(1822)
வணங்கலில் அரக்கன் செருக்களத் தவிய மணிமுடி ஒருபதும் புரள
அணங்கெழுந் தவன்றன் கவந்தம்நின் றாட அமர்ச்செய்த அடிகள்தம் கோயில்
பிணங்கலில் நெடுவேய் நுதிமுகம் கிழிப்பப் பிரசம்வந் திழிதர பெருந்தேன்
மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை வணங்குதும் வாமட நெஞ்சே.
பதவுரை
|
மட நெஞ்சே!- |
||
|
வணங்கல் இல் அரக்கன் |
– |
வணக்கமற்ற இராவணன் |
|
செரு களத்து |
– |
போர்க்களத்தில் |
|
அவிய |
– |
முடியும்படியாகவும் |
|
மணி முடி ஒருபதும் புளர |
– |
(அவனது) மணியணிந்த முடிகள் பத்தும் தரையில் புரளும்படியாகவும் |
|
அவன்தன் கவந்தம் |
– |
அவனுடைய கபந்தம் |
|
அணங்கு எழுந்து |
– |
தெய்வாவேசங் கொண்டது பொல |
|
நின்று ஆட |
– |
நின்று ஆடும்படியாகவும் |
|
அமர் செய்த |
– |
யுத்தம் பண்ணின |
|
அடிகள் தம் கோயில் |
||
|
பிணங்களில் |
– |
ஒன்றுக்கொன்று பிணங்கியிருப்பதோடு கூடின |
|
நெடு வேய் நுதி |
– |
ஓங்கின மூங்கிலின் நுனி |
|
முகம் கிழிப்ப |
– |
(மலையுச்சியிலுள்ள தேன் கூட்டின்) வாயைக்கிழிக்க |
|
பிரசம் வந்து இழிதா |
– |
(அதிலுள்ள) தேனீக்கள் சிதற |
|
பெரு தேன் |
– |
அதிகமான தேனினுடைய |
|
மணம் |
– |
பரிமளம் |
|
கமழ் |
– |
வீசப்பெற்ற |
|
சாரல் |
– |
பக்கங்களையுடைத்தான |
|
மாலிருஞ்சோலை, வணங்குதும் வா-. |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- த்விதா பஜ்யேயமப்யேவம் ந நமேயம் து கஸயசித்“ (இரு பிளவாகப் பிளந்து இரு பக்கங்களிலும் இரு துண்டமாக விழுந்தாலும் விழுவனேயன்றி ஒருவர் காலில் தலைசாய விழமாட்டேன்) என்று வணங்காமுடி மன்னனாய் இறுமாந்திருந்த இராவணன் அமர்க்களத்திலே மடிய, தேவதைகளுடைய வரத்தாலே திண்ணயவையாய் மணிமயங்களான அவனது முடிகள் பத்தும் புற்று மறிந்தாற்போலப் புவிமேல் சிந்திப் புரள அவனது கபந்தமானது தைவாவேசங்கொண்டது போல நின்றாட, ஸங்கல்பத்தாலன்றிக்கே படையெடுத்து வந்து வீரவாசி தோற்றப் பூசல் பொருத பெருமானுறையுமிடமான திருமாலிருஞ்சோலையை வணங்குவோம் வா மடநெஞ்சே! என்கிறார்.
ஒன்றோடொன்று பிணைந்து மிக்க ஒக்கத்தையுடைத்தான மூங்கில் மலை முழஞ்சிலே வைத்த தேன் கூட்டளவும் வளர்ந்து தனது நுனியாலே அதனுடைய வாயை கிழிக்க, அங்குள்ள தேனீக்கள் சிதற, அதனால் எங்கும் தேன் மணநாறப் பெற்ற சாரலையுடையதாம் இத்திருமலை.
அணங்கு – தெய்வம், அணங்கெழுதல் -தெய்வாவேசங் கொள்ளுதல். கவந்தம் மென்னும் வடசொல் விகாரம், தலைநீங்கிய உடற்குறை பிரசம் -தேனுக்கும் தேனீக்கும் பெயர்.
English Translation
O Frail Heart! The Lord took on the defiant Rakshasa in a fierce battle and felled his ten crowned heads, while his torso twitched like one possessed. He resides in the temple of Malirumsolai amid dense groves of tall Bamboo, whose tips brush against beehives, making fragrant honey flow everywhere. Come, let us offer worship there
