(2030)

(2030)

நந்தா நரகத் தழுந்தா வகை,நாளும் எந்தாய்

தொண்டரா னவர்க்கின் னருள்செய்வாய்,

சந்தோகா தலைவனே தாமரைக் கண்ணா,

அந்தோ அடியேற் கருளாயுன் னருளே.

 

பதவுரை

நந்தா நரகத்து

அழயாத்தொரு நரகமாகிற பிறவித்துயரத்திலே

அழுந்தா வகை

மூழ்கிக்கிடக்க வேண்டாதபடி

நாளும்

எப்பொழுதும்

தொண்டர் ஆனவர்க்கு

உனது அடியவரானவர்களுக்கு

இன் அருள் செய்வாய்

இனிமையான கருணையைச் செய்யுமியல்வுடையவனே!

எந்தாய்

எமது தந்தையே!

சந்தோகா

வேதங்களையெல்லாம் அறிந்தவனே!

தலைவனெ

மேம்பட்டவனெ!

தாமரை கண்ணா

செந்தாமரைமலர்போன்ற திருக்கண்களை யுடையவனே!

அந்தோ

ஐயோ!

அடியெற்கு

அடியேனுக்கு

உன் அருள்

உனது கிருபையை

அருளாய்

செய்தருள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- செய்த பாபங்களுக்குத் தக்கபலனாகிய கொடுந்துன்பத்தை அநுபவித்த வளவிலே நரகத்தைவிட்டு நீங்குதல் கூடுமாகையாலே அந்த யமனுடைய நரகத்தக்கு அழிவுண்டு; பிறவித்துயர்க்குக் காரணமான அவித்யை முதலியவற்றிற்கு ஒழிவில்லாமையால் அப்பிறவித் துயரம் மாறாதே அநுபவிக்கப்படுவதாதல் பற்றி ‘நந்தா நரகம்!’ எனப்பட்டது. நரகயாதனையோ டொத்த கொடுந்துன்பமென்றபடி. விவேகிகள் ஸம்ஸாரத்தையே நரகமென்றபெயரால் வழங்குவர். இதற்கு அழிவு செய்வது எம்பெருமானருளன்றி வேறில்லையாதலால் “அழுந்தாவகை நாளும் இன்னருள் செய்வாய்” என்கிறார். அத்திருவருளைப் பெற்றுத் துயா;தீர்ந்து வீடு பெறவேண்டுவார்க்கு அப்பெருமான் திருவடிகளில் வழிபாடு செய்தல் அவசியமென்பது தோன்ற ‘தொண்டரானவர்க்கு’ எனப்பட்டது.

கண்ணோட்ட முடையனாய்க் கருணை மழைபொழிய மலரவிழித்த திருக்கண்களி வீடுபாட்டினால் ‘தாமரைக்கண்ணா!’ என்கிறார். அந்தோ! என்ற இரக்கக் குறிப்ப முறையிடுதற்கண் வந்தது. (எந்தாய்! அந்தோ அடியேற்கு அருளாய்) தந்தை அரசாண்டு இன்புறாநிற்க, மைந்தன் தாரித்திரனாயிருந்தாற்போல, நீ எவ்வகையாலுங் குறைவில்லாதிருக்க யான் இங்ஙனம் எளிமைப்படுவதே! என்று சிந்தித்து இரங்குகின்றன ரென்க. செய்வாய் என்பதில், வகரவிடை நிலை-எதிர்கால முணர்த்தாது தன்மை யுணர்த்திற்று.

சந்தோகன்-வடசொல். சந்தஸ்-வேதம்; அதனால் கானம் பண்ணப்படுபவன் சந்தோகன். இனி, சந்தஸ்ஸையடைந்தவ னெனினுமாம். ஆடைதலென்னும் பொருளுடைய சொற்களுக்கெல்லாம் அறிதலென்னும் பொருளுமுண்டென்பது வடநூல் வழக்கு: இனி, எல்லா வேதங்களாலும் எடுத்து உரைக்கப்படுபவன் என்றுங் கருத்துக்கொள்ளலாம். சுந்தோகமென்னும் ஸரம வேதத்தின் பகுதியை யறிந்தவனே யென்றும் சாந்தோக்யோபநிஸத்துக்கு விஸயமானவனே யென்றும் பொருள் கொள்ளவுமிடமுண்டு.

நாளும் – நாள்தோறும்; எந்நாளும். உம்மை – தொறுப்பொருளது.

 

English Translation

My Lord! Sweet grace of devotees! O Lord of the chandogya upanishad! Master! Lotus-eyed Krishna! Pray show me a way to escape the eternal damnation of Hell.  Oh! Alas!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top