(2110)

(2110)

இறையும் நிலனும் இருவிசும்பும் காற்றும்,

அறைபுனலும் செந்தீயு மாவான், – பிறைமருப்பின்

பைங்கண்மால் யானை படுதுயரம் காத்தளித்த,

செங்கண்மால் கண்டாய் தெளி.

 

பதவுரை

இறையும்

ஸ்ரீவைகுண்ட நாதனாயும்

நிலனும் இருவிசும்பும் காற்றும் அறை புனலும் செம்தீயும் ஆவான்

பூமியென்ன பரவிய ஆகாச மென்ன வாயுவென்ன அலை யெறிகிற  ஜலமென்ன சிவந்த நிறமுள்ள அக்நியென்ன ஆகிய பஞ்ச பூதங்களினாலாகிய லீலா விபூதியையுடையவனாயுமிருக்கிற எம்பெருமான்,

பிறை மருப்பின்

பிறைபோன்ற தந்தத்தையுடையதும்

பைங்கண்

பசுமைதங்கிய கண்களையுடையதுமான

மால் யானை

பெரியகஜேந்திரனை

படு துயரம்

(முதலையின் வாயிலே அகப்பட்டுப்) பட்ட துக்கத்தில் நின்றும்

காத்து அளித்த

ரக்ஷித்தருளின

செம் கண் மால் கண்டாய்

புண்டரீகாக்ஷனான பெருமான்காண்;

தெளி

[நெஞ்சே!] நீ இதனைத் தெரிந்துகொள்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நித்யவிபூதி யென்னப்படுகிற பரமபதத்திற்கும் லீலாவிபூதியென்னப்படுகிற ஸம்ஸாரமண்டலத்திற்கும் நாதனாய்க்கொண்டு உபயவிபூதி நாதனென்று பேர் பெற்றிருக்குமெம்பெருமான் தன்பெருமையை நினைத்து மேனாணித்திருப்பவனல்லன்; அடியவர்கள் துன்புறுங்காலத்து நேரில் ஓடிவந்து காத்தருளும்படியான வாத்ஸல்யகுண முடையவன்காண் என்று தம் திருவுள்ளத்துக்கு உபதேசிக்கிற முகத்தால் எம்பெருமானது மேன்மையையும் வெளியிடுகிறார்.

இறை என்று ஸ்வாமிக்குப் பெயர்; 1. “ வீற்றிருந்தேழுலகும் தனிகோல் செல்ல வீ வில்சீர், ஆற்றல் மிக்காளுமம்மான்” என்றபடி: பரமபதத்தில் ஸர்வஸ்வாமித்வம் தோன்றுமாறு எழுந்தருளியிருக்கிற ஸ்ரீவைகுண்ட நாதத்வம் இங்கே விவக்ஷிதம். ஆகவே, இறை யென்றது இங்கே நித்யவிபூதிநாதனைச் சொன்னபடி. நிலனும் என்று தொடங்கிச் செந்தீயுமாவான் என்ற வளவால் லீலாவிபூதி நாயகத்வம் சொல்லப்படுகிறது; பஞ்சபூதங்களினாலாகிய பதார்த்தங்கள் நிறைந்தவிடமே லீலாவிபூதியாதலால் பஞ்ச பூதங்களையிட்டு அருளிச்செய்தாரென்க.

“இறையும்“ என்ற உம்மைக்குச் சேர (இரண்டாமடியில்) “ஆவான்” என்ற விடத்திலும் உம்மை கூட்டிக்கொள்ளவேணும்; ஆவானும் என்க. ஆக இவ்வளவால் – உபய விபூதி நாதனாயிருக்கும் பெருமையையுடையவனா யிருந்தாலும் என்றதாயிற்று . இதற்குப் பிரதிகோடியான நீர்மையைப் பின்னடிகளில் அருளிச்செய்கிறார். முதலைவாய்க் கோட்பட்ட கஜேந்திராழ்வான் துயரை அரைகுலையத் தலைகுலைய ஓடிவந்து காத்தருளினது பிரசித்தம்.

[பிறைமருப்பின் பைங்கண்மால்யானை] யானைக்கு வெளுத்த தந்தமிருப்பதும் பசுமை தங்கிய கண்களிருப்பதும் அதிசயமான விஷயமன்றே; இதைச்சொல்லி வருணிப்பதற்குப் பிரயோஜன மென்னெனில்;- ஒரு குழந்தை கிணற்றில் விழுந்துபோக, அதனையெடுத்துக்கரையிலே போட்டவர்கள் ‘அந்தோ! இதொரு காலழகும் இதொரு கையழகும் இதொரு

முகவழகும் என்ன!’ என்று சொல்லிச் சொல்லி மாய்ந்து போவர்களன்றோ; அப்படியே எம்பெருமானும் யானையின் காலை முதலைவாயினின்றும் விடுவித்தபின் அதனுடைய தந்தத்தினழகிலும் கண்ணினழகிலும் ஆழ்ந்து கரைந்தமை தோற்ற அந்த பகவத் ஸமாதியாலே ஆழ்வார் யானையை வருணிக்கின்றாரென்க.

பசுமை + கண், பைங்கண். கண்டாய் – முன்னிலையசைச்சொல். இப்பாட்டில் நெஞ்சமே!’ என்கிற விளி வருவித்துக்கொள்ளவேண்டும்.

 

English Translation

The Lord who is manifest as the Earth, space, wind, water and fire is the adorable red-eyed senkanmal who gave refuge to the devotee-elephant in distress, Know it clearly.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top