(2079)

(2079)

தென்னிலங்கை யரண்சிதறி அவுணன் மாளச் சென்றுலக மூன்றினையும் திரிந்தோர் தேரால்,

மன்னிலங்கு பாரதத்தை மாள வூர்ந்த வரையுருவின் மாகளிற்றைத் தோழீ, என்றன்

பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு போகாமை வல்லேனாய்ப் புலவி யெய்தி,

என்னிலங்க மெல்லாம்வந் தின்ப மெய்த எப்பொழுதும் நினைந்துருகி யிருப்பன் நானே.

 

பதவுரை

தோழீ

வாராய் தோழியே!,

தென் இலங்கை

தென்னிலங்கையிலுள்ள

அரண்

கோட்டைகள்

சிதறி

அழிந்து

அவுணன் மாள

இராவணனும் முடியும்படியாக

சென்று

(ஆங்கு) எழுந்தருளி (வெற்றி பெற்றவரும்)

உலகம் மூன்றி னையும் திரிந்து

(த்ரி விக்கிரமாவதார காலத்தில்) மூவுலகங்களையும் வியாபித்தவரும்

மன் இலங்கு

அரசர்கள் விளங்காநின்ற

பாரதத்தை மாள

பாரதயுத்தம் முடியும்படியாக

ஓர் தேரால் ஊர்ந்த

ஒரு தேரைக் கொண்டு நடத்தின

வரை உருவின் மா களிற்றை

மலைபோன்ற உருவங்கொண்ட பெரிய யானை போன்ற பெருமானை,

என் தன்

என்னுடைய

பொன் இலங்கு முலை குவட்டில்

பசலைநிறம் படர்ந்த முலைகளாகிற கம்பத்திலே

பூட்டிக்கொண்டு

அணைத்துக்கொண்டு

போகாமை வல் லேன் ஆய்

அப்பால் போகவொண்ணாதபடி தடுத்து வளைக்க வல்லவளாகி

புலலி எய்தி

அவரைப் பிரிந்துபட்ட கருத்தமெல்லாம் அவரெதிரே பட்டு

என்னில் அங்கம் எல்லாம் வந்து இன்பம் எய்த

என்னுடைய எல்லா அவயவங்களும் என்னிடத்தே வந்து சேர்ந்து ஆனந்த மடையும் படியாக

எப்பொழுதும்

எல்லாக்காலத்திலும்

நான்

நான்

நினைந்து

அவரையே சிந்தித்து

உருகி இருப்பேன்

முடிந்து பிழைப்பேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருவாய்மொழியில் நம்மாழ்வார் * பூங்கழிவாயென்னுந் திருப்பதிகத்தில் எம்பெருமான் பக்கல் தூதுவிட்டு, அநந்தரம் அவன் வந்து முகங்காட்டக் காணாமையாலே பிரணயரோஷம் தலையெடுத்து ஊடல் செய்தாப்போலே இப்பரகால நாயகியும் கீழே தூதுவி்ட்டவள் இதிலே ஊடுகின்றாள். ‘இப்போது நம்முடைய ஆற்றாமை கனத் திருக்கையாலும் தூது அனுப்பியிருக்கிறோமாகையாலும் சில சுபநிமித்தங்கள் தோன்றி யிருக்கிறபடியாலும் கடுவே அவன் வந்து நிற்கப்போகிறாள்; அப்படி அவன் வந்தால் முகங்கொடுத்து வார்த்தை சொல்லுவோமல்லோம்; ஏனென்றால், அவனுடைய ஸம்ச்லேஷம் உடனே விச்லேஷத்தை விளைவித்தல்லது நிற்கமாட்டாமையாலே இன்னமொரு விச்லே ஷத்துக்கு இலக்காயிருந்து மீண்டுமீண்டும் வருத்தப்படுவதிலுங்காட்டில் அவனுக்கு முகங்கொடாதே அவன்கண்வட்டத்திலே முடிந்து பிழைப்பது நன்று‘ என்று நிச்சயித்துக் கொண்டாள். தம்மை முடித்துக்கொள்ள நினைப்பவர்கள் வெற்றிலை தின்னுதல் பூச்சூடு தல் சரந்தணிதல் சிரித்தல் முதலியன செய்யுமாபோலே இவளும் முடிவுக்குப் பூர்வாங்க மாகத் தெளிவுபெற்றிருந்தாள். உள்ளே யுருகி நையாநிற்கச் செய்தேயும் மேலுக்குத் தெளிந்திருந்தாள்; அதைக் கண்ட தோழியானவன் ‘இந்த நிலைமையிலே இவள் தெளிந்திருக்கைக்குக் காரணமில்லையே‘ எனச் சிந்தித்து அவளையே வாய்விட்டுக் கேட்டுத் தெரிந்து கொள்வோம் என்றெண்ணி ‘நங்காய் இப்போது உன்னெஞ்சிலே கிடக்கிறதென்‘ என்று கேட்க; ‘அப்பெரியவர் வந்தால் பண்டுபோலே முகங்கொடுக்கக் கடவேனல்லன்; அவர் கண்ணெதிரே உயிரைவிட்டு முடிந்துபோவதாகத் துணிந்திருக்கின்றேன்‘ என்று தலைவி சொல்ல; அதுகேட்ட தோழியானவள் ‘கெடுவாய், மலையோடேமல் பொருத மல்லருண்டோ? உபயவிபூதிநாதராய் ஸர்வசக்தராயிருக்கிறவரோடே அபலையான நீ எதிரிடுவதென்று ஒரு காரியமுண்டோ? “நல்லவென்தோழி! நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர்சிறுமானி டவர் நாம் செய்வதென்?“ என்று சொன்னவர்களைக் கேட்டதில்லையோ? ப்ரணயிகளிடத்துச் செய்யத்தக்கதை ப்ரபுக்களிடத்துச் செய்யலாகுமோ?” என்று சொல்ல: அவருடைய ப்ரபுத்வம் என்கையிலே படுகிறபடி பாராய்‘ என்று தலைவி சொல்ல; ‘இவளுடைய உறுதியைப் பார்த்தால் முடிந்தேதீருவள் போலேயிருக்கிறது; ப்ரணயரோஷத்தோடேநின்று, உயிர்துரக்குமளவு ஆகாதபடி இவளை நோக்கவேணும்‘ என்று பார்த்த தோழியானவள். ‘நங்காய்! அவர்க்குள்ள ஆச்ரிதபக்ஷபாதம் உனக்குத் தெரியாதுபோலும்; ஒரு பிராட்டிக் காகத் தென்னிலங்கை செற்றவர்காண்; இந்திரனுக்காக மாவலியை வலிதொலைத்து மூவுலகளந்தவர்காண்; பாண்டவர்கட்குப் பக்ஷபாதியாயிருந்து தேரை நடத்தினவர்காண்‘ என்று சில சேஷ்டிதங்களை யெடுத்துக் கூற, ‘ஆமாம் தோழீ!, எல்லாம் நானுமறிவேன்; அவை யெல்லாம் வஞ்சகச் செயலத்தனையே காண்; நான் முடியாமலிருக்க மாட்டேன்‘ என்று தன் உறுதியை வெளியிடுகிறாளிதில். பரகாலநாயகி.

தென்னிலங்கை யாண் சிதறி = மேலே “வரையுருவின் மாகளிற்றை“ என்கையாலே மதயானையின் வியாபாரமாகச் சில சேஷ்டிதங்களைப் பேசுகிறாள். (தோழி சொன்ன சேஷ்டிதங்களை அநுபவித்துப் பேசுகிறபடி.) ஒரு மதயானை வழிபோகா நின்றால் எதிரே கண்ட வற்றையெல்லாம் கையாலும் காலாலும் அழித்துக்கொண்டு போமோபோலே கர தூஷ்ணாதி களைக் கொன்றும் வாலியை வதைத்தும் கடற்கரையிலே சென்று கடலை அணை செய்து இலங்கையை அமைதிப்படுத்தின படியைக் கண்டபோதே இராவணன் செத்துப் போனவ னாக ஆயினான் என்பது தோன்றப் பாசுரம் தொடுத்திருக்குமழகு காண்மின். (தென்னி லங்கை யாண் சிதறி அவுணன்மாளச் சென்று) பெருமாள் போன போக்கிலேயே இராவணன் முடிந்தானென்கை. ஒருபிராட்டிக்காக அவர் பண்ணின யானைத்தொழில் இது வன்றோ என்று தோழிசொல்ல ‘ஆமாம், அவர் பரம ப்ரணயிதான்; அபலைகளாயிருப்பாரை அகப்படுத்திக் கொள்வதற்காகச் செய்த செயலாகையாலே பகட்டுக்காண்‘ என்று கழித்துப்பேசுகிறபடி இது.

உலகமூன்றினையுந்திரிந்து = உலகளந்தபடியை நினைக்கிறது இங்கு. ஒரு மதயானை யதேஷ்டமாகத் திரியுமாபோலே எல்லார் தலைகளிலும் திருவடியை யிடடத் திரிந்தவாறு. ‘அந்யசேஷத்வத்தாலும் ஸ்வாதந்த்ரிய ப்ரதிபத்தியாலும் விமுகராயிருப்பவர்களின் தலை களிலும் திருவடியைவைத்து உய்வு பெறுத்து மவர்காண்‘ என்று தோழிசொல்ல; ஆமாம், அவர் விமுகர்தலைகளிலே திருவடியை வைப்பவரேயன்றி “அடிச்சியோந் தலைமிசை நீயணி யாய் ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்“ என்று பல்பன்னிரண்டும் காட்டி இரப்பவர் கட்கு முகங்கொடுக்கும் தயாளு அல்லர்காண் என்று சொல்லிக்காட்டுகிறபடி.

ஓர் தேரால் மன்னிலங்கு பாரதத்தை மாளவூர்ந்த = எதிரிகளான் துரியோதனாதியர் கிருஷ்ணன் ஆயுதமெடுக்கவேண்டா‘ என்றார்களேயல்லது ‘ஸாரதியாய் நிற்கவேண்டா‘ என்றும் சொல்லவில்லையே; ஆகையாலே ஸாரதியாய் நின்று ஒரு தேராலே ப்ரதிபக்ஷங் களை அழியச் செய்தானாயிற்று. “பந்தார்விரலாள் பாஞ்சாலி கூந்தல் முடிக்கப் பாரதத்துக், கந்தார்களிற்றுக் கழன்மன்னர் கலங்கச் சங்கம் வாய்வைத்தான்“ என்கிறாபடியே த்ரௌ பதியின் குழலை முடிப்பிக்கைக்காக அவர்பண்ணின வியாபாரமன்றோ வென்று தோழி சொல்ல; ஒருத்திக்காக இப்படி காரியஞ் செய்கிறவனென்று நாட்டாரைப் பகட்டுகைக்காகச் செய்தாரித்தனை; தம்மையே புகலாக நம்பியிருப்பாருடைய கூந்தலை விரிப்பிக்கு மவர்காண் என்று சொல்லுதல் இங்கு உள்ளுறை. ஆக இப்படிப்பட்ட வரையுருவின் மாகளிற்றை = திண்மையில் மலைபோன்று செருக்கில் ஆனைபோன்றிருக்கின்ற அவரை. (தோழீ!) அன்னவரை நான் என்ன பாடுபடுத்தப் போகிறேன் காணாய் தோழீ! ; நீ விலக்காம லிருக்கவேணும்; விலக்காதிருந்தாயாகில் அவர் படும்பாடுகளை யெல்லாம் காணலாமென்கை.

என்றன் பொன்னிலங்கு முலைக் குவட்டில் பூட்டிக்கொ்ணடு = என்கையில் ப்ரஹ்மாஸ்த்ரமிருக்க எனக்கு வெல்ல வொண்ணாத நிலமுண்டோ? எம்பெருமானாகிற அந்த மதயாகை என்னுடைய முலையாகிற ஸ்தம்பத்தோடே சேர்த்துக்கொண்டு இறுக்கிக் கட்டிவிடுவேன்; முகங்கொடுத்துப் பேசமாட்டேன், வெண்ணெய் திருடின கண்ணபிரானை யசோதை உரலிலே கட்டிப்போட்டு வைத்தாப்போலே, என்னைப் படுகொலையடித்த பெருமானை முலைக்குவட்டிலே கட்டிப் போடடு வைத்தாப்பேன்; இதுவாயிற்று அவனுக்கு நான் செய்யும் பெரிய சிக்ஷ. என்னிடத்திலே முகம் பெறாமையாலே அவன் ஓடிப்போகத் தேடுவேன்; (போகாமை முலைக்குவட்டில் பூட்டிக்கொண்டு) “குற்றமற்ற முலைதன்னைக் குமரன் கோலப்பணைத்தோளோடு, அற்றகுற்ற மவைதீர அணையவமுக்கிக் கட்டீரே“ என்கிறபடியே அவனாலும் நெகிழவொண்ணாதபடி கட்டிப் போட்டு வைப்பேன்.

அவன் வந்து முகங்காடடினால் நெஞ்சு மேல்விழாதிருக்க வேணும்; அவனை ஒரு சரக்காகவே நினையாமல் துரும்பாக நினைப்பேனாக வேணும்; நீ அவனுக்குப் புருஷகாரமாக நிற்காம லிருக்கவேணும்; இவ்வளவும் பெற்றேனாகில் என் எண்ணம் ஈடேறும் என்ற கருத்துப்பட, ‘வல்லேனாய்‘ என்கிறாள். (புலவி யெய்தி) அவனைப் பிரிந்து பட்ட வருத்தமெல்லாம் அவன் கண்முன்னே படக்கடவேனென்கிறாள். அன்றியே, அவனைப் பிரி்ந்து நாம் பட்டபாடெல்லாம் அவன்றான் என்முன்னே படும்படி பண்ணக்கடவே னென்கிறாள் என்னவுமாம். இப்பொருளில், எய்தி என்றது‘ ‘எய்த‘ என்றபடி: எச்சத்திரிபு.

என்னில் அங்கமெல்லாம் வந்து இன்பமெய்த = இப்போது ஸம்ச்லேஷிப்பதும் மறுபடியும் விச்லேஷிப்பதும் மீண்டும் ஸம்ச்லேஷிப்பதும் மீண்டும் விச்லேஷிப் துமாகி மேன்மேலும் வருத்தங்கட்டு இலக்காயிராதபடி அவன் கண் வட்டத்திலே முடிந்து பிழைக்கடவே னென்கை. கண் கை கால் முலை முதலிய ஸகல அவயவங்களும் முடியக் கடவன. முடிந்து போவதே பேரின்ப மெய்துதலாம் இங்கு. ஏழையாய்ப் பெரிய குடும்பியாயிருக்கு மவன் க்ஷாமகாலத்தில் குடும்பத்தினுடைய பசியும் தன்பசியும் பொறுக்கமாட்டாமையாலே குடும்பத்தோடு ஆற்றிலே விழுந்து முடிந்து மகிழக்கடவேனென்று நினைக்குமாபோலே இவளும் நினைக்கிறாளாயிற்று. அவன் வந்தவாறே இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டு ஸம்ச்லேஷிக்க வொருப்படுவேனென்று நினைக்க வேண்டா; எப்போதைக்கும் இதுவே துணிவு. நினைத்த மாத்திரத்திலே உருகிப்போவதே என் பிரக்ருதி காண்மின் என்கிறாள்.

இப்பாட்டில் எல்லை கடந்த ப்ரணயரோஷத்தை வெளியிடும் முகத்தால் தன்னுடைய ஆற்றாமையின் கனத்தை வெளியிட்டவாறு. இனிப் பெற்றல்லது தரிக்க வொண்ணாத படியான ‘முடிந்தவவா‘ என்கிற பரமபக்தி முதிர்ந்தமை சொன்னபடி.

 

English Translation

My Lord who destroyed the fortress of Lanka and killed the demon king.  Lord who strode the three worlds, Lord who steered the royal chariot and waged the Bharata war.  Is like a dark mountain, a huge elephant, O Cousin, I shall wait for him forever, thinking fondly of the day when I can lock him in the embrace of my paled breasts, and let my sore limbs rejoice.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top