(2062)
பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே
கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய் கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே?
பதவுரை
|
பள்ளி கொள்ளான் |
– |
உறங்குகின்றிலன்; |
|
என் துணை போது |
– |
ஒரு நொடிப்பொழுதும் |
|
என் குடங்கால் இருக்க கில்லாள் |
– |
என்மடியிலே பொருந்த மாட்டுகின்றிலன்; |
|
எம்பெருமான் |
– |
எம்பெருமானுடைய |
|
திரு அரங்கம் |
– |
ஸ்ரீரங்கக்ஷத்ரம் |
|
எங்கே என்னும் |
– |
எங்கிருக்கின்றது? என்கிறாள்; |
|
மணி வண்டு |
– |
அழகிய வண்டுகள் |
|
மட்டு விக்கி |
– |
(உட்கொண்ட) தேன்விக்கி ரீங்காரஞ்செய்யப்பெற்ற |
|
கூந்தல் |
– |
கூந்தலையுடையவளான |
|
மட மானை |
– |
அழகிய மான்போன்ற இப்பெண்பிள்ளையை |
|
இது செய்தார் தம்மை |
– |
இப்படிப்பட்ட நிலைமையடைவித்தவர் இன்னாரென்பதை, |
|
கட்டுவிச்சி |
– |
குறிசொல்லுகிறவளே! |
|
மெய்யே சொல் என்ன |
– |
உண்மையாகச் சொல்லுவாயாக, என்று நான் கேட்க, (அவள்) |
|
கடல் வண்ணர் இது செய்தார் (என்று) சொன்னாள் |
– |
‘கடல்போன்ற நிறத்தை யுடையரான பெருமாள் இந்த நிலைமையை உண்டு பண்ணினார்‘ என்று சொன்னாள்; |
|
நங்காய் |
– |
நங்கைமீர்களே!, |
|
ஸ(ரக்ஷகனான எம்பெருமானே இது செய்தானான பின்பு) |
||
|
காப்பார் ஆரே |
– |
இவ்வாகத்தைப் பரிஹரிக்க வல்லார் வேறுயாருளர்?. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- எம்பெருமானை யநுபவித்தல் பலவகைப் பட்டிருக்கும்; அவனுடைய திருநாமங்களைச் சொல்லி யநுபவித்தல், திருக்கல்யாண குணங்களைச் சொல்லியநுபவித்தல், வடிவழகை வருணித்து அநுபவித்தல், அவனுகந்தருளின திவ்யதேசங்களின் வளங்களைப் பேசியநுபவித்தல், அங்கே அபிமாநமுள்ள ஸ்ரீவைஷ்ணவர்களின் பெருமையைப் பேசி யநுபவித்தல்-என்றிப்படி பலவகைப்பட்டிருக்கும் பகவதநுபவம். இவ்வகைகளில் பரம விலக்ஷணமான மற்றொரு வகையுமுண்டு; அதாவது-ஆழ்வார் தரமான தன்மையை விட்டுப் பிராட்டிமாருடைய தன்மையை ஏறிட்டுக்கொண்டு வேற்றுவாயாலே பேசியநுபவித்தல். இப்படியநுபவிக்குந் திறத்தில், தாய்பாசுரம் தோழிபாசுரம் தலைமகள் பாசுரம் என்று மூன்று வகுப்புகளுண்டு. அப்போது ஆழ்வார்க்குப் பரகாலர் என்ற ஆண்மைப்பெயர் நீங்கி, ‘பரகாலநாயகி‘ என்று பெண்மைக்குப் பெயர் வழங்கப்பட்டுவரும். தாய் சொல்வது போலவும் தோழி சொல்வது போலவும் தலைமகள் சொல்வது போலவும் பாசுரங்கள் வெளிவந்தாலும் பாசுரம் பேசுகிறவர் ஆழ்வாரேயாவர். ஒரு ஆறானது பல வாய்க்கால்களாகப் பெருகினாலும் அவற்றுக்குப் பிரதானமான பெயர் ஒன்றேயாயிருக்குமாபோலே, இம்மூன்று நிலைமைகளாகச் சொல்மாலை வழிந்து புறப்பட்டாலும் “மன்னுமானமணி மாடமங்கைவேந்தன் மான வேற் பரகாலன் கலியன் சொன்ன“ என்று ஆழ்வார் பாசுரமாகவே தலைக்கட்டும்.
ஆழ்வார் தரமான தன்மையை விட்டிட்டு ஸ்த்ரீபாவனையை ஏறிட்டுக்கொள்ளுதல் ஏதுக்காக வென்னில்; ஆழ்வார் தரமாக ஏறிட்டுக் கொள்ளுகிறாரல்லர், அந்த அவஸ்தை தானே பரவசமாக வந்து சேருகின்றது. புருஷோத்தமனாகிய எம்பெருமானது பேராண்மைக்குமுன் உலகமடங்கப் பெண்தன்மையதாய் இருக்கையாலும், ஜீவாத்மாவுக்கு ஸ்வாதந்திரிய நாற்றமேயி்ன்றிப் பாரதந்திரியமே வடிவாயிருக்கையாலும் இவ்வகைகளுக்கேற்ப ஸ்த்ரீபாவநை வந்தேறியன்று என்றே கொள்ளலாம். தண்டகாரண்ட வாஸிகளான முனிவர் இராமபிரானது ஸௌந்தரியத்தில் ஈடுபட்டுப் பெண்மை விரும்பி மற்றொரு பிறப்பில் ஆயர் மங்கையராய்க் கண்ணனைக் கூடினர் என்ற ஐதீஹ்யமுண்டு. ஆழ்வார் அப்படியன்றியே அப்போதே பெண்மையை யடைந்து புருஷோத்தமனை அநுபவிக்கக் காதலிக்கின்றனர்.
ஆண், பெண் என்ற வியவஹாரங்கள் சிற்றின்பநுகர்ச்சிக்கன்றோ ஏற்பட்டவை; பேரின்பவநுபவத்திலே ஊன்றின ஆழ்வார்கள் பெண்மை யெய்துவதாகவும் கொங்கை முதலிய சொற்களையிட்டுப் பாசுரங்கள் கூறுவதாகவும் நிகழ்கிறவிது என்னோ? எனின்; விஷயாந்தரகாமம் என்றும் பகவத் விஷயகாமம் என்றும் காமம் இருவகைப்படும்; வேதாந்தங்களில் விதிக்கப்பட்ட பக்தியே ஆழ்வார்களுக்கு ச்ருங்காரமுறைமையில் பரிணமித்து நிற்கும். சிற்றின்பவநுபவத்திற்குக் கொங்கை முதலியன ஸாதநமாயிருப்பது போல, பகவத் விஷயாநுபவத்திற்குப் பரபக்திபரஜ்ஞாந பரமபக்திகள் இன்றியமையாதனவா யிருப்பதால் அவையே கொங்கை முதலிய சொற்களால் அருளிச் செயல்களிற் கூறப்படுகின்றன வென்றுகொள்க.
ச்ருங்காரரஸத்தின் ஸம்பந்தம் சிறிதுமின்றியே கேவலம் சுத்த பக்திரஸமாகவே பாசுரங்கள் அருளிச்செய்யக் கூடுமாயினும் ஆழ்வார்கள் ச்ருங்காரரஸத்தையுங் கலந்து பாசுரங்கள் பேசுவதற்குக் காரணம் யாதெனில்; ஆரோக்கியத்திற்குக் காரணமாகிய வேப்பிலை யுருண்டையை உட்கொள்ள இறாய்க்குமவர்களுக்கு வெல்லத்தை வெளியிற் பூசிக்கொடுத்துத் திண்பிப்பதுபோலச் சிற்றின்பம் கூறும்வகையாற் பேரின்பத்தைக் காட்டி நாட்டுகின்றனரென்ப.
பகவத் விஷயத்தில் அபிநிவேசம் மீதூர்ந் காலத்தில் தன்நிலைமாறிப் பெண் நிலைபெற்றுப் பேசுமிடத்தில், தாய்பாசுரமென்றும் தலைவிபாசுரமென்றும் தோழி பாசுரமென்றும் இப்படி வகுத்துக் கூறுவதற்கும் உட்கருத்து உண்டு;- தோழியாகப் பேசுவதற்குக் கருத்து: – நாயகனையும் நாயகியையும் இணக்கிச் சேர்க்குமவள் தோழியாவள். திருமந்திரத்தில் பிரணவத்தினால் எம்பெருமானோடு இவ்வாத்மாவுக்குச் சொல்லப்பட்ட அநந்யார்ஹசேஷத்வம் முதலிய ஸம்பந்தங்களை உணருகையே அப்பெருமானோடு இவ்வாத்மா சேருகைக்கு ஹேதுவாகையாலே அந்த ஸம்பந்தஞானமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தோழியென்பதாகக்கொள்க.
பெற்றுவளர்த்துப் பெண்பிள்ளை யௌவன பருவத்தில் நாயகனிடத்துள்ள அன்பு மிகுதியால் அவனிருப்பிடத்துக்குச் செல்லவேணுமென்று பதறுமளவில் படிகடந்து புறப்படுகை குலமரியாதைக்குப் பொருந்தாதென்று தடுப்பவள் உலகில் தாய் எனப்படுவள்; ஸித்தோபாளமான எம்பெருமானைப் பற்றினவர்கள் பேற்றை விளம்பித்துப் பெறுதலில் காரணமில்லாமையாலே அதனை விரைவில் பெறவேணுமென்கிற ஆவல் அதிகரிக்கப்பெற்று அதனால் படிகடந்து நடக்கவேண்டி வந்தவளவில் இது ப்ரபந்நர்குடிக் கட்டுப்பாட்டுக்குச் சேராததென்று விலக்கி ‘எம்பெருமான் தானே வந்து விஷயீகரிக்கக் கண்டிருக்கவேணும்‘ என்று சொல்லித் துடிப்பை அடக்கப்பார்க்கிற நம: பதத்திற் கூறப்பட்ட உபாய அத்ய வஸாயமாகிற ப்ரஜ்ஞாவஸ்த்தையைத் தாய் என்பதாக் கொள்க.
உறவினர் கூட்டக் கூடுகையன்றியே தானாகவே புணர்ந்து நாயகனுடைய மேம்பாட்டிலே ஈடுபட்டுக் குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் ‘அவனைக் கிட்டியல்லது நான் உயிர்வாழ்ந்திருக்கமாட்டேன்‘ என்னும் பதற்றத்தை உடையவளாயிருப்பவள் உலகில் மகள்; பிரணவத்தினாலும் நமஸ்ஸாலும் சேஷியென்றும் சரண்யனென்றும் உணரப்பட்ட எம்பெருமானுக்கு நாராயண பதத்தினாற் கூறப்பட்ட ஸ்வரூபம் ரூபம் குணம் விபூதி முதலியவற்றில் சேர்க்கையாலுள்ள பெருமையை அநுஸந்தித்து அதனாலே அவனைத் தாமதித்து அநுபவிக்க நிற்கமாட்டாமல் ‘அவனே உபாயம்‘ என்ற கோட்பாட்டை அதிக்கிரமித்து, கிட்டியநுபவித்தாலொழியத் தரிப்புற்றிருக்க வொண்ணாதபடி நடக்கிற ப்ரஜ்ஞாவஸ்த்தையை மகள் என்பதாகக் கொள்க.
இம்மூன்று அவஸ்தைகளுள் முதல் அவஸ்தை நடக்கும்படியைத் தோழிபாசுரத் தாலும், இரண்டாவது அவஸ்தை நடக்கும்படியைத் தாய் பாசுரத்தாலும், மூன்றாவது அவஸ்தை நடக்கும்படியை மகள் பாசுரத்தாலும் வெளியிடுவரென்றதாயிற்று.
இப்பாசுரந் தொடங்கிப் பத்துப் பாசுரங்கள் தாய்வார்த்தையாகச் செல்லுகின்றன. இவற்றில், ஆழ்வார்க்கு நாயகியவஸ்தை ஒருபுறத்திலும் தாயின் அவஸ்தை மற்றொரு புறத்திலும் நடக்கிறபடியாலே, எம்பெருமானை அநுபவிப்பதில் ஆழ்வார்ககு விரைவு உண்மானமையும் ‘நாம் பதறக்கூடாது‘ என்கிற அத்யவஸாயமும் மற்றொருபுறத்தில் உண்டானமையும் விளங்கும். தன்ஸ்வரூபத்தை நோக்குமளவில் அத்யவஸாயம் உண்டாகும்; அவனுடைய வைலக்ஷண்யத்தை நோக்குமளவில் பதற்றம் உண்டாகும்.
(பட்டுடுக்குமித்யாதி) பரகால திருத்தாயார் தன்மகளின் நிலைமைகளைக்கண்டு கலங்கி ‘இவளுக்கு இப்படிப்பட்ட அவஸ்தை உண்டானமைக்கு என்ன காரணம்?‘ என்று குறிசொல்லுங் குறத்தியாகிய கட்டுவிச்சிழ யொருத்தியை வினவ, அவள் ‘எம்பெருமான் படுத்துகிறபாடு இது‘ என்று சொல்ல, அதை வினவவந்த உறவினர்பாடே சொல்லுகிறாளாய்ச் சொல்லுகிறது இப்பாட்டு.
பட்டு உடுக்கும் – இப்பெண்பிள்ளையானவள் புடைவையை உடுக்கத் தொடங்கினாள்; ஏதுக்காக வென்னில், நல்லவுடையை உடுத்தோமாகில் இவ்வுடையழகை இழக்கலாகாதென்று நாயகன் பதறி ஓடிவருவானென்று கருதி உடுக்கத் தொடங்கினாள்; உடைவாய்த்தவாறே அவன் வருவானென்று மகிழ்ந்திருந்தவள் அவ்வளவிலும் அவன் வரக் காணாமையாலே (அயர்த்து இரங்கும்) மோஹிக்கலானாள். அயர்த்தல்-மோஹித்தல்; இரங்குதல்-வாய்பிதற்றுதல். இரங்குதல் முன்னமும் அயர்த்தல் அதற்குப்பின்பும் நிகழவேண்டியிருக்க முறைமாறும்படியாயிற்று விஷய வைலக்ஷண்யம்.
“பட்டுடுக்குமயர்த்திரங்கும்“ என்பதற்கு வேறொரு வகையாகவும் பொருள்கூறுவர்; அதாவது, பட்டு உடுக்கும்-இப்போதுதான் அரையில் துணியுடுக்கும் பருவமாயிருக்கச் செய்தேயும், அயர்த்து இரங்கும்=நாயகனைப் பிரிந்த நிலைமையில் மூச்சு அடங்கும்படியாக வுள்ளதாயிற்று இவளுக்கு நிகழ்கிற அவஸ்தை. மோஹித்திருக்கும் நிலைமையில் ஞானம் ஈடையாடாமையாலே வருத்தமில்லை; அதில் ஞானம் குடிபுகுந்து அரற்றுதலாய் செல்லும் நிலைமையில் வருத்தம் மிகுகையாலே அயர்வுக்குப் பின்பு இரக்கம் கூறப்பட்டது.
வாய்பிதற்றி வருந்திக்கிடந்த பெண்பிள்ளையை ஏதேனும் ஒருவிதத்தாலே தரிப்பிக்க வேண்டித் திருத்தாயார், பண்டு ஊணுமுறக்கமின்றியே இவள் பார்வையோடே போதுபோக்கிக் கிடந்தாளாகையாலே அதைக்கொணர்ந்து தந்தோமாகில் ஒருவாறு ஆறியிருப்பளோவென்று பார்த்துப் பாவையை (மரப்பாச்சியை)க் கொண்டுவந்து காட்டினாள்; அது கண்ணுக்கு விஷம்போலே தோற்றினபடியாலே சீறியுதைத்துத்தள்ளினாள். பாவையையொழியப் போதுபோக்காதிருந்தவளன்றோ இப்போது பாவையை அநாதரிக்கிறாள். பகவத்விஷயத்திலுண்டான ஸங்கம் இதரவிஷயங்களிற் பற்றறுத்தபடி.
பனிநெடுங்கண்ணீர் ததும்பப் பள்ளிகொள்ளாள்=இவளுடைய கண்களின் பரப்பு உள்ளவளவும் நீர் வெள்ளங் கோத்ததாயிற்று. குளிர்ந்த ஆனந்தக் கண்ணீர் பெருக வேண்டுங் கண்களிலே அந்தோ! சோகக் கண்ணீர் பெருகும்படியாயிற்றே! ‘நெடுங்கண்‘ என்றது மஹானான எம்பெருமானையும் ஒரு மூலையிலே அடக்கவல்லதான கண் என்றவாறு. ஸ்வாபதேசத்தில் கண் என்று ஞானத்தைச் சொன்னபடி. எம்பெருமானைச் சேரப் பெறாத வருத்தத்தினால் ஞானக்கலக்கமுண்டானமை கூறியவாறு.
‘படுக்கையிலே சாய்ந்து உறங்கப் புகுந்தால் கண்ணீர்த்ததும்புதல் மாறும்‘ என்று சொன்னாலும் பள்ளிகொள்கின்றாளில்லை; “தொல்லைமாலைக் கண்ணாரக் கண்டு கழிவதோர் காதலுற்றார்க்குமுண்டோ கண்கள்துஞ்சுதல்“ என்றபடியே கண்ணுறங்க ப்ரஸக்தியுண்டோ? கூடிக் களிக்குங்கால் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பெற்று உறங்கப் பெறாள். பிரிந்து படுங்கால் சோகக் கண்ணநீராலே உறங்கப்பெறாள். ஸம்ச்லேஷதசையில் அவன் உறங்கவொட்டான்; விச்லேஷதசையில் விரஹவேதனை உறங்க வொட்டாது.
தன்வயிற்றிற் பிறந்தவளைப்பற்றிச் சொல்லுமிவ்விடத்து ‘உறங்காள்‘ என்று சொல்லலாமாயிருக்க, “பள்ளிகொள்ளாள்“ என்று கௌரவச் சொல்லாலே சொன்னது, வயிற்றிற் பிறந்தவரேயாகிலும் பகவத்ஸம்பந்தம் பெற்றவர்கள் உத்தேச்யதைதோற்றக் கௌரவித்துச் சொல்லக்கடவர்களென்கிற சாஸ்த்ரார்த்தை வெளிப்படுத்தும். “கள்ளவிழ்சோலைக் கணபுரம் கைதொழுதும் பிள்ளையைப் பிள்ளையென் றெண்ணப் பெறுவரே“ “விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண்காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக்கேட்டு, வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருகவென்று மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே.“ என்ற பாசுரங்களுள் குறிக்கொள்ளத்தக்கன.
எட்டுணைப்போது என்குடங்காலிருக்ககில்லாள்=பெண்பிள்ளை உறங்கக காணாமையாலே, முன்பு தன்குடங்காலிலே உறங்கிப் போகக் கண்ட அநுபவத்தாலே இப்போதும் அதில் உறங்கக் கூடுமோ வென்றுபார்த்துத் தன்குடங்காலிலே இருத்தப்பார்த்தாள்; அது நெருப்போடே அணைந்தாற்போல இருக்கையாலே துணுக்கென்றெழுந்தாள்.
இடைவிடாமல் என்குடங்காலிலேயேயிருந்து உறங்கிப் போதுபோக்கிக் கொண்டிருந்த விவளுக்கு இப்போது ஒரு நொடிப்பொழுதும் அதிற் பொருந்தாதபடியாவதே! என வருந்திக் கூறுகிறபடி. ‘எட்டுணை‘ ‘எட்டணை‘ என்பன பாடபேதங்கள். (எள்Xதுணை= எட்டுணை.) எள் X தணை, எட்டணை.) எள் எவ்வளவு சிறிதோ அவ்வளவு சிறுபொழுதும் – க்ஷணகாலமும் என்றபடி.
இனி இவள் வாய்வெருவும் பாசுரமேதென்னில், எம்பெருமான் திருவரங்க மெங்கே யென்னும் = என்னை இப்பாடுபடுத்தினவன் என்னை இங்ஙனே துடிக்கவிட்டு ஒருவிசாரமின்றியே கண்ணுறங்குமிடம் எங்கேஎங்கே யென்று பிதற்றா நின்றாள். பாவையைப் பேண் வொண்ணாதபடியும் தாய்மடியிலே பொருந்தவொண்ணாதபடியும் என்னைத் தன் பக்கலிலே ஈடுபடுத்திக் கொண்டவனுயையுமிடம் எங்கே யென்கின்றாள்.
காதலனுடைய திருநாமத்தைச் சொல்லாமல் ‘எம்பெருமான்‘ என்றது ஏனென்னில்; உற்றாருறவினர் கூட்டக் கூடினதன்றியே இயற்கைப் புணர்ச்சியாகையாலே ஆண்மை பெண்மைகளே ஹேதுவாகக் கலந்த கலவியாமத்தனை; கூட்டுவாருண்டாகிக் கூடிலன்றோ திருநாமமறியலாவது; ஆகையாலே எம்பெருமான் என்கிறாள். ஆனால், அவனூர் திருவரங்கமென்பது மாத்திரம் எங்ஙனே அறியப்பட்ட தென்னில்; ஸம்ச்லேஷகாலத்தில் நாயகன் விச்லேஷத்தை நினைத்து ‘பிரியேன்‘ பிரியில் தரியேன்‘ என்று பிரிவை ப்ரஸங்கிக்கிறவளவிலே இவள் நம் ஊரைச் சொல்லிக் கொண்டாவது தரித்திருக்கவேணு மென்று ‘நம்மூர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று சொல்லுகையாலே ஊரின்பெயர் தெரியலாயிற்றென்ப.
தன்மகளுக்கு நேர்ந்த நிலைமை பகவத் விஷயத்தில் அவகாஹித்ததனாலுண்டாய தென்று தனக்குத் தெரிந்திருந்தாலும் இதனை உற்றாருறவினர்க்குத் தானே வெளியிடுதலிற் காட்டிலும் கட்டுவிச்சி முகமாக வெளியிடுதல் நன்றென்று கருதிய திருத்தாய் ஒரு கட்டுவிச்சியைத் தேடிநின்றாள்;அவ்வளவிலே,
“கொங்குங் குடந்தையுங் கோட்டியூறும் பேரும்
எங்குந் திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
கண்டியூராங்கம் மெய்யம் கச்சிபேர் மல்லையென்று
மண்டியே திருவேனை யாரிங்கழைத்த்தூஉ,
விண்ணகரம் வெஃகா விரிதிரைநீர் வேங்கடமும்
மண்ணகரம் மாமட வேளுக்கை தென்குடந்தை
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்துதூஉ,
நாகத்தணைக் குடந்தை வெஃகாத் திருவெவ்வுள்
நாகத்தணை யரங்கம் பேரன்பில் நாவாயும்
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்த்தூஉ,
வேங்கடமும் விண்ணவரும் வெஃகாவு மஃகாத
பூங்கிடங்கின் நீள்கோவல் பொன்னகரும் பூதூரும்
எங்குந்திரிந்து இன்றே மீள்வேனை யாரிங்கழைத்ததூஉ!!!“
என்று தெருவேறக் கூவிக்கொண்டு தானாகவேவந்து சேர்ந்தாள், அவளை நோக்கித் தாயானவள் “மட்டுவிக்கி மணிவண்டு முரலுங்கூந்தல் மடமானை யிருசெய்தார்தம்மை மெய்யே கட்டுவிச்சி! சொல்“ என்றாள்.
குறிசொல்லுகிற குறத்திக்குக் கட்டுவிச்சி யென்று பெயர் திருவாய்மொழியில் “இது காண்மினன்னைமீர் இக்கட்டுவிச்சி சொற் கொண்டு“ என்றும், சிறிய திருமடலில் “அது கேட்டுக் காரார் குழற்கொண்டைக் கட்டுவிச்சிகட்டேறி“ என்றும் வருவன காண்க. ஐயங்கார் திருவரங்கக் கலம்பதத்தில் –“காலமுணர்ந்த குறத்தி நான் கருதினை யொன்றது சொல்லுவேன், பாலகனுச்சியி லெண்ணெய்வார் பழகியதோர் கலை கொண்டுவா, கோலமலர்க்குழன் மங்கை! நின்கொங்கை முகக்குறி நன்றுகாண ஞாலமுவந்திட நாளையே நண்ணுவை நம் பெருமாளையே‘ என்று கட்டுவிச்சியின் பாசுரமாகப் பாடியுள்ள செய்யுளும் குறிக்கொள்ளத்தகும்.
(மட்டுவிக்கி இத்யாதி) மதுவைக் கழுத்தளவும் பருகி ரீங்காரஞ் செய்கின்ற வண்டு கள் படிந்த கூந்தலையுடையவளான இப்பெண்பிள்ளையை, இதுசெய்தார் தம்மை=குழலிலணிந்த பூவைச் சருகாக்கி வண்டுகளைப் பட்டினியடிக்கையாகிற இத்தொழில் செய்த பெரியவரை, கட்டுவிச்சி! மெய்யே சொல் என்ன=‘வாராய் குறத்தியே! நெஞ்சில் தோன்றின தொன்றைச் சொல்லிவிடக்கூடாது; உள்ளபடியே சொல்லவேணும்‘ என்று நான் கேட்க, (கடல் வண்ணர் இது செய்தார் என்று சொன்னாள்) கடலின் நிறம் போன்ற நிறமுடையரான பெரிய பெருமாள் செய்த தெய்வ நன்னோய்காண் இது! என்றாள், கடல் கொண்டு போன வஸ்துவை நம்மால் மீட்கப்போமோ? என்றாள்.
காப்பார் ஆரே? = வேலியே பயிரையழித்தால் நோக்குவாருண்டோ? ஆக இப்பாசுரத்தால், எம்பெருமானுடைய நிர்ஹேதுகவிஷயீகாரம் ஆழ்வார்க்கு வாய்த்தபடியும், இது நித்யகைங்கரியத்திற்கு உறுப்பாகமல் * ஆற்றங்கரை வாழ் மரம்போல் அஞ்சும்படியாக இவ்விபூதியிலே இருக்க வைக்கையாலே நோயாகச் சொல்லப்படுகிற தென்பதும், இது தான் ஆத்மஸ்வரூபாநு பந்தியாகையாலே ஆத்மா உள்ளவரைக்கும் நிலைத்திருக்கக் கூடிய தாய் அபரிஹார்யமான தென்றும், இவ்வுண்மையை ஜ்ஞாநாதிகரான பாகவதர்கள் அறிவார்களென்றும் சொல்லிற்றாயிற்று.
நங்காய்! = தாய் தன்து தோழியை நோக்கிச் சொல்லுகிறபடி.
English Translation
O First Lord! O Golden Lord, sentinel of the seven worlds! Other than exclaiming, “What happened to you? Where are you?”, this despicable lowly devotee-self knows nothing. O Lord of the South, Lord of the North, Lord of East and west! O Rutted elephant! O First Lord of the celestials! You are the radiant Lord of Tirumulikkalam, where later generations will worship you forever.
