(1638)
பெரும்பு றக்கட லையட லேற்றினைப் பெண்ணை யாணை,எண்ணில் முனிவர்க்கருள்
தருந்த வத்தைமுத் தின்திரள் கோவையைப் பத்த ராவியை நித்திலத் தொத்தினை,
அரும்பி னையல ரையடி யேன்மனத் தாசை யை அமு தம்பொதி யின்சுவைக்
கரும்பி னைக்,கனி யைச்சென்று நாடிக் கண்ண மங்கையுள் கண்டுகொண் டேனே.
பதவுரை
|
பெரு புறம் கடலை |
– |
விசாலமான இடத்தை யுடைத்தான கடல் போலே அளவிட முடியாத ஸ்வரூப ஸ்வபாவங்களை யுடையவனும் |
|
அடல் ஏற்றினை |
– |
செருக்குடைய ரிஷபம் போலே மேனாணிப் புள்ளவனும் |
|
பெண்ணை |
– |
ஸ்திரீகளைப்போல் பாரதந்திரியமே வடிவாயிருப்பவனும் |
|
ஆணை |
– |
ஸ்வதந்தரனாயிருப்பவனும் |
|
எண் இல் முனிவர்க்கு |
– |
எண்ணிறந்தயோகிகளுக்கு |
|
அருள் தரும் தவத்தை |
– |
அருள் தந்திடும் தவப்பயனாயுள்ளவனும் |
|
முத்தின் திரள் கோவையை |
– |
முத்துத்திரளினாலாகிய மாலை போன்றவனும் |
|
பத்தர் ஆவியை |
– |
பக்தர்களுக்கு உயிர் நிலையாயிருப்பவனும் |
|
நித்திலம் தொத்தினை |
– |
முத்துக்குவியல் போன்றிருப்பவனும் |
|
அரும்பினை |
– |
அரும்புபோல குமாரத் தன்மையுள்ளவனும் |
|
அலரை |
– |
மலர்ந்த புஷ்பம்போலே யௌவன பருவ முள்ளவனும் |
|
அடியேன் மனத்து ஆசையை |
– |
அடியேனுடைய மனத்திலே புதிது புதிதாகத் தோன்றுகிற ஆசைக்கு இலக்கானவனும் |
|
அமுதம் பொதி இன் சுவை கரும்பினை |
– |
அமுதத்தை நீராகப் பாய்ச்சி அதனால் வளர்ந்த இனிய சுவையை யுடைய கரும்புபோல் மதுரமானவனும் |
|
கனியை |
– |
கனிபோல் அப்போதே அநுபவிக்கத்தக்க போக்யனுமான எம்பெருமானை |
|
சென்று நாடி |
– |
தேடித்திரிந்து |
|
கண்ண மங்கையுள் |
– |
திருக்கண்ண மங்கையிலே |
|
கண்டு கொண்டேன் |
– |
ஸேவிக்கப்பெற்றேன். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- அடியேன் தேடித்திரிந்து கண்ணமங்கையிற் கண்டுகொண்ட எம்பெருமானுடைய படிகளைச் சொல்லுகிறேன், கேண்மினென்கிறார்.
பெரும்புறக்கடலை = ‘புறம்’ என்று இடத்துக்குப் பெயர்; எல்லையில்லாத இடத்தை யுடைத்தான கடல்போன்றவன் : பல்லுயிர்கட்கும் உறைவிடமாயிருந்து கொண்டு கம்பீரத்தன்மையோடு கூடியிருக்குங் கடல்போன்றவன். இனி, புறம் என்பதற்கு ‘வெளிப்பட்டது’ என்கிற பொருளும் உண்டாதலால், பூமியைச் சூழ்ந்திருக்குங் கடல் எல்லாவற்றிற்காட்டிலும் விலக்ஷணமான கடலாயிருப்பவன் என்று முரைப்ப. கடல்போன்றவன் என்னாதே கடல் தானகவே சொன்னது உவமையாகுபெயர். இத்திருமொழி முழுதும் பெரும்பாலும் இங்ஙனேயாம்.
அடலேற்றினை = செருக்குக் கொண்ட விருஷபம் போலே ஒருவராலும் அடக்கவொண்ணாதவ னென்கை. பெண்ணை = கீழே அடலேறு போன்றிருப்பவனென்றது எதிரம்பு கோப்பவர்கட்கேயன்றி அன்புடையார் திறத்திலே வந்தால் ஸ்த்ரீகளைப் போலே பாரதந்திரியமே வடிவாயிருப்பவ னென்றவாறு.
ஆணை = அரசன் அந்தப்புரத்திலே மனைவிக்கு விதேயனாயிருப்பவனாயினும் சீரிய சிங்கா சனத்திலே வந்து வீற்றிருந்தால் ஆண்புலியாயிருப்பனன்றோ; அதுபோல.
திருவாய்மொழியில் “ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்” என்னா நிற்க, இங்கே ‘பெண்ணை ஆணை’ என்றல் பொருந்துமோ எனின்; பொருந்தும்; ஆணல்லன் பெண்ணல்லன் என்பது திவ்யாத்மஸ்வரூபத்தின் உண்மை நிலையைப் பற்றினது; இங்குச் சொல்வது குணத்தைப்பற்றியது : ஸ்திரீலிங்க புல்லிங்கங்களை யுடையவனென்கிறதன்று.
எண்ணில் முனிவர்க்கு அருள்தருந் தவத்தை = ‘முனிவர்’ என்றது தன்னைச் சிந்திப்பவர்கள் என்றபடி; அவர்கள் விஷயத்திலே கிருபை பண்ணுமவன்; அவர்களின் தவப்பயனெ வடிவெடுத்தது போன்றவன். (முத்தின் திரள்கோவையை.) முத்துஸரம்போலே கண்ணாற்கண்டபோதே சிரமமெல்லாம் ஆறும்படியிருக்கிறவன். (பத்தர் ஆவியை.) தன் பக்கலில் பக்தியுள்ளவர்கட்குத் தன்னை விட்டு ஜீவிக்கவொண்ணாதவடி யிருப்பவன். திருநின்றவூர்ப் பெருமாளுடைய திருநாமமும் திருக்கண்ணமங்கைப் பெருமாளுடைய திருநாமமும் பத்தவராவி யென்பதாம். (நித்திலத் தொத்தினை.) ஒருவனுக்கு ஏராளமான முத்துக்குவியல் இருந்தால் ‘நமக்கு நிதியுண்டு’ என்று அவன் விசாரமற்றிருக்கலாமன்றொ; அதுபோல எம்பெருமானும் அன்பர்கட்கு.
(அரும்பினை அலரை.) இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம் வருமானு :– “இரண்டு அவஸ்தையும் ஒருகாலே சூழ்த்துக் கொடுக்கலாம்படி யிருக்கிறவனை; யுவாகுமார : என்கிறபடியே ஏககாலத்திலே இரண்டவஸ்தையும் சொல்லலாயிருக்கை” என்றருளிச் செய்யப்பட்டுள்ளது. இவற்றால், யௌவநமும் கௌமாரமும் எம்பெருமானிடத்தில் குடி கொண்டிருப்பதாகப் பொருள் கூறுவர். அரும்பு என்றது கௌமார நிலைமையைச் சொன்னபடி; அலர் என்றது யௌவந நிலைமையைச் சொன்னபடி என்றும் கூறுவர். இங்கு உதாஹரிக்கப்பட்ட ‘யுவாகுமார:’ என்றப்ரமாணம் ருக்வேதத்தில் (அஷ்ட. 2-8-25.) அத்யயநம் பண்ணப்பட்டு வரும் வாக்யம். வைதிகபதபாடத்தில் ‘யுவா அகுமார:’ என்று பதவிபாகமுள்ளது. ஸ்ரீதேசிகன் பரமபத ஸோபாநத்தில் ஒன்பதாவது பருவத்தின் தொடக்கத்தில் “அகுமார யுவாவாய்” என்றும் பாதுகாஸஹஸ்ரத்தில் என்றும் அருளிச்செய்யக் காண்கின்றோம். இவற்றையெல்லாம் மடியொற்றி ‘யுவா அகுமார:’ என்றே கொள்ளத்தகும்; நம்பிள்ளை முதலானவர்களுடைய திருவுள்ளமும் இங்ஙனொத்ததே. இங்ஙனே பதவிபாகமாயின், ‘கௌமாரமின்றியே யௌவன மாத்ரமே யுள்ளவன்’ என்று பொருளாகுமே; நம்பிள்ளை முதலானாருடைய திருவுள்ளம் அப்படி யில்லையேயென்று சங்கிக்க வேண்டா; அகுமார:’ என்பதற்கு ஈஷத்குமார : (ஸ்வல்பம் கௌமாரமுள்ளவன்) என்று பொருள்; கௌமாரம் கழியத்தக்கதாய் யௌவனம் வந்து குடிபுகத்தக்கதான நடுப் பருவத்தைச் சொன்னவாறு.
(அடியேன் மனத்தாசையை.) அடியேன் இடைவிடாது நித்யாநுபவனம் பண்ணா நிற்கச் செய்தேயும் இதற்கு முன்பு அநுபவித்தறியாமல் அப்போது கண்டதொரு வஸ்துவிற் போலே ஆசைப்பெருக்குக்கு விஷயமாயிருப்பவனென்கை.
(அமுதம்பொதி இன்சுவைக் கரும்பினை) அமுதத்தையே தண்ணீராகப் பாய்ச்சி வளர்க்கப்பட்டு அதனால் சுவை மிக்கதான கரும்புபோல் ஆற்ற இனியன். (கனியை) அப்போதே நுகரலாம்படி பக்குவ பலமாயிருப்பவன். ஆக இப்படிப்பட்ட பெருமானைத் திருக்கண்ணமங்கையில் ஸேவிக்கப் பெற்றேனென்றாராயிற்று.
English Translation
The mighty ocean, the powerful bull, the male, the female, the penance of the austere Rishis, the heap of heap of pearls, the soul of devotees, the string of pearls, the spring, the flower, the love of my heart, the spray of nectar, the swee sugarcane, the fruit, -I sought and foudn Him in Kannamangai.
