர் பெரிது.

 

பதவுரை

பேர் ஓதம் வண்ணர்

பெரிய கடலின் நிறம் போன்ற நிறமுடைய பெருமான்

முன்

முற்காலத்தில்

இடந்தது

(மஹாவராஹமாகிக்)  கோட்டார்குத்தி யெடுத்தது

பூமி

பூமியாம்;

எடுத்தது

குடையாக வெடுத்துப் பிடித்தது

குன்றம்

கோவர்த்தனமலையாம்

அஞ்ச கடந்தது

அஞ்சி முடிந்துபோம்படி செய்தது

கஞ்சனை

கம்ஸனையாம்;

கிடந்ததுவும்

திருக்கண் வளர்ந்தருளினது

ஓதம் நீர் மாகடல்

பெருவெள்ளமுடைய திருப்பாற்கடலிலாம்

பெரிது நின்றதும்

பெருமையெல்லாம் தோற்றநின்றது

வேங்கடம்

திருமலையிலாம்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய பல செயல்களை அநுஸந்தித்து இனியராகிறார். முன்பு மஹாப்ரளயத்தில் அண்டபித்தியில் ஒட்டிக்கிடந்த பூமியை மஹாவராஹமாகி உத்தரித்தான்; இந்திரன் பசிக்கோபத்தால் ஏழுநாள் விடாமழை பெய்வித்தவன்று திருவாய்ப்பாடியைக் காத்தருள்வதற்காகக் கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்துப் பிடித்தான்; சாதுசனங்களை நலிந்துகொண்டிருந்த கம்சனைக் கொன்றொழித்தான்; அவதாரங்களுக்கு மூலகந்தமாகத் திருப்பாற்கடலிலே திருக்கண்வளர்ந்தருளாநின்றான்; வானோர்க்க்கும் மண்ணோர்க்கும் வைப்பாகத் திருவேங்கடமலையிலே தன்பெருமையெல்லாம் பொலிய நின்றருள்கின்றான் – என்று இப்பாட்டில் அநுஸந்திப்பதன் கருத்தாவது இப்படி ஓயாமல் பிறர் காரியமே போது போக்காயிருக்கின்ற எம்பெருமானுடைய நீர்மை வருணிக்க முடியாதது என்றதாம்.

 

English Translation

Venkatam is where the Lord stands; the deep ocean is where he reclines. The Earth is what he lifted. The mountain is what he held aloft. Kamsa is whom he leapt upon and killed.  Indeed my Lord’s glories are great.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top