(2038)
இம்மையை மறுமை தன்னை எமக்குவீ டாகி நின்ற,
மெய்ம்மையை விரிந் த சோலை வியந்திரு வரங்கம் மேய,
செம்மையைக் கருமை தன்னைத் திருமலை ஒருமை யானை,
தன்மையை நினைவா ரென்றன் தலைமிசை மன்னு வாரே.
பதவுரை
|
எமக்கு |
– |
நமக்கு |
|
இம்மையை |
– |
இவ்வுலகத்து இன்பத்தைத் தருமவனும் |
|
மறுமை தன்னை |
– |
பரலோகத்து இன்பத்தைத் தருமவனும் |
|
விரிந்த சோலை |
– |
பரந்தசோலைகளையுடையதாய் |
|
வியன் |
– |
ஆச்சரியமான |
|
திரு அரங்கம் |
– |
ஸ்ரீரங்கத்திலே |
|
மேய |
– |
நித்யவாஸம் பண்ணுமவனும் |
|
செம்மையை கருமை தன்னை திருமலை |
– |
(யுகபேதத்தாலே) செந்நிறத்தையும் கருநிறத்தையுங் கொண்டுள்ளவனும் |
|
திருமலை |
– |
திருவேங்கடமலையிலே நின்று கொண்டு |
|
ஒருமையானை |
– |
(மண்ணோர்க்கும் விண்ணோர்க்கும்) ஒருமைப்பட்டிருப்பவனுமான எம்பெருமானுடைய |
|
தன்மையை |
– |
சீலத்தை |
|
நினைவார் |
– |
நினைக்கவல்லவர்கள் |
|
என் தன் |
– |
என்னுடைய |
|
தலை மிசை |
– |
தலையிலே |
|
மன்னுவார் |
– |
பொருந்தத்தக்கவர்கள் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப்பாட்டில் ”அமரர் சென்னிப்பூவினை” என்ற ஆழ்வாரை நோக்கி எம்பெருமான் ‘ஆழ்வீர்! என் குறைப்படுகிறீர்? உம்முடைய தலைக்கும் நாம் அணியாக வீற்றிருப்போம், தலையைக்காட்டும்‘ என்ன; என் தலைக்கு நீ வேண்டா; உன் சீலத்தைச் சிந்தைசெய்யுந் தொண்டர்களே என் தலைமிசை மன்னுதற்கு உரியார் என்கிறார் போலும்.
இம்மையை மறுமைதன்னை – இஹலோகஸுகம், பரலோகஸுகம் என்ற இருவகை யின்பத்தையும் அளிப்பவனென்றபடி. எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபகுண விபூதிகளைப் பற்றின ஞானவிகாஸம் பெற்றுக் களிப்பதே ஆழ்வார் திருவுள்ளத்தினால் இம்மையின்பமாகும்; திருவனந்தாழ்வானைப்போலே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்த்தைகளிலும் அந்தரங்க கைங்கரியம் பண்ணப்பெற்றுக் களிப்பதே மறுமையின்பமாகும்; ஆக, இஹலோகத்திலே தன்னைப் பற்றின ஞான விகாஸத்தையுண்டாக்கி இன்பம் பயந்தும், பரலோகத்திலே நித்ய கைங்கரியத்திலே மூட்டி இன்பம் பயந்தும் அடியார்களை வாழ்விப்பவன் எம்பெருமான் என்றதாயிற்று.
எமக்கு வீடாகநின்ற மெய்ம்மையை- இங்கு வீடு என்றது இலக்கணையால் மோக்ஷாபாயத்தைச் சொன்னபடி. கீழ்ச்சொன்ன பிராப்யங்களுக்கு ப்ராபகனாயிருப்பவனென்கை. அவ்வுபாயம் ஸுலபமானவிடத்தைப் பேசுகிறார் வியன் திருவரங்கமேய என்று.
செம்மையைக் கருமைதன்னை – எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு நிறத்தைக்கொள்வன்; கிருதயுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால்போன்ற நிறத்தைக் கொள்வன்; த்ரேதாயுகத்திலே சிவந்த நிறத்தைக்கொள்வன், த்வாபரயுகத்திலே பசுமை நிறத்தைக்கொள்பவன்; கலியுகத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவாரில்லாமையாலே இயற்கையான நீல நிறத்தோடிருப்பவன். (இது ”பாலினீர்மை செம்பொனீர்மை” என்ற திருச்சந்தவிருத்தப் பாசுரத்திலும் ”நிகழ்ச்தாய் பால் பொன் பசுப்புக்கார்வண்ணம் நான்கும்” என்ற நான்முகன் திருவந்தாதிப் பாசுரத்திலும் திருமழிசைப்பிரானாலும் அருளிச் செய்யப்பட்டுள்ளது.) இங்கு ”செம்மையைக் கருமை தன்னை” என்று இரண்டு யுகங்களின் நிறத்தைச் சொன்னது மற்றவர்க்கும் உபலக்ஷணமென்க.
திருமலையொருமையானை = ”தானோங்கி நிற்கின்றான் தண்ணருவி வேங்கடமே வானோர்க்குத் தண்ணார் வேங்கட விண்ணோர் வெற்பனே” என்றும் சொல்லுகிறபடியே திருமலையிலே நின்று நித்யஸூரிகளுக்கும் நித்ய ஸம்ஸாரிகளுக்கும் ஒக்க முகங்கொடுக்கும் அவன் என்றவாறு. ஒருமையான் – ஒருமைப்பட்டிருப்பவன், பொதுவாயிருப்பவன், திருமலையானது நித்ய விபூதிக்கும் லீலாவிபூதிக்கும் நடுநிலை என்பதாகத் திருவுள்ளம். இங்குள்ளார் சென்று பரத்வகுணத்தை அநுபவிப்பர்கள்; அங்குள்ளார் வந்து சீலகுணத்தை அநுபவிப்பர்கள்; ஆக இருபாடர்க்கும் வைப்பாயிருப்னென்க.
தன்மையை நினைவார் = கீழும் இரண்டாம் வேற்றுமையாய் இங்கும் இரண்டாம் வேற்றுமையாயிருத்தால் எங்ஙனே அந்வயிக்குமென்னில்; கீழிலவற்றை உருபுமயக்கமாகக் கொள்க; திருமலையொருமையானுடைய தன்மையை என்றவாறு. எம்பெருமானடைய தன்மையாவது, அடியவர்களிட்ட வழக்காயிருக்குந் தன்மையென்க. அதனை அநுஸந்தித்து ஈடுபடுமவர்கள் என்தலைமேலார் என்றாராயிற்று. ….. ….. ….
English Translation
The Lord of Arangam is the salvation for this world and the next. He is a dark form in Arangam amid fertile groves. He is the dark mountain Lord of venkatam, Those who wroship him are my masters.
