(152)
வெண்ணெ யளைந்த குணுங்கும் விளையாடு புழுதியும் கொண்டு
திண்ணெனெ இவ்விரா உன்னைத் தேய்த்துக் கிடக்கநான் ஒட்டேன்
எண்ணெய்ப் புளிப்பழம் கொண்டுஇங்கு எத்தனை போதும் இருந்தேன்
நண்ண லரிய பிரானே நாரணா நீராட வாராய்
பதவுரை
| வெண்ணெய் அளைந்த |
– |
வெண்ணெயளைந்ததனாலான |
| குணுங்கும் |
– |
மொச்சை நாற்றத்தையும் |
| விளையாடு புழுதியும் |
– |
விளையாடுவதினாற் படிந்த புழுதியையும் |
| கொண்டு |
– |
(உடம்பிற்) கொண்டிருந்து, (அதனால்) |
| இஇரா |
– |
இன்றை இரவில் |
| தேய்த்து கிடக்க |
– |
(உடம்பைப் படுக்கையிலே) தேய்த்துக் கொண்டு படுத்திருக்கும்படி (விட) |
| உன்னை |
– |
உன்னை |
| திண்ணென |
– |
நிச்சயமாக |
| நான ஒட்டேன் |
– |
நான் ஸம்மதிக்க மாட்டேன், |
| எண்ணெய் |
– |
(தேய்த்துக் கொள்வதற்கு வேண்டிய) எண்ணெயையும |
| புளி பழம் |
– |
புளிப்பழத்தையும் |
| கொண்டு |
– |
ஸித்தமாக வைத்துக்கொண்டு |
| இங்கு |
– |
இங்கே |
| எத்தனை போதும் |
– |
எவ்வளவுகாலமாக (வெகுகாலமாக) |
| இருந்தேன் |
– |
(உன் வரவை எதிர்பார்த்து) இராகின்றேன், |
| கண்ணல் அரிய பிரானே |
– |
(ஒருவராலும ஸ்வயத்நித்தால்) கிட்டக்கூடாத ஸ்வாமியே’ |
| நாரணா |
– |
நாராயணனே’ |
| நீராட |
– |
நீராடுவதற்கு |
| வாராய் |
– |
வரவேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கண்ணபிரான் * தாரார்தடந்தோள்கள் உள்ளளவும் கைநீட்டி வெண்ணெயளைந்ததனால் உடம்பெல்லாம் அவ் வெண்ணெய்பட்டு மொச்சைநாற்றம் வீசும்.. அதனோடு விளையாடப் போனால் அதன்மேல் புழுதியும் படியும, இவ்விரண்டும் உடம்பிலிருந்தால் தினவுதின்னும்; அதற்காகக் கண்ணன் உடம்பைப் படுக்கையிலே தேய்ப்பானாம், இப்படி எல்லாம் வருந்துவதைப் பொறுக்கமாட்டாமல் நீராடவழைக்கின்றனளென்க, விளையாடுபுழுதி – வினைத்தொகை, விளையாடின புழுதியென விரிக்க, ‘உண்ட இளைப்பு’ என்றவிடத்துப் போல, விளையாடியதனால் தோன்றிய புழுதியென்க. புளிப்பழம் – எண்ணெயைப் போக்குவதாய்ப் புளிப்புச் சுவையுடையதாய் இருக்கின்ற ஒருவகைப் பழத்தைக் குறிக்குமென்பர், சீக்காயைக் காட்டு மென்பாருமுளர். எள் + நெய் = எண்ணெய்.
English Translation
You have putrid butter and the dirt of the playfield all over you; tonight I will definitely not let you go to sleep scrabbling yourself. How long have I waited for you with oil and soap nut powder! O Narayana, hard-to-get Lord, come for your bath.
