(2045)

(2045)

காவியை வென்ற கண்ணார் கலவியே கருதி, நாளும்

பாவியே னாக வெண்ணி அதனுள்ளே பழுத்தொ ழிந்தேன்,

தூவிசேர் அன்னம் மன்னும் சூழ்புனல் குடந்தை யானை,

பாவியென் பாவி யாது பாவியே னாயி னேனே.

 

பதவுரை

காவியை

கருநெய்தல்மலரை

வென்ற

தோற்பித்த

கண்ணார்

கண்களையுடையரான மாதர்களினது

கலவியே

கலவியையே

கருதி

நினைத்துக் கொண்டு

நாளும்

அநாதிகாலமாக

பாவியேன் ஆக எண்ணி

மஹாபாபியாகும்படி மநோரதித்து

அதனுள்ளே

அந்தப் பாவப் படுகுழியிலேயே

பழுத்தொழிந்தேன்

பரிபக்குவனாய் விட்டேன;

தூவி சேர்

(அழகிய) சிறகையுடைய

அன்னம் மன்னும்

அன்னப்பறவைகள் பொருந்திவாழ்கிற

சூழ் புனல்

சுற்றிலும் ஜலஸம்ருத்தியை யுடைத்தான

குடந்தை யானை

திருக்குடந்தைக்குத் தலைவனான எம்பெருமானை

பாவியேன்

பாவியான நான்

பாவியாது

சிந்தியாமல்

பாவியேன் ஆயினேன்

(மேலும்) மஹாபாபியானேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் “கரும்பினைக் கண்டுகொண்டு என் கண்ணினை களிக்கு மாறே“ என்று ஆனந்த பரவசராய்ப் பேசினவர், ஐயோ! பழுதே பலபகலும் போயினவே யென்று கழிவிரக்கங்கொண்டு, கீழ்நாள்களெல்லாம் வாளாவிருந்தொழிந்து பாவியானேனெயென்று முடிமேல் மோதிக்கொள்ளுகிறார்.

“கரியவாகிப் புடைபரந்து மிளிர்ந்து செவ்வரியோடி, நீண்டவப்பெரியவாய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே!“ என்று ஈடுபடவேண்டிய திருக்கண்களை விட்டொழிந்து, பிளிச்சைக் கண்ணிகளையெல்லாம் காவியைவென்ற கண்ணாராக ப்ரமித்து அவர்களோடு கூடிவாழ்வதே பரமபுருஷார்த்தமென்று கருதி, ஸுக்ருதலேசமும் பண்ணாத மஹாபாபியாவதற்கே வழிதேடி, (தசரதசக்ரவர்த்தி வெண்கொற்றக்குடை நிழலிலே பழுத்தாற்போலவும், நம்மாழ்வார் “உனது பாலேபோற் சீரில் பழுத்தொழி்ந்தேன்“ என்று பகவத் குணங்களிலேயே பழுத்தாற்போலவும்) அந்தப் பாவங்களிலேயே பழுத்தொழிந்தேன் நான் பரமபோக்யமான திருக்குடந்தைமா நகரிலே திருக்கண் வளர்ந்தருள்கின்ற ஆராவமுதாழ் வாரைச் சிறிதாகிலும் நெஞ்சில் நினைத்திருந்தேனாகில் பாவங்கள் தொலையப் பெற்றிருப்பேன். அது செய்யாமையன்றோ படுபாவியானேனென்றாராயிற்று.

தூவிசேரன்ன மன்னுங் குடந்தை = ஞானம் அனுட்டானம் ஆகிய இரண்டு சிறகுகளமைந்த ‘ஹம்ஸர்‘ என்னும்படியான மஹான்கள் வாழுமிடமென்று ஸ்வாதேசார்த்தங் கூறுவர்.

 

English Translation

Alas, the sinner that I am! Day after day, I pursued the embrace of lotus-eyed dames, and wasted my life-energies.  Alas, not thinking of the Lord of Tirukkudandai surrounded by pure water with swan pairs, I fell into deep misery and become a sinner.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top