(2105)

(2105)

விரலோடு வாய்தோய்ந்த வெண்ணெய்கண்டு, ஆய்ச்சி

உரலோ டுறப்பிணித்த ஞான்று – குரலோவா

தோங்கி நினைந்தயலார் காண இருந்திலையே?

ஓங்கோத வண்ணா. உரை.

 

பதவுரை

ஓங்கு ஓதம் வண்ணா

ஓங்கிக் கிளர்ந்த கடல் போன்ற வடிவையுடையவனே!

(நீ வெண்ணெய் திருடி உண்ணும்போது)

விரலோடு வாய் தோய்ந்த

உன் விரலிலும் வாயிலும் படிந்திருந்த

வெண்ணெய்

வெண்ணெயை

ஆய்ச்சி

யசோதையானவள்

கண்டு

பார்த்து

(உன்னைத் தண்டிக்கவேண்டி)

உரலோடு உற பிணித்த நான்று

உரலோடு சேர்த்துக் கட்டிவைத்தபோது

குரல் ஓவாது

நீ கத்துகிற கத்தல் நீங்காமல்

ஏங்கி

ஏங்கிக்கொண்டு

நினைந்து

(அப்போதும் வெண்ணெய் திருடுவதையே) சிந்தித்துக்கொண்டு

அயலார் காண

அயலாரெல்லாரும் வேடிக்கை பார்க்கும்படி

இருந்திலையே

இருந்தாயல்லவோ?

உரை

உண்மையாகச் சொல்லு.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘தாம்பால் ஆப்பூண்ட தழும்பு எனக்கு உண்டோ?’ என்ற எம்பெருமானை நோக்கி ஆழ்வார்  ‘அஃது ஒரு தழும்புதானா? உடம்பெல்லாம் தழும்பு மயமே காண்’ என்றார் கீழ்ப்பாட்டில் . சார்ங்கநாண் தோய்ந்த தழும்பும், சகடம் சாடின தழும்பும், இரணியன் மார்பிடந்த தழும்பும் வீரச்செயல்களை விளக்குவன வாதலால் அம்மூன்று தழும்புகளையும் எம்பெருமான் இசைந்துகொண்டு,* தாம்பாலாப் புண்ட தழும்பு மாத்திரம் பரிஹாஸா ஸ்பதமாயிருக்குமே யென்றெண்ணி அதனை இல்லை செய்யத் தொடங்கினான்; ‘ நான் வெண்ணெய் திருடினது மில்லை, ஆய்ச்சி யென்னைப் பிடித்ததுமில்லை; உரலோடு சேர்த்து என்னைக் கட்டினதுமில்லை; தழும்பு உண்டானது மில்லை’ என்று எல்லாவற்றையும் மறைத்துப் பேசினான். அதற்குமேல் ஆழ்வார் என்ன செய்யக்கூடும்? பிரானே! முழுப்பூசினியைச் சோற்றில் மறைக்க நினைப்பாரைப்போலே செய்த காரியங்களையெல்லாம் இப்படி மறைத்துப் பொய்சொல்லுவது தகுதியோ? “ஸத்யம் வத” என்று மெய்யே சொல்லுமாறு பிறர்க்கு விதிக்கிற நீ பொய் சொல்லலாகுமோ? வெண்ணெயை விரல்களால் அள்ளியெடுத்து நீ வாயிலே யிட்டுக்கொண்ட போது யசோதை கண்டு உன்னைப் பிடித்துக் கொள்ளவில்லையா? வெறுமனே கயிற்றினால் உன்னைக் கட்டிவைத்தால் அறுத்துக்கொண்டு போய்விடுவாய் என்று பெரியவொரு உரலோடே இணைத்துப் பிணைத்துவைக்கவில்லையா? அதனால் நீ நெடும்போது ஏங்கி யேங்கி அழவில்லையா? அந்த நிலைமையை எத்தனையோ பேர்கள் வந்து காணவில்லையா? இவை யொன்றும் நடந்ததேயில்லை யென்று உன்னால் மறைக்கமுடியுமா? நீயேசொல் நாயனே!’ என்கிறார்.

அவாப்த ஸமஸ்தகாமனாய் ஸர்வஜ்ஞனாய் ஸர்வசக்தியுக்தனான நீ ஒரு குறையுள்ளவன் போலவும், அந்தக் குறையை நீக்கிக் கொள்ளக் களவு செய்தவன் போலவும், அதற்காகக் கயிற்றினால் கட்டித் தண்டிக்கப்பட்டவன் போலவும், அந்தக் கட்டில் நின்று தப்புவதற்கு சக்தியற்றவன்போலவும் கட்டை யவிழ்க்கும் உபாயத்தை உணராதவன் போலவும், இருந்தாயே! இது என்ன ஆச்சரியம்! என்று ஈடுபட்டவாறு.

ஓங்கோதவண்ணா!” என்ற விளியின் ஆழ்பொருளைப் பெரியவாச்சான்பிள்ளை அருளிச்செய்கிறார்காண்மின்- “இவனைக் கட்டிவைத்தது ஒருகடலைத் தேக்கிவைத்தாற்போலே காணும்” என்று.

 

English Translation

When your fingers and lips were smeared with butter, -O Lord dark as the deep ocean!, -the cowherd dame Yasoda bound you to a mortar.  Did you not weep and cry, while outsiders stood and watched? Speak.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top